×

மனதை மயக்கும் மயூராசலம்

முருகப் பெருமானால் போரில் தோற்கடிக்கப்பட்ட சூரபதுமன் மனம் திருந்தி, மயில் வடிவ மலையாக மாறி கடும் தவம் புரிந்தான். தவத்தில் மகிழ்ந்து முருகன் காட்சி தந்த போது, ‘‘என்னை தங்கள் வாகனமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்’’ என சூரபதுமன் வேண்டினான். சூரபதுமனின் விருப்பத்தை முருகனும் ஏற்றார். ‘‘மயில் வடிவ மலையாக இருந்து நான் தவம்புரிந்த இந்த மலைக்கு ‘மயூராசலம்’ எனப் பெயர் வழங்க வேண்டும். தாங்கள் எந்நாளும் இங்கே வீற்றிருந்து அன்பர்களுக்கு அருள்புரிய வேண்டும்’’ என்றும் கேட்டுக் கொண்டான் சூரபதுமன். ‘‘பாலசித்தர் என்பவர் இங்கு மலையாக இருக்கும் உன் மீது அமர்ந்து தவம் புரிவார். அந்த சமயத்தில் உன் விருப்பம் நிறைவேறும்’’ என்று சொல்லி மறைந்தார் முருகன். சூரபதுமன் அந்த நாளுக்காக மலையாக நிலை கொண்டு காத்திருந்தான். மயூராசலம் என்ற இந்த பெயர்தான் சுருங்கி ‘மயிலம்’ ஆனது.

ஒரு சிறிய மண் குன்றின் மீது நெடிய ராஜகோபுரத்துடன் இருக்கிறது கோயில். பசுமையான மரங்கள் சூழ்ந்திருப்பதால் தூரத்திலிருந்து பார்க்கும் போது ஒரு மயில் தோகை விரித்திருப்பது போல அழகாக காட்சி தருகிறது அந்த மலை. மயிலின் கொண்டை போல உச்சியில் இருக்கிறது கோபுரம். பாலசித்தரை அடுத்து மூலவர் காட்சி தருகிறார். வள்ளிதெய்வானையுடன் நின்றிருக்கும் கோலம். ஒரு கையில் வேல், இன்னொரு கையில் சேவற்கொடி. பொதுவாக முருகனின் வாகனமான மயில் தெற்கு நோக்கியோ, நேராகவோ இருக்கும். ஆனால், இங்கு மட்டும் வடக்கு நோக்கியபடி இருக்கிறது. சூரபதுமன் இங்கு வடக்கு நோக்கி தவமிருந்து முருகனின் வாகனம் ஆனதால் அதே திசையை நோக்கியபடி அமரும் பெருமை மயிலுக்கு கிடைத்திருக்கிறது.

இங்கே முருகனுக்கு மூன்று விதமான உற்சவர்கள். பிரதான உற்சவர் வள்ளிதெய்வானை சமேத பால சுப்பிரமணியர். பகலில் வெள்ளிக்காப்பு அணிந்தும், மாலை பூஜைக்கு பிறகு தங்கக்காப்பு அணிந்தும் அருட்பாலிக்கும் இவர் மாதாந்திர கிருத்திகைகளிலும், பங்குனி உத்திரப் பெருவிழாவிலும் மலையைச் சுற்றி இருக்கும் மூன்றாம் பிராகாரத்தில் வீதியுலா வருகிறார். பங்குனி உத்திரம் இங்கு பன்னிரண்டு நாள் பிரம்மோற்சவமாக விமரிசையாக நடக்கிறது. முருகனுக்கு மயில் மட்டுமின்றி பல்வேறு விதமான வாகனங்கள் இருப்பதாக புராண ங்கள் சொல்கின்றன. இதை நினைவுறுத்தும் விதமாக பங்குனி உத்திர பெருவிழாவில் திருமணக் கோலத்தில் தினம் ஒரு வாகனத்தில் முருகன் வீதியுலா வருகிறார். மயில், யானை, ஆட்டுக்கிடா, நாகம், பூதம் என விதம் விதமான வாகனங்களில் வலம் வருவார் இந்த மூலவர்.

இரண்டாவது மூலவர் வள்ளிதெய்வானையுடனான முத்துக்குமார சுவாமி. பரணி நட்சத்திர தினத்தில் வீதியுலா வரும் இவர், பொதுவாக, சுற்றுப்பிராகாரத்தில் கொலுவிருந்து அருட்பாலிக்கிறார். மாசிமக தீர்த்தவாரியின் போது இந்த உற்சவரை புதுவை கடற்கரைக்கு தோளில் சுமந்து செல்கிறார்கள். ஐந்து நாட்கள் அங்கே இருந்து அருளாசி வழங்கிவிட்டு திரும்பி வருவார் இவர். மூன்றாவது உற்சவர் ஆறுமுகங்களை கொண்ட சண்முகப் பெருமான். கந்தசஷ்டி உற்சவத்தின்போது ஆறு நாட்கள் வீதியுலா வருகிறார் இவர். உற்சவமூர்த்தியாக திகழும் முருகன் அருகில் அவரது படைத் தளபதியான வீரபாகுவும் உற்சவர் சிலையாக வீற்றிருக்கிறார். செவ்வாய்க்கிழமை காலையில் இவருக்கு பாலாபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்தால் சீக்கிரம் திருமணம் நடக்கும் என்பதால், ஒவ்வொரு செவ்வாயிலும் ஏராளமான பெண்கள் இங்கு வருகிறார்கள். விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் அருகில் இருக்கிறது மயிலம்.

Tags :
× RELATED ALP ஜோதிடம் ஓர் அறிமுகம்