சென்னை: இந்திய அளவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் ருக்மிணி வசந்த். தற்போது யஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’ என்ற பான் வேர்ல்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் 19ம் தேதி திரைக்கு வருகிறது. சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இயங்கி வரும் ருக்மிணி வசந்த் நேற்று கோபமாக வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. நடிகைகள் சந்தித்து வரும் பிரச்னை குறித்த அவரது பதிவில் தெரிவித்திருப்பதாவது: பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் நடிகைகளை தவறான கோணத்தில் உடல் அங்கங்களுக்கு ஜூம் செய்து சில போட்டோ மற்றும் வீடியோக்கள் எடுக்கப்பட்டு தொடர்ந்து இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. ஒரு சில தனிப்பட்ட நபர்களால் இதுபோன்று பகிரப்படுவது அவமரியாதையான செயல். அவற்றை துளியும் ஏற்றுக்கொள்ள முடியாது. சினிமா மற்றும் கலைக்காக மட்டுமே நாங்கள் இங்கு இருக்கிறோம்.
இதுபோன்று வேண்டுமென்றே செய்யப்படும் ஜூம்-இன்கள் மற்றும் பொருத்தமற்ற கோணங்களில் போட்டோ, வீடியோ எடுப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். அவை கண்ணியத்தை மீறும் செயலாகும். இதுபோன்ற செயல்களை இயல்பாக எடுத்துக்கொள்ளவோ, பொறுத்து கொள்ளவோ முடியாது. போட்டோ/ வீடியோ எடுப்பவர்கள் தொழில்முறையாகவும், அடிப்படை மரியாதையுடனும், கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இதை அனுபவித்த ஒவ்வொரு பெண்களுக்கும் நாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்போம். இவ்வாறு ருக்மிணி வசந்த் தெரிவித்துள்ளார்.
