×

75வது படத்தில் நடிக்கும் லிசி ஆண்டனி

ராம் நடித்து இயக்கிய ‘தங்க மீன்கள்’ என்ற படத்தில் அறிமுகமான லிசி ஆண்டனி, பிறகு ‘தரமணி’, ‘பேரன்பு’, ‘பரியேறும் பெருமாள்’, ‘ப்ளூ ஸ்டார்’, ‘குயிலி’, ‘கட்டா குஸ்தி 1’, ‘கட்டா குஸ்தி 2’ உள்பட பல படங்களில், மறக்க முடியாத குணச்சித்திர வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார். தற்போது இயக்குனரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பில் 6 இயக்குனர்கள் இணைந்துள்ள படத்தின் மூலம் தனது 75வது படத்தை நெருங்கிய அவர் கூறுகையில், ‘எந்தவொரு சினிமா பின்புலமும் இல்லாமல் நடிக்க வந்தேன். தமிழில் மட்டுமே 75 படங்களை முடித்துவிட்டேன். ஷிப்பிங் துறையில் மாதம் பல லட்ச ரூபாய் சம்பாதித்து வந்த நான் திடீரென்று நடிக்க வந்தபோது, பலர் என்னை பயமுறுத்தினர். எனினும், தொடர்ந்து தன்னம்பிக்கையுடன் நடித்தேன்.

‘கட்டா குஸ்தி’ படத்தின் 2 பாகங்களும் என்னை அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கி விட்டது. பா.ரஞ்சித் இயக்கும் ‘வேட்டுவம்’ என்ற படத்தில் சோபிதா துலிபாலாவின் அம்மாவாக நடிக்கிறேன். ‘லஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படம் இன்று திரைக்கு வந்துள்ளது. இதில் வெற்றிக்கு அம்மாவாக நடித்துள்ளேன். தொடர்ந்து வித்தியாசமான வில்லியாகவும், மாறுபட்ட இரட்டை வேடங்களிலும் நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். எதிர்காலத்தில் திரைப்படம் இயக்கும் எண்ணம் இருக்கிறது. ‘குயிலி’ படத்தை போல், ‘கார்கியின் தாய்’ என்ற படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறேன்’ என்றார்.

Tags : Lizzy Antony ,Ram ,Pradeep Ranganathan ,
× RELATED சினி மினி நியூஸ்