நன்றி குங்குமம் ஆன்மிகம்
‘அமா’ என்பது ஒரிடத்திற்கு பொருந்தியது, குவிந்தது, அடுத்தது என்ற பொருள் தருவதாகும். ஒரு ராசிக்கு சூரியன், சந்திரன் இருவரும் சேர்ந்து உருவாகும் ராசியான நாள் அமாவாசை எனப்படும். சூரியனும், சந்திரனும் ஆற்றல்மிக்கவர்கள். சூரியன் ஞானகாரகன், ஆத்மகாரகன், சந்திரன் மனதிற்கு அதிபதி, ஆற்றல்மிக்க இவ்விருவரும் ஒரே ராசியில் சஞ்சரிக்கும் தினம் புனிதமான தினமாகக் கூறப்படுகிறது. மேலும், சகல தேவர்களும் அமாவாசையில் அதிபர்கள். அன்று விரதங்களை மேற்கொள்ளுதல் சிறப்பானதாகும்.
அமாவாசை அன்று புண்ணிய தீர்த்தத்தினால் பிதுர் தர்ப்பணம் செய்து அதிதிகளோடும், சுற்றத்தாரோடும் உண்டு விரத நியமத்துடன் இருப்பது மிகவும் நன்மைகளை தரும். மரணத்தின் போது தூல சரீரம் (உருவுடம்பு) அழகிய சூக்குமசரீரம் அருவுடம்பு) பெறும். உயிர் பூமியிற் செய்த வினைகளுக்கு ஏற்ப இன்ப துன்பங்களைச் சுவர்க்க நரகத்தில் அனுபவிக்கும். அனுபவித்துத் தொலையாது, எஞ்சி நின்ற வினைகளினாலேயே உயிர் மீண்டும் பிறப்பெடுக்கின்றது.
