பெங்களூரு: கடந்த ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த ‘காந்தாரா: சாப்டர் 1’ என்ற படத்தின் மூலம் பான் இந்தியா நடிகையாக மாறியவர், கன்னட நடிகை ருக்மிணி வசந்த். இப்படத்துக்கு பிறகு ரசிகர்கள் அவரை ‘நேஷனல் கிரஷ்’ என்று வர்ணிக்கின்றனர். தற்போது யஷ் நடித்துள்ள ‘டாக்ஸிக்: எ பைரி டேல் ஃபார் குரோன்-அப்ஸ்’ என்ற பான்வேர்ல்ட் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள அவர், பிரசாந்த் நீல் இயக்கும் ‘டிராகன்’ என்ற பான் இந்தியா படத்தில் ஜூனியர் என்டிஆர் ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் ருக்மிணி வசந்த் அளித்த பேட்டியில், ‘நடிகர்களை பொறுத்தவரையில் பன்ச் வசனங்கள் பேசியும், ஆக்ஷன் காட்சிகளில் நடித்தும் சமாளித்து விடலாம். ஆனால், மாடல்களுக்கு அதுபோன்ற சலுகைகள் கிடையாது. ஒரு வார்த்தை கூட பேசாமல் தங்களது உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த வேண்டும். அதுதான் மாடல் அழகிகளுக்கு முன்னால் இருக்கும் மிகப்பெரிய சவால். இன்றளவும் திரையுலகில் நான் தொடர்ந்து கற்றுக்கொண்டு வரும் விஷயம் அதுதான்’ என்றார்.
