
ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் இயக்கிய ‘மின்சார கனவு’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘வெண்ணிலவே… வெண்ணிலவே’ என்ற பாடல் உருவான விதம் குறித்து இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மனம் நெகிழ்ந்து பேசியிருக்கிறார். கடந்த 1997ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி திரைக்கு வந்த இப்படத்தில் அரவிந்த்சாமி, பிரபுதேவா, கஜோல் நடித்திருந்தனர். இதில் இடம்பெற்ற ‘வெண்ணிலவே… வெண்ணிலவே’ என்ற பாடல் ஹிட்டாகி, இன்றுவரை ரசிகர்கள் விரும்பி கேட்கும் பாடலாக இருக்கிறது. இப்பாடல் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘ஒரே பாடலுக்குள் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டியிருந்ததால், அது எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது.
இப்பாடலுக்கு இசை அமைக்கும் நேரத்தில் நான் நோன்பில் இருந்தேன். அப்போதுதான் இப்பாடலுக்கான டியூன் எனக்கு கிடைத்தது. அதை வாசித்தபோது நான் அழுதேன். இதுதான் நாம் எதிர்பார்த்த அந்த டியூன் என்பதை உணர்ந்தேன். இப்பாடலில் டஃப் என்ற இசைக்கருவியை பயன்படுத்தினேன். அது பழங்காலத்து கருவி. யாரும் அதை அதிகமாக பயன்படுத்தாததால், இப்பாடலில் நான் அதை பயன்படுத்தி, மிகவும் வித்தியாசமான பாடலை உருவாக்கினேன். அதன் வெற்றி இன்றுவரை தொடர்கிறது’ என்றார்.

