தஞ்சை: தஞ்சை அருகே சாலையோர பள்ளத்தில் தனியார் பஸ் தலைகுப்புற கவிழ்ந்ததில் ஒருவர் பலியானார். 2 பெண் குழந்தைகள் உள்பட 22 பேர் காயமடைந்தனர். தஞ்சை புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று தனியார் பஸ் கும்பகோணம் புறப்பட்டது. தஞ்சை அருகே வயலூர் என்ற இடத்தில் சென்றபோது சாலையோரம் இருந்த பள்ளத்தில் திடீரென பஸ் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த தஞ்சை அருகே மானாங்கோரை சேர்ந்த சண்முகசுந்தரம் (44) சம்பவ இடத்திலேயே இறந்தார். 2 பெண் குழந்தைகள் உட்பட 24 பேர் காயமடைந்தனர். பஸ் உள்ளே இடிபாடுகளில் சிக்கியவர்களை அங்கிருந்த பொதுமக்கள் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தும் முன்புற படிக்கட்டுகள் வழியாகவும் மீட்டனர். பின்னர் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
டூவீலர் மீது லாரி மோதி 3 பேர் பலி: சிவகங்கை மாவட்டம், இளையான்குடி சாலை தாகியார் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் இலக்கிய நவீன்(19), ஈஸ்வரன்(18), மகேஸ்குமார்(15). இவர்கள் 3 பேரும் அதே பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தனர். நேற்று மாலை 3 பேரும், திருப்புவனம் அருகே ஒரு விசேஷ நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு ஒரே டூவீலரில் திரும்பி கொண்டிருந்தனர். நல்லாகுளம் அருகே எதிரே வந்த லாரி, டூவீலர் மீது திடீரென மோதியது. இதில் பலத்த காயமடைந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இது குறித்து பூவந்தி போலீசார், விசாரிக்கின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி