சென்னை: ‘விலங்கு’ வெப்சீரிஸ் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ். தற்போது அவரது நடிப்பில் வெளியாகும் வெப் சீரிஸ் ‘வாரண்ட்’. மே 22-ம் தேதி ஜீ5 ஓடிடியில் வெளியாகும் இந்த தொடரின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அமைதியாக இருக்கும் காவலரின் மாற்றம் தான் இந்த தொடர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜிவி பிரகாஷ், க்ரித்தி கர்பந்தா நடித்த `ப்ரூஸ் லீ’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரசாந்த் பாண்டியராஜ். இப்படம் பெரிய வரவேற்பை பெறவில்லை என்றாலும் இவர் அடுத்தாக விமல், இனியா, பாலசரவணன் நடிப்பில் இயக்கிய `விலங்கு’ வெப்சீரிஸ் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதன் பிறகு சூரி, ஐஸ்வர்யா லெட்சுமி நடித்த `மாமன்’ படத்தை இயக்கி அதுவும் பெரிய ஹிட்டானது.
இயக்குநராக பணியாற்றி வந்த பிரசாந்த் பாண்டியராஜ் தற்போது ஹீரோவாக களம் இறங்குகிறார். `வாரண்ட்’ என்ற சீரிஸில் நாயகனாக நடித்துள்ளார் பிரசாந்த். பாலாஜி சக்திவேல், காளிவெங்கட், அருள்தாஸ், நம்ரத்தா எனப் பலரும் இந்த தொடரில் நடித்துள்ளனர். இதன் கதை திரைக்கதையை பிரஷாந்த் உடன் இணைந்து எழுதியுள்ள விக்னேஷ் நடராஜன் இத்தொடரை இயக்கியும் உள்ளார். சிவன் பிக்சர்ஸ், எஸ் ஸ்டுடியோஸ் தயாரிக்கின்றன. சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.
