×
Saravana Stores

மதுரை ரயில் நிலையத்தில் கூடுதல் எண்ணிக்கையில் டிக்கெட் முன்பதிவு கவுன்டர்கள் தேவை: பயணிகள் எதிர்பார்ப்பு

மதுரை: மதுரை ரயில் நிலையத்தில் கூடுதல் எண்ணிக்கையில் டிக்கெட் கவுன்டர்களை திறக்க வேண்டும் என, பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர். மதுரையில் இருந்து தென் மற்றும் வட மாவட்டங்களுக்கு அதிகமான பயணிகள் ரயில்களில் சென்று வருகின்றனர். இவர்களில் பலரும் முன்பதிவு இல்லாமல் ரயில் நிலையத்திற்கு வந்து சாதாரண வகுப்பு பெட்டிகளில் பயணிக்க டிக்கெட் எடுப்பவர்களாக உள்ளனர். தற்போது, மதுரை ரயில் நிலையத்தில் ரூ.347 கோடியில் பல்வேறு மறுசீரமைப்பு பணிகள் நடக்கின்றன. மதுரை ரயில்வே நிலையத்தில் முன்பதிவு அலுவலகத்தில் 3 கவுன்டர்கள் மட்டுமே செயல்பட்டு வருகிறது. அதில் ஒன்று அதிக எண்ணிக்கையிலான பயணிகளுக்கு மொத்த முன்பதிவு செய்யக்கூடியதாக உள்ளது. இதில் வேறு யாரும் முன்பதிவு பணிகளை மேற்கொள்ள இயலாது.

அடுத்ததாக 2 மற்றும் 3வது கவுண்டர்கள் சாதாரண முன்பதிவு வசதி உள்ளதாக இருக்கிறது. இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும், எந்த ரயில்களிலும் எங்கிருந்தும் பயணிக்க அனைத்து ரயில் நிலையங்களிலும் முன்பதிவு செய்யலாம். மேலும் தற்போது இணைய தளம் வாயிலாக முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதற்கு ரயில்வேயின் தளத்திற்குள் சென்று கூகுள் பே உள்ளிட்ட பணம் செலுத்தும் வசதிகள் வாயிலாக முன்பதிவு பணிகளை உடனடியாக முடிக்கலாம். இதிலும் எந்த ஊரில் இருந்தும், எந்த ரயிலிலும் எங்கும் பயணிக்கும் டிக்கெட்டுகளை பயணிகள் பெறலாம்.

இதுபோன்ற நிலையில், சாதாரணமாக நேரடியாக ரயில் நிலையத்திற்கு வந்து தங்கள் பயணத்திற்கான முன்பதிவை மேற்கொள்வோருக்கு தாமதம் ஏற்படுகிறது. இதனால் அவர்கள் பயணிக்க விரும்பும் ரயிலில் இருக்கும் காலி இடங்கள், அவர்கள் சம்பந்தபட்ட ரயில்வே அலுவலரிடம் விண்ணப்பத்தை கொடுக்கும் முன்பே நிரம்பி விடுகிறது. இதனால் அவர்களின் நீண்ட நேர காத்திருப்பு வீணாகிறது. எனவே தென் மாவட்டங்களில் முக்கியத்துவம் வாய்ந்த, அதிக தொழில் நிறுவனங்கள் உள்ள, கூடுதல் எண்ணிக்்கையில் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் மதுரை ரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவுக்கான கவுன்டர்களை கூடுதல் எண்ணிக்கையில் திறக்க வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

இதுகுறித்து ரயில் பயணியர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், ‘‘மக்கள் அதிகமாக வந்து செல்லும் மதுரை ரயில் நிலையத்தில் முன்பதிவு கவுன்டர் மற்றும் சாதாரண வகுப்பில் பயணிப்பதற்கான டிக்கெட் எடுப்பதற்கான கவுன்டர்கள் சரிவர இயங்குவதில்லை. பயணிகள் அதிவிரைவில் டிக்கெட் எடுக்க ஆன்லைன் முறை வந்தாலும், கிராமங்களில் இருந்து வரும் பயணிகள் டிக்கெட் கவுன்டர்களை மட்டுமே நாடுகின்றனர். எனவே, கூடுதலாக முன்பதிவு மற்றும் சாதாரண வகுப்புக்கான டிக்கெட் கவுன்டர்களை திறக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளோம்’’ என்றனர்.

The post மதுரை ரயில் நிலையத்தில் கூடுதல் எண்ணிக்கையில் டிக்கெட் முன்பதிவு கவுன்டர்கள் தேவை: பயணிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai Railway Station ,Madurai ,South ,North ,Railway Station ,Dinakaran ,
× RELATED மதுரை ரயில்வே கோட்டத்தில் தண்டவாள...