×

2023ல் எண்ணெய் கசிவு விவகாரத்தில் சி.பி.சி.எல். ரூ.73 கோடி இழப்பீடு செலுத்தக் கோரிய உத்தரவுக்கு தடை விதிப்பு

சென்னை: 2023ல் எண்ணெய் கசிவு விவகாரத்தில் சி.பி.சி.எல். ரூ.73 கோடி இழப்பீடு செலுத்தக் கோரிய உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் பிறப்பித்த உத்தரவுக்கு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்தது. சென்னையில் 2023ல் வெள்ளம் ஏற்பட்டபோது மணலியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டது. எண்ணெய் கசிவு ஏற்பட்டு பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக கடலில் எண்ணெய் படலம் பரவியது.

இந்த விவகாரம் தொடர்பாக தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம், தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு எடுத்தது. இன்றைய விசாரணையின் போது, சிபிசிஎல் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சமூக பொருளாதார சேதம், சுற்றுச்சூழல் சேத இழப்பீடாக சிபிசிஎல் நிறுவனம் 73 கோடியே 68 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஐஐடி குழுவின் விசாரணை அறிக்கை தீர்ப்பாயத்தில் இன்னும் சமர்ப்பிக்கப்படாத நிலையில், எண்ணெய் கசிவு குறித்து தவறாக புள்ளிவிவரங்களுடன் இழப்பீடு செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த நோட்டீஸுக்கு தடை விதித்ததுடன், சுற்றுச்சூழல் சேத இழப்பீடாக 19 கோடி ரூபாயை 4 வாரத்தில் செலுத்த சிபிசிஎல் நிறுவனத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 30-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

The post 2023ல் எண்ணெய் கசிவு விவகாரத்தில் சி.பி.சி.எல். ரூ.73 கோடி இழப்பீடு செலுத்தக் கோரிய உத்தரவுக்கு தடை விதிப்பு appeared first on Dinakaran.

Tags : B. C. L. ,Chennai ,Tamil Nadu Pollution Control Board ,South Zone National Green Tribunal ,C. ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த...