ஊட்டி: ஊட்டி ரயில் நிலையத்தில் 110வது நீலகிரி மலை ரயில் தினம் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கடந்த 1899 ஜூன் 15 முதல் (119 ஆண்டுகளுக்கு முன்பு) மேட்டுப்பாளையம் - குன்னூர் இடைேய மலை ரயில் இயக்கப்பட்டது. ஒன்பது ஆண்டுகள் கழித்து குன்னூரில் இருந்து ஊட்டி அருகே பெர்ன்ஹில் வரை இயக்கப்பட்டது. தொடர்ந்து 1909 அக்டோபர் 15 முதல் ஊட்டி ரயில் நிலையம் வரை மலை ரயில் சேவை நீட்டிக்கப்பட்டது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15ம் தேதி என்.எம்.ஆர்., என அழைக்கப்படும் நீலகிரி மலை ரயில் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை 46 கி.மீ., தூரம் உள்ள இப்பாதையில் 208 வளைவுகளும், 250 பாலங்களும், 16 சுரங்க பாதைகளும் உள்ளன. கடந்த 2005ம் ஆண்டு நீலகிரி மலை ரயிலை பாரம்பரிய சின்னமாக யுனஸ்கோ அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே மலைரயில் ரத அறக்கட்டளை சார்பில் 110வது நீலகிரி மலை ரயில் தின விழா நேற்று ஊட்டி ரயில் நிலையத்தில் நடந்தது. கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டு கேக் வெட்டினார். முன்னதாக மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரயிலில் வந்த சுற்றுலா பயணிகளுக்கு மலர்கள் கொடுத்தும், இனிப்புகள் வழங்கியும் வரவேற்கப்பட்டது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி