×

உங்க வீட்டு பிள்ளையா நெனச்சு மன்னிச்சுடுங்க...: ஆர்சிபி ரசிகர்களுக்கு கோஹ்லி மெசேஜ்

பெங்களூரு: ஐபிஎல் டி20 சீசன் 11 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மோசமான செயல்பாட்டுக்காக கேப்டன் விராட் கோஹ்லி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் அணி விளையாடிய 14 போட்டியில் 6ல் மட்டுமே வென்று 12 புள்ளிகளுடன் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறத் தவறியது. 8 அணிகளில் 6ம் இடத்துடன் தொடரிலிருந்து வெளியேறியது. இதுதொடர்பாக, அந்த அணியின் கேப்டனான விராட் கோஹ்லி நேற்று டிவிட்டரில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இந்த சீசனில் எங்களின் செயல்பாடு பெருமை கொள்ளும் வகையில் இல்லை. நாங்கள் விளையாடிய விதத்தை நினைத்து மிகவும் வேதனைப்படுகிறோம்.

ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ரசிகர்களாகிய உங்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாமல் போனதற்காக ஆழ்ந்த மன்னிப்பை கோருகிறோம்.
அதே நேரத்தில், தோல்வியும் வாழ்க்கையின் ஒரு அங்கம் என்பதை புரிந்துள்ளோம். எப்போதுமே நாம் விரும்புவது மட்டுமே கிடைத்து விடுவதில்லை. இப்போது செய்த தவறின் மூலம்  பாடம் கற்றுள்ளோம். அடுத்த சீசனில் எப்படி விளையாட வேண்டுமென்பதை அறிந்துள்ளோம். கடின பயிற்சியுடன் அடுத்த சீசனில் வலுவான அணியாக நிச்சயம் சிறப்பாக விளையாடுவோம். இவ்வாறு கூறியுள்ளார்.

கவுன்டியிலிருந்து காயத்தால் விலகல்
ஐபிஎல் போட்டியைத் தொடர்ந்து, அடுத்த மாதம் இங்கிலாந்தில் நடக்கும் கவுன்டி போட்டியில் சர்ரே அணிக்காக விளையாட கோஹ்லி ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில், ஐபிஎல் போட்டியில் கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் கவுன்டி போட்டியில் விளையாட மாட்டார் என பிசிசிஐ நேற்று அறிவித்துள்ளது. கோஹ்லிக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை அடுத்த மாதம் 15ம் தேதி முதல் தொடங்க உள்ளது. ஜூலையில் இங்கிலாந்து தொடருக்குள் அவர் முழு உடல் தகுதி பெற்று விடுவார் என பிசிசிஐ நம்பிக்கை தெரிவித்துள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED அக்சர் 66, பன்ட் 88*, ஸ்டப்ஸ் 26* கேப்பிடல்ஸ் 224 ரன் குவிப்பு