
சண்டிகர்: இந்தியில் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற படம், ‘துரந்தர்’. இப்படத்தின் தயாரிப்பு வடிவமைப்பாளரான மும்பையை சேர்ந்த சைனி எஸ்.ஜோரே என்பவர் மீது, புதுடெல்லியை சேர்ந்த பெண் ஒருவர், செக்டர் 17 காவல் நிலையத்தில் கடந்த ஏப்ரல் 20ம் தேதி ஒரு புகார் அளித்தார். அதில், ‘நான் கல்லூரியில் படித்தபோது, எனது பயோடேட்டாவை ‘துரந்தர்’ படக்குழுவினருக்கு அனுப்பி வைத்தேன். இதன்மூலம் 2025 செப்டம்பர் 2ம் தேதி உதவி கலை இயக்குனராக பணியில் சேர்ந்தேன்.
அப்போது சைனி எஸ்.ஜோரே, தன்னை எனது வழிகாட்டி என்று அறிமுகம் செய்துகொண்டதால் அவரை முழுமையாக நம்பினேன். கடந்த 2025 செப்டம்பர் 10ம் தேதி தொழில்முறை விவாதம் என்று சொல்லி, என்னை செக்டர் 17ல் இருந்த தாஜ் ஓட்டலுக்கு வரவழைத்தார். அங்கு சென்றவுடன், யாரும் இல்லாத அறையில் என்னை கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்தார். அதில் போதை மருந்து கலந்து இருந்ததால் எனது உடல்நிலை மோசமடைந்தது. நான் வெளியேற முயன்றபோது, என்னை வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தி, தவறான முறையில் தொட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டார்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

