புதுச்சேரி: புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கு திமுக, சுயேட்சை எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. எதிர்க்கட்சிகள் வரிசையில் என்ஆர் காங்கிரஸ், அதிமுக இருந்த நிலையில் பாஜவை சேர்ந்த 3 பேர் ஓட்டுபோடும் அதிகாரத்துடன் நியமன எம்எல்ஏக்களாக சட்டசபைக்குள் நுழைந்தனர். அசோக் ஆனந்த் எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டு தட்டாஞ்சாவடி தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே கடந்த ஓராண்டாக பாஜக தேசிய தலைமை புதுவை அரசியலில் தீவிர கவனம் செலுத்தியது. ஆட்சி மாற்றம் குறித்த கோஷத்தை பாஜக, என்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முன்வைத்தன. இதற்கிடையே சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் 20ம்தேதி ஆளுங்கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் விஜயவேணி, தீப்பாய்ந்தான் ஆகியோர் பரபரப்பு புகாரை அளித்தனர். அதில், தங்களை அரசியல் நிலைப்பாட்டில் இருந்து மாறும்படி என்ஆர் காங்கிரஸ் மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் உள்ளிட்ட சிலர் அடிக்கடி ெதால்லை கொடுப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதுதொடர்பாக முதல்வர், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய சபாநாயகர், புதுச்சேரி ஆளுங்கட்சி எம்எல்ஏக்களிடம் குதிரைபேரம் நடந்திருப்பதை நேற்று உறுதிபடுத்தினார்.
இதுதொடர்பான எம்எல்ஏக்களின் புகாரை ஆய்வுக்குட்படுத்தி இருப்பதாகவும், தவறு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டால் புகாரில் சிக்கியுள்ள எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சட்டத்தில் வழிவகை உள்ளதா? என்பது தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.இந்த நிலையில் புகாரில் சிக்கியுள்ள என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயபால், அதிமுக எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் ஆகிய 2 பேருக்கும் இவ்விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப சட்டசபை செயலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சபாநாயகர் வைத்திலிங்கம் உத்தரவுக்கிணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்த நோட்டீஸ் தொடர்பாக 2 எம்எல்ஏக்கள் அளிக்கும் விளக்கத்தை பொறுத்தே சபாநாயகரின் நடவடிக்கை அவர்கள் மீது பாயுமா? என்பது தெரியவரும் என்று ஆளுங்கட்சி தரப்பு தெரிவிக்கின்றன. இதற்கிடையே ஆளும் கட்சி எம்எல்ஏக்களிடம் பேரம் பேசவில்லையென எதிர்கட்சி எம்எல்ஏக்கள் இருவரும் மறுத்துள்ளனர். இவ்விவகாரம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி