சென்னை: திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் கவனிக்கப்பட்ட ‘காமராஜ்’, ‘வெல்கம் பேக் காந்தி’ ஆகிய படங்களை தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ், கடந்த வருடம் ‘திருக்குறள்’ என்ற படத்தை தயாரித்து வெளியிட்டது. இதை ஏ.ஜே.பாலகிருஷ்ணன் இயக்கினார். விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்ற ‘திருக்குறள்’ படம், இணையதளத்தில் பல லட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, ‘திருக்குறள்’ படத்தில் இடம்பெறாத மேலும் பல கருத்துகளை வலியுறுத்தி, அப்படத்தின் 2வது பாகம் தயாராகிறது.
ஆங்கிலத்தில் ‘Once Upon a Time in Hindustan’ என்ற பெயரில் உருவாகிறது. ‘திருக்குறள்’ முதல் பாகத்தில் வள்ளுவராக நடித்த கலைச்சோழன், வாசுகியாக நடித்த தனலட்சுமி ஆகியோர், 2வது பாகத்திலும் நடிக்கின்றனர். விஐடி வேந்தரும், தமிழியக்கம் தலைவருமான ஜி.விசுவநாதன் வழங்க, ரமணா கம்யூனிகேஷன்ஸ் தயாரிக்கிறது. டி.பி.ராஜேந்திரன் இணைந்து தயாரிக்க, எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்கிறார்.
ஏ.ஜே.பாலகிருஷ்ணன் கூறுகையில், ‘ஜி.யு.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பிறகே உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது. 2,000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் ரோம், கிரேக்கம் போன்ற மேற்குலக நாடுகளுடனும் மற்றும் சைனா, இந்தோனேசியா போன்ற கிழக்காசிய நாடுகளுடனும் வணிக தொடர்பு கொண்டிருந்தனர். வி.ஜி.சந்தோஷம் ‘கிளாப்’ போர்டு அடிக்க, டி.பி.ராஜேந்திரன் கேமராவை இயக்கி படப்பிடிப்பை தொடங்கி வைத்தனர்’ என்றார்.
