கொச்சி: மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் அவர் துபாய் சென்றிருந்தார். தீவிர முயற்சிகளுக்கு பிறகு துபாயில் வசிக்கும் ஜெஸ்பர் என்ற மலையாள ரசிகர், மம்மூட்டியை சந்தித்தார். கழுத்துக்கு கீழே உடல் பாகங்கள் இயங்க முடியாத நிலையில் இருப்பவர்தான் ஜெஸ்பர். வீல்சேரில்தான் அவரது வாழ்க்கை நகர்கிறது. அப்படிப்பட்ட ரசிகர், தனது அபிமான நடிகருக்கு கொடுத்த பரிசு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மம்மூட்டிக்கு தனது பற்களால் உருவாக்கிய ஷர்ட் ஒன்றை ஜெஸ்பர் பரிசளித்துள்ளார். வெள்ளை நிறத்தில் இருக்கும் அந்த ஷர்ட்டில் நீல நிறத்தில் பெயின்ட் அடித்தது போல் வித்தியாசமான டிசைனில் அமைந்திருக்கிறது. இதை பெற்றுக்கொண்ட மம்மூட்டி ஜெஸ்பருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இந்நிலையில் இடியன் சந்து மலையாள படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கொச்சியில் மம்மூட்டி பங்கேற்றார். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் இந்த ஷர்ட்டை மம்மூட்டி அணிந்து வந்தார். இதைப் பார்த்த பலரும் வித்தியாசமான டிசைனாக இருக்கிறதே என மம்மூட்டியை பாராட்டியபோதுதான், தனது ரசிகரின் கதையை அவர் கூறியிருக்கிறார். இது பார்வையாளர்களை நெகிழ வைத்தது. இது குறித்து ஜெஸ்பர் கூறும்போது, ‘அந்த ஷர்ட்டை மம்மூட்டி அணிந்ததை நான் பார்க்க முடியவில்லையே என வருத்தமாக இருந்தது. ஆனால் இன்று உலகமே பார்க்கும் வகையில் அவர் அதை அணிந்து வந்து என்னை மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்துவிட்டார்’ என்றார்.
The post மம்மூட்டிக்கு பரிசளித்த மாற்றுத்திறனாளி ரசிகர் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.