×

கும்மிடிப்பூண்டி தொகுதியில் தொழில்நுட்பக் கல்லூரி அமைக்க வேண்டும்: பேரவையில் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ வலியுறுத்தல்

கும்மிடிப்பூண்டி, ஏப். 18: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் (திமுக) பேசுகையில், \” கும்மிடிப்பூண்டி தொகுதியில் ஏறக்குறைய சுமார் 300க்கும் மேற்பட்ட குறு, சிறு, பெரிய தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. ஆகையால், அந்தப் பகுதியில் தொழில்நுட்பக் கல்லூரி அமைத்துக் கொடுத்தால் சிறப்பாக இருக்கும். கும்மிடிப்பூண்டி தொகுதியில் உள்ள சுமார் 3,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பொன்னேரியில் உள்ள உலகநாத நாராயணசாமி அரசு கலைக் கல்லூரிக்குச் சென்று படித்து வருகிறார்கள். அங்கு ஒரு விளையாட்டு அரங்கமும், கலை அரங்கமும் அமைச்சர் அமைத்து தருவாரா?’’ என்றார்.

இதற்கு பதிலளித்து உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பேசுகையில், கும்மிடிப்பூண்டியில் தொழிற்சாலைகள் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால், தொழில்நுட்பக் கல்லூரி அமைத்துத் தர வேண்டும் என்று உறுப்பினர் கேட்கிறார். உறுப்பினர் கேட்கக்கூடிய கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கவரப்பேட்டையில் இரண்டு சுயநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் சுமார் 570 மாணவர் சேர்க்கைக்கான இடங்களில், 159 இடங்கள் காலியாக உள்ளன. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்குவதைவிட தொழில்நுட்பக் கல்லூரி தொடங்குவதற்கு கூடுதல் செலவினம் ஏற்படுகிறது. புதிய பலவகை தொழில்நுட்பக் கல்லூரியை தொடங்க சுமார் ரூ.45 கோடி செலவினம் ஏற்படும்.

மேலும், 4 ஏக்கருக்குமேல் நிலம் தேவைப்படும். மாணவர்கள் தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர்வதைவிட கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்ந்து படிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். எனவே, பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை காலியிடங்கள் உள்ள நிலையில், தற்போது அப்பகுதியில் பாலிடெக்னிக் கல்லூரி அமைத்துத் தர வேண்டும் என்ற எண்ணத்தை உறுப்பினர்கள் வலியுறுத்தி கேட்பதால், இதுகுறித்து முதல்வரிடம் கலந்துபேசி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்\” என்றார். டி.ஜெ.கோவிந்தராஜன்: அரசின் மூலமாக மருத்துவப் படிப்பு, பொறியியல் படிப்பில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதனை கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் உயர் கல்வி படிக்கக்கூடிய அத்தனை பிரிவிற்கும் வழங்க ஆவன செய்ய முடியுமா?

அதேபோன்று, முதல் பட்டதாரி உதவித் தொகையும் மருத்துவக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. அதனை விரிவுபடுத்தி உயர் கல்வி பயிலக்கூடிய அனைத்துப் பாட பிரிவுகளுக்கும் வழங்க வேண்டும். அமைச்சர் கோவி.செழியன்: 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் கிராமப்புற மாணவர்கள் பயன்பெறக்கூடிய வகையில் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அந்த வசதியை விரிவுபடுத்தித் தர வேண்டும் என்று உறுப்பினர் கேட்டிருக்கிறார். உறுப்பினர் வைத்திருக்கும் கோரிக்கையை ஏற்று, அதில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு அதற்கான வழிவகைகள் செய்யப்படும்.

The post கும்மிடிப்பூண்டி தொகுதியில் தொழில்நுட்பக் கல்லூரி அமைக்க வேண்டும்: பேரவையில் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Gummidipoondi ,D.J. Govindarajan ,MLA ,DMK ,Dinakaran ,
× RELATED தெருநாய்கள் கடித்து புள்ளிமான் பலி