×

வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை நவம்பரில் பயன்பாட்டுக்கு வருகிறது: அதிகாரிகள் தகவல்

சென்னை: வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை வரும் நவம்பர் மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் ரயில் போக்குவரத்து சேவையை அதிகரிக்கவும் பறக்கும் ரயில் அமைக்கும் திட்டம் 1985ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. சென்னை கடற்கரை முதல் பரங்கிமலை வரை 3 கட்டங்களாக இத்திட்டத்தை கொண்டு வர திட்டமிடப்பட்டது.

முதல்கட்டமாக 1997ம் ஆண்டு கடற்கரை முதல் மயிலாப்பூர் இடையே 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.266 கோடியில் ரயில் பாதை அமைக்கப்பட்டது. 2ம் கட்டமாக ரூ.877.59 கோடியில் மயிலாப்பூர் முதல் வேளச்சேரி வரை தொடங்கப்பட்டு கடந்த 2007ம் ஆண்டு முடிக்கப்பட்டது. தொடர்ந்து, 3ம் கட்டமாக 2008ம் ஆண்டு ரூ.495 கோடியில் வேளச்சேரி முதல் பரங்கிமலை இடையே பணிகள் தொடங்கியது. மொத்தம் 5 கிலோ மீட்டர் தூரத்தில் 4.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு 167 தூண்களுடன் ரயில் பாதை அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் ரூ.495 கோடியில் ஆரம்பிக்கப்பட்ட பணிகள் தற்போது ரூ.734 கோடிக்கு பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதியில் நிலம் கையகப்படுத்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதனால் ஆதம்பாக்கம் -பரங்கிமலை இடையே எஞ்சியுள்ள அரை கிலோ மீட்டர் தூரத்திற்கான பணிகள் மட்டும் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது.

திட்டமிட்டப்படி பணிகள் 2010ல் முடியாததால் இதற்கான திட்ட மதிப்பீடு உயர்ந்தது. அதனை தொடர்ந்து நிலம் கையகப்படுத்த நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கு முன்னதாகவே புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுவிட்டன. ஆனால் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கான பணிகளை மேற்கொள்ள ரூ.30 கோடி செலவிடப்பட்டது. இந்த ரயில் பாதை கடற்கரை முதல் தாம்பரம் புறநகர் மின்சார ரயில் பாதையின் மேல் அமைகிறது. இத்திட்டத்தில் புழுதிவாக்கம், ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் முடிந்து, ரயில்கள் இயக்க தயாராக உள்ளன. இதில் 4.5 கி.மீ. தூரத்திற்கு 167 தூண்களுடன் ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதிகளில் வரிசையாக பிரமாண்டமான தூண்கள் அமைத்து, மேம்பாலம் இணைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதியின் அரை கிலோ மீட்டர் தொலைவிற்கு ஏற்கனவே 250 மீட்டர் தூரத்திற்கு 28 தாங்கும் பாலங்கள் அமைக்கப்பட்ட நிலையில் மொத்தம் 36 தாங்கும் பாலங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அங்கு அமைக்கப்பட்ட தூண்கள் மீது அமைக்கப்பட்ட ரயில் பாலம் திடீரென சரிந்து பாரம் தாங்காமல் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. 5 கி.மீ. தூரத்திற்கு பறக்கும் ரயில் வழித்தடம் அமைப்பதற்கான பணிகள் 17 ஆண்டுகள் கடந்தும் முடிவு நிலையை எட்டப்படவில்லை. இந்நிலையில் வரும் நவம்பர் மாதம் பணிகள் முழுமையாக முடிக்கப்பட உள்ளதாக அதிகாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது :
வேளச்சேரி-பரங்கிமலை இடையிலான பறக்கும் ரயில் பணிகள் 85 சதவீதம் முடிந்துள்ளது. ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதி பெறப்பட்ட பின்பு, இந்த வழித்தடத்தில் ரயில் சேவை தொடங்கும். அதன்படி, வரும் நவம்பர் மாதம் இறுதியில் வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு ரயில்வே துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை நவம்பரில் பயன்பாட்டுக்கு வருகிறது: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Velachery ,Parangimalai ,Chennai ,Dinakaran ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்