×

கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து சென்னை வந்த ஆம்னி பஸ்சில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: மாற்று டிரைவர் போக்சோவில் கைது

விழுப்புரம்: கேரள மாநிலம் கண்ணூரிலிருந்து சென்னை நோக்கி நேற்று முன்தினம் இரவு ஆம்னி சொகுசு பேருந்து ஒன்று புறப்பட்டது. இதில் 25 பயணிகள் பயணித்தனர். அதில் கேரளா தம்பதி 9 வயது மகளுடன் சென்னைக்கு பயணித்தனர். நள்ளிரவு சேலம் பகுதியில் ஆம்னி பேருந்து வந்தபோது மாற்று டிரைவரான விருதுநகர் மாவட்டம் பாளையம்பட்டியை சேர்ந்த ஞானவேல் (40), டிரைவர் இருக்கையின் பின்புறம் படுத்திருந்த 9 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதோடு, தனது செல்போனில் புகைப்படம், வீடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனை எதிரே இருந்த சக பயணி பார்த்து பெற்றோரிடம் தெரிவிக்கவே அவர்கள் டிரைவர் ஞானவேலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவரிடமிருந்து செல்போனை பிடுங்க முயற்சித்தனர். ஆனால் நீண்ட நேரமாக செல்போனை கொடுக்காமல் அதிலிருந்த வீடியோவையும், புகைப்படத்தையும் டெலிட் செய்ய முயற்சித்துள்ளார். உடனே மற்ற பயணிகள் ஒன்றாக சேர்ந்து அவரிடமிருந்து செல்போனை பிடுங்கியுள்ளனர். அதில் சிறுமியை ஆபாசமாக படம், வீடியோ எடுத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து பேருந்தை விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்துக்கு விட சொன்ன கேரள தம்பதிஅங்குள்ள புறக்காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு பேருந்து கொண்டு செல்லப்பட்டது. சிறுமியின் பெற்றோர் புகாரின் பேரில் மகளிர் போலீசார் போக்சோ வழக்குப்பதிந்து ஞானவேலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து சென்னை வந்த ஆம்னி பஸ்சில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: மாற்று டிரைவர் போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Tags : Kannur, Kerala ,Chennai ,Villupuram ,Kerala ,Salem ,
× RELATED இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி யானை...