சென்னை: தமிழ்நாடு அனைத்து முறை அனுபவ மருத்துவர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ராசு முருகேசன் சென்னையில் நிருபர்களை சந்தித்து கூறியதாவது: பாரம்பரிய முறையிலான அனுபவ மருத்துவர்கள் தமிழகத்தில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் உள்ளோம். நாங்கள் பரம்பரை பரம்பரையாக சித்த வைத்தியம், ஆயுர்வேதம், யுனானி, யோகா, இயற்கை மருத்துவம் உள்ளிட்ட முறைகளில் சிகிச்சை அளித்து வருகிறோம். சிகிச்சைக்கு, ரூ.10 முதல் ரூ.30 வரை மட்டுமே கட்டணம் வசூலித்து வருகிறோம். இந்த மருத்துவ முறைகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. தமிழக அரசு இதுவரை எங்களை அங்கிகரிக்கவில்லை.
டெங்கு உள்ளிட்ட கொடிய நோய்களுக்கு தேவையான மருந்துகளை எங்களுடைய ஆலோசனையின் பேரிலேயே தமிழக அரசு நோயாளிகளை சாப்பிட சொல்கிறது. ஆனால், கல்வித்தகுதி என்ற ஒன்றை மட்டுமே காரணம் காட்டி, அரசு எங்களை புறக்கணித்து வருகிறது. அனுபவ மருத்துவத்தில் இதுவரை ஒருவர் கூட பாதிப்பு ஏற்பட்டதில்லை. பலர் பயனடைந்துள்ளனர். எனவே, அனுபவ மருத்துவர்களை அந்தந்த பகுதிகளில் உள்ள மாவட்ட கலெக்டரின் பரிந்துரையின்படி, அனுபவ சான்று வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக அமைச்சரை 10 முதல் 15 முறை சந்தித்து மனு அளித்துள்ளோம். கடந்த ஆண்டு, பாரம்பரிய, அனுபவ மருத்துவர்களுக்கான நல வாரியம் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்தது. இவ்வாறு, அரசு எங்களுக்கு வழங்கிய பல சட்ட வாய்ப்புகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!