×

கூட்டுறவு என்பது ஜனநாயக முறையில் நிர்வகிக்கப்படும் உன்னத அமைப்பு

*கூட்டுறவு கடன் சங்க பொன் விழாவில் மண்டல இணைப்பதிவாளர் பேச்சு

ஊட்டி : நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே முத்தொரை பாலாடாவில் அமைந்துள்ள ஈதேஸ்வரா தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் 50-வது ஆண்டு பொன் விழா, நவீனமயமாக்கப்பட்ட கட்டடம் திறப்பு விழா மற்றும் சிறப்பு உறுப்பினர் கல்வித் திட்டம் ஆகிய முப்பெரும் விழா நடந்தது.

மண்டல இணை பதிவாளர் தயாளன் தலைமை வகித்து நவீன மயமாக்கப்பட்ட கட்டிடத்தை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து கல்லக்கொரை கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு உறுப்பினர் கல்வி திட்ட நிகழ்ச்சி நடந்தது. சங்கத்தின் செயலாளர் நாகராஜ் வரவேற்றார்.

நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் கௌரி சங்கர் திட்ட விளக்க உரையாற்றி பேசும் போது, உறுப்பினர் கல்வித் திட்டத்திற்கான நோக்கம் குறித்தும், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் மற்றும் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மூலமாக நடத்தப்படுகின்ற கூட்டுறவு பிரச்சாரப் பணியில் குறித்தும் பேசினார்.

நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை மேலாண்மை இயக்குநர் அய்யனார் முன்னிலை வகித்து கூட்டுறவு துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கூட்டுறவு செயலி குறித்தும் அதை பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் குறித்தும் துணை முதலமைச்சரால் அறிமுகப்படுத்தப்பட்ட சங்க உறுப்பினர் குடும்ப நல நிதி திட்டமாகிய வேர்கள் திட்டம் குறித்தும், கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு உரித்தான விழுதுகள் திட்டம் குறித்தும், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உரித்தான சிறகுகள் திட்டங்கள் குறித்தும் விளக்கமாக உரையாற்றினார்.

இதைத்தொடர்ந்து, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாளன் தலைமை வகித்து பேசுகையில், சட்டமன்ற மானியக்கோரிக்கை அறிவிப்பின் படி பல்வேறு கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்கள் நவீனமயமாக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.

நீலகிரி மாவட்டத்தில் இச்சங்கம் தேர்தெடுக்கப்பட்டு நவீன மயமாக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத் துறை அதிகாரிகள், கூட்டுறவுச் சங்க பணியாளர்கள் மற்றும் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் ஆகியோர் இடையே இணக்கமாக இருந்தால் மட்டுமே கூட்டுறவு இயக்கமானது ஆரோக்கியமாக செயல்பட முடியும்.

ஒவ்வொரு உறுப்பினரும் விழிப்புணர்வோடும், முழு ஈடுபாடோடும் செயல்படும் பட்சத்தில் இச்சங்கத்தை மென்மேலும் மேம்படுத்த முடியும். ஒவ்வொரு வருடமும் நிகர லாபத்தில் சங்கத்தை எடுத்துச் செல்ல முடியும். அவ்வாறு எடுத்துச் செல்லும் பொழுது சங்க உறுப்பினர்கள் தங்களுடைய பங்குகளின் பெயரில் அதிகபட்சமாக 14% வரை பங்கு ஈவுத்தொகை பெற்று பயனடைவர் என்றார்.

மேலும் கூட்டுறவு என்பது ஜனநாயக முறையில் நிர்வகிக்கப்படுகின்ற ஒரு உன்னதமான அமைப்பாகும். இச்சங்கத்தின் உறுப்பினர்களே அதன் உரிமையாளர்கள் ஆவர். இச்சங்கமானது இப்பகுதி உறுப்பினர்களின் நல்ல ஆதரவுடன் சிறப்பாக செயல்பட்டு தனது 50-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதோ அதேபோல் மேன்மேலும் இச்சங்கம் வளர்ந்து தனது நூறாவது பொன்விழா ஆண்டை நல்ல முறையில் அடைய வேண்டும்.

இச்சங்கத்தின் மூலமாக பல்வேறு சேவைகள் அதன் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. டிராக்டர், விவசாய உபகரணங்கள் ஆகியவை குறைந்த வாடகைக்கு விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. அதனைப் பெற்று இப்பகுதி மக்கள் நல்ல முறையில் பயன்பெற வேண்டும்.

உறுப்பினராக அல்லாதவர்கள் தங்களை சங்கத்தில் உறுப்பினராக சேர்த்துக்கொள்ள படிவம் 16 பூர்த்தி செய்து சங்க செயலாளரிடம் வழங்கி உறுப்பினராகலாம் என கேட்டு கொள்ளப்பட்டது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாளர் ரவி, கூட்டுறவு துறையின் மூலமாக வழங்கப்படக் கூடிய பல்வேறு கடன்கள் குறித்தும் மத்திய கூட்டுறவு வங்கி வாயிலாக வழங்கப்படும் பல்வேறு விதமான தொழில்நுட்ப சேவைகள் குறித்து எடுத்துரைத்தார்.

மேலும் தனியார் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு ஈடாக கூட்டுறவு வங்கிகளும் தற்பொழுது அனைத்து வகையான தொழில்நுட்ப சேவைகளும் இணையவழி வங்கியில் சேவைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே மக்கள் அனைவரும் கூட்டுறவு வங்கிக்கு தங்களுடைய ஆதரவினை வழங்கி முன்னேற வழிவகை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

நஞ்சநாடு தொழிற் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையின் சார்பில் கலந்து கொண்ட செயலட்சியர் முத்து கிருஷ்ணன், தொழிற் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையினுடைய செயல்பாடுகள் குறித்தும், தொழிற்சாலைக்கு அதிக அளவில் தேயிலை விநியோகம் செய்யும் உறுப்பினர் பெருமக்களுக்கு விலையில்லா தேயிலை அறுவடை இயந்திரம், தெளிப்பான்கள் தற்போது அரசிடம் பெறப்பட்ட இண்ட்கோ மூலமாக வழங்கப்படுகிறது.

இதுபோல பல்வேறு ஊக்க செயல்பாடுகள் இனிவரும் காலங்களில் செயல்படுத்தப்படும் எனவே உறுப்பினர்கள் அதிகப்படியாக தொழிற் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைக்கு தங்களது தேயிலை வழங்கி பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார். முடிவில் செயலாட்சியர் சந்தியா நன்றி கூறினார்.

The post கூட்டுறவு என்பது ஜனநாயக முறையில் நிர்வகிக்கப்படும் உன்னத அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Cooperative Credit Society ,Ooty ,Eideswara Primary Agricultural Cooperative Credit Society ,Muthorai Palata ,Nilgiris ,
× RELATED பொது மக்கள் கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்று பயன்பெற வேண்டும்