*கலெக்டர் சுகுமார் எச்சரிக்கை
நெல்லை : மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை கலெக்டர் சுகுமார் எச்சரித்துள்ளார்.நெல்லை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாணவர்களுக்கு போதைப்பொருட்களை விற்பனை செய்வோர் மற்றும் ‘ட்ரக் ப்ரீ டிஎன்’ செயலியின் பயன்பாடுகளை அதிகரிக்க தேவையான விழிப்புணர்வு குறித்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள் ஆலோசனைக்கூட்டம் நெல்லையில் கலெக்டர் சுகுமார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:
போதைப்பொருட்களை ஒழிக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு முதல்வர் “போதைப்பொருட்கள் இல்லா தமிழ்நாடு” என்ற தலைப்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், தொடர் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளிலும், அனைத்துவகை கல்லூரிகளிலும் மாணவர்களை உள்ளடக்கிய போதைப்பொருட்கள் ஒழிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் மூலம் பொதுமக்கள் மற்றும் பிற மாணவ, மாணவிகளிடையே பல விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
போதைப்பொருட்களை பயன்படுத்துவோர், விற்பனை செய்வோர் குறித்து அரசிற்கு எளிதாக தகவல் தெரிவிப்பதற்கு தமிழ்நாடு அரசால் ‘ட்ரக் ப்ரீ டிஎன்’ என்ற செயலி உருவாக்கம் செய்யப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது. இந்த செயலியில் போதைப்பொருட்கள் விற்பனை குறித்த விtரங்களை தெரிவிப்பவரின் தகவல் கேட்கப்படாது.
இந்த செயலி மிகவும் பாதுகாப்பானது.போதைப்பொருட்கள், கூல் லிப், பான், குட்கா, கஞ்சா, சட்டவிரோத சாராயம் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்வோர் அல்லது பயன்படுத்துவோர் குறித்து பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிந்தால் இந்த மொபைல் செயலியில் அவர்கள் பற்றிய தகவல்களையும், புகைப்படங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தால் அவற்றையும் பதிவேற்றம் செய்யலாம். தகவல் உடனடியாக கட்டுப்பாட்டு அறையில் இருந்து கலெக்டர், எஸ்பிக்கு சிறப்பு தகவல் தெரிவிக்கப்படும்.
இந்த செயலியில் தகவல் தெரிவிப்பவரின் விபரம் பாதுகாக்கப்படும். மேலும், புகார் தெரிவிப்பவரின் முகவரி, பெயர் போன்ற தகவல் கேட்கப்படாது. இந்த செயலி மிகவும் பாதுகாப்பானது.
இந்த செயலியை நெல்லை மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து, பயன்படுத்த வேண்டும்.
மேலும், இந்த செயலியை மாணவர்களின் பெற்றோர்களையும் பதிவிறக்கம் செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். “போதைப்பொருட்கள் இல்லா தமிழ்நாடு” என்ற நிலையை அடைய அனைத்துத்துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மாணவர்களின் நலன் கருதி போதைப் பொருட்கள் பயன்பாடு குறித்து ரகசிய தகவல் தெரிவிக்க விரும்புபவர்கள் கலெக்டரின் எண்ணில் (94441 85000) வாட்சப் மூலம் தெரிவிக்கலாம். மாணவர்களுக்கு போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.
கூட்டத்தில், உதவி ஆணையர் (கலால்) வள்ளிக்கண்ணு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவகுமார், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) லக்குவன் மற்றும் போலீஸ் அதிகாரிகள், கோட்ட கலால் அலுவலர்கள், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், கல்லூரிகளின் முதல்வர்கள் கலந்து கொண்டனர்.
The post பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள் ஆலோசனை கூட்டம் மாணவர்களுக்கு போதை பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை appeared first on Dinakaran.