×

இரணியனை வதம் செய்ய திருக்கோஷ்டியூரில் எழுந்தருளிய விஷ்ணு

மதுரையிலிருந்து சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் செல்லும் வழியில் 65 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கோஷ்டியூர். இந்த ஊரில்தான் ராமானுஜரின் குருவான திருநம்பி வசித்து வந்தார். தனது 32 வயதில் குருவை சந்தித்த ராமானுஜர் அவரிடம் மந்திர உபதேசம் பெற்றார் என்பது வரலாறு.தொன்மையான இந்த ஊரில் சௌமிய நாராயணப் பெருமாள் கோயில் உள்ளது. கருவறையில், ஸ்ரீ தேவி, பூதேவி சமேதராக சௌமியநாராயணன் வீற்றிருக்கிறார்.இங்கு சந்தான கிருஷ்ணன், இந்திரன், கதம்ப மகரிஷி, பிரம்மா, சரஸ்வதி உள்ளிட்டோருக்கு சிலைகள் உள்ளன.  

சந்தான கிருஷ்ணன் ‘பிரார்த்தனை கண்ணன்‘ என்று அழைக்கப்படுகிறார். மகாலெட்சுமி தாயாருக்கு தனி சன்னதி உள்ளது. கோயில் முகப்பில் சுயம்புலிங்கம் உள்ளது. இங்குள்ள நரசிம்மருக்கு அருகில் ராகு, கேது உள்ளனர். இங்கு மூலவர் சன்னதியின் மேல் அமைந்துள்ள அஷ்டாங்க விமானம் மிகவும் புகழ்பெற்றது. திருமாலின் 108 திருப்பதிகளில் இது போன்ற அஷ்டாங்க விமானம் சில கோயில்களில் மட்டுமே உள்ளது. அஷ்டாங்க விமானத்தில் ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற 3 சொற்களை உணர்த்தும் விதத்தில் 3 தளங்கள் உள்ளன. கோயிலில் கொடிமரம் உள்ளது.

தல வரலாறு

பண்டைய காலத்தில் இப்பகுதியில் ‘இரணியன்’ என்ற அசுரன் வந்தான். தேவர்களை அச்சுறுத்தி வந்த இரணியனை வதம் செய்ய இந்த தலத்தில் விஷ்ணு எழுந்தருளினார். அப்பகுதியில் தவமிருந்த கதம்ப முனிவரிடம் மற்றும் தேவர்களிடம் ஆலோசனை நடத்திய பின்னர், இரணியனை விஷ்ணு வதம் செய்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. தேவர்களின் திருக்கை (துன்பம்) ஓட்டிய தலம் என்பதால் இந்த ஊர் ‘திருக்கோட்டியூர்’ என்று பெயர் பெற்றது. காலப்போக்கில் ‘திருக்கோஷ்டியூர்’ என மருவியது.

பண்டைய காலத்தில் புருரூவன் என்ற சக்கரவர்த்தி மகாமக பண்டிகையின் போது, இந்த கோயிலில் திருப்பணி செய்ய முடிவு செய்தான். பெருமாளை தரிசிக்க விரும்பி அவன் கோயிலுக்கு வந்தான். அங்கு கோயிலின் ஈசான்ய (வடகிழக்கு) மூலையில் உள்ள கிணற்றில் திடீரென நீர் பொங்கி எழுந்தது. அதன் மத்தியில் பெருமாள் எழுந்தருளினார். இதனை கண்டு மனமகிழ்ந்த புருரூவன் சுவாமியை வணங்கி வழிபட்டார். இந்த நிகழ்வுக்கு பின்னர் இந்த கிணறு “மகாமக கிணறு’ என்று அழைக்கப்படுகிறது.

வருடந்தோறும் மகாமக விழாவின் போது இங்கு கருடன் மீது சௌமியநாராயண பெருமாள் எழுந்தருளி தீர்த்தவாரி செய்கிறார். இங்குள்ள திருமகள் தாயாருக்கு விளக்கேற்றி வழிபட்டால் குழந்தை பேறு ஏற்படும் என பக்தர்கள் நம்புகின்றனர். வைகுண்ட ஏகாதசி, மாசி தெப்பத் திருவிழா, நவராத்திரி உள்ளிட்டவை விசேஷ தினங்களாகும். மாசி மாத பவுர்ணமியில் மகம் நட்சத்திரத்தன்று நடைபெறும் தெப்ப உற்சவத்தில் தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, கேரளா, ஆந்திர மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அன்றைய தினம் கோயில் குளத்தின் படிக்கட்டுகளிலும், குளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான பெண்கள் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.

Tags : Vishnu ,Thirukoshdur ,
× RELATED தெய்வம் ஒருபோதும் அருள்புரியத் தவறாது!