களக்காடு: களக்காடு அருகே திருக்குறுங்குடியில் உள்ள அழகியநம்பிராயர் கோயில் 108 வைணவ தலங்களில் 57வது தலமாக திகழ்கிறது. இந்த திருத்தலத்தில் நம்பி சுவாமிகள் நின்ற நம்பி, அமர்ந்த நம்பி, பள்ளி கொண்ட நம்பி, திருமலை நம்பி, திருப்பாற்கடல் நம்பி என 5 திருக்கோலங்களில் காட்சி அளிப்பது சிறப்பு மிக்கதாகும். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமை மிக்க இந்த கோயிலில் ஆண்டு தோறும் தை மாதம் தெப்ப உற்சவ விழா 2 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு திருவிழா நேற்று கோலாகலத்துடன் தொடங்கியது. இதையொட்டி அழகியநம்பிக்கும், தாயாருக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது.
தொடர்ந்து நம்பி சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் தெப்ப உற்சவத்திற்கு புறப்பட்டார். கோயில் முன்புள்ள தெப்பக்குளத்தில் தெப்பத்தில் எழுந்தருளி 12 முறை சுற்றி வந்து நம்பி சுவாமிகள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் களக்காடு மற்றும் திருக்குறுங்குடி சுற்றுபுற பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு தெப்பமும், தெப்பக்குளமும் பலவண்ண மின் விளக்குகள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது. சிறப்பு நிகழ்ச்சியாக வாண வேடிக்கை நடந்தது. 2ம் நாளான இன்று திருமலைநம்பி கோயில் தெப்ப உற்சவம் நடக்கிறது.