×

நடிகர், நடிகைகள் ஓட்டு போட்டனர்: 6.40க்கே பூத்துக்கு வந்த அஜித், ரஷ்யாவிலிருந்து பறந்து வந்த விஜய்

சென்னை: மக்களவை தேர்தலுக்கு நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் உள்பட திரையுலகினர் பலரும் தங்களது வாக்குகளை நேற்று செலுத்தினர். சென்னை தேனாம்பேட்டையிலுள்ள வாக்குச்சாவடியில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் வாக்களித்தார். தென் சென்னை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதிதாசன் தெருவில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் வாக்களிப்பதற்காக அஜித் குமார் காலை 6.40க்கே வந்துவிட்டார்.

7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும் நிலையில் 20 நிமிடம் அவரை அதிகாரிகள் காத்திருக்கச் சொன்னார்கள். ‘ஒன்றும் பிரச்னை இல்லை, நான் வெயிட் பண்றேன்’ எனக் கூறி வாக்குச்சாவடியில் காத்திருந்தார். பிறகு முதல் நபராக அவர் வாக்களித்துவிட்டு சென்றார். சென்னை விருகம்பாக்கத்தில் மனைவியுடன் வாக்களித்தார் நடிகர் சிவகார்த்திகேயன். ராஜ்யசபா நியமன எம்.பியாக இருக்கும் இளையராஜா, சென்னை தியாகராய நகர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

அவர் கூறும்போது, ‘நாம் எல்லோரும் இந்தியக் குடிமக்கள். நமக்கு இருக்கும் உரிமை வாக்குரிமை. நீங்கள் வாக்களிப்பது போல் நானும் வாக்களித்தேன்’ எனத் தெரிவித்தார். சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இயந்திர கோளாறு காரணமாக நடிகர் கவுதம் கார்த்திக் உட்பட பொதுமக்கள் சிறிது நேரம் வரிசையில் காத்திருந்தனர். சிறிது நேரத்தில் கோளாறு சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது.

அதன்பிறகு அங்கு வந்த நடிகர் ரஜினிகாந்த், விரைவாக வாக்களித்துவிட்டு, அடையாள மை தடவிய விரலை காட்டிவிட்டு உடனடியாக அங்கிருந்து கிளம்பினார். நடிகர் விஜய், தனது ‘கோட்’ படத்தின் படப்பிடிப்புக்காக ரஷ்யாவில் இருந்தார். வாக்களிப்பதற்காக நேற்றுமுன்தினம் அங்கிருந்து புறப்பட்டார். நேற்று காலை விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தார் விஜய். இதையடுத்து அவர் நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார்.

அவர் வாக்குச்சாவடிக்கு வந்தபோது, ரசிகர்கள் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சூரிக்கு வாக்கு இல்லை: நடிகர் சூரி தனது மனைவியுடன் வாக்களிக்க வந்தார். ஆனால் வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இல்லாததால் ஓட்டு போட முடியவில்லை. அவரது மனைவி மட்டும் ஓட்டு போட்டார். இது குறித்து சூரி கூறும்போது, ‘கடந்த முறை எனக்கு இதே வாக்குச்சாவடியில் ஓட்டு இருந்தது. இப்போது இல்லை என்கிறார்கள். யார் மீது தவறு எனத் தெரியவில்லை. இது எனக்கு வருத்தமாக இருக்கிறது’ என்றார்.

தொடர்ந்து நடிகர்கள் விக்ரம், சிவக்குமார், சூர்யா, கார்த்தி, பிரபு, தனுஷ், ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, விஷால், பார்த்திபன், வடிவேலு, ஹரிஷ் கல்யாண், சசிகுமார், யோகி பாபு, டி. ராஜேந்தர், காளி வெங்கட், பரத், ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், கருணாகரன், வையாபுரி, கிங்காங், ‘உறியடி’ விஜயகுமார், கவிஞர் வைரமுத்து, நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, திரிஷா, அதுல்யா ரவி, வரலட்சுமி, கவுதமி, குஷ்பு, அதிதி பாலன், இயக்குனர்கள் பாரதிராஜா, செல்வராகவன், ஆர்.வி.உதயகுமார், அமீர் உள்பட பலர் வாக்களித்தனர்.

The post நடிகர், நடிகைகள் ஓட்டு போட்டனர்: 6.40க்கே பூத்துக்கு வந்த அஜித், ரஷ்யாவிலிருந்து பறந்து வந்த விஜய் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Ajith ,Vijay ,Russia ,CHENNAI ,Lok Sabha elections ,People's Justice Center ,President ,Kamal Haasan ,Thenampet, Chennai ,Thiruvanmiyur Bharathidasan ,South Chennai ,Lok Sabha Constituency ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்