×
Saravana Stores

கேரள துணை கலெக்டர் தற்கொலைக்கு காரணமான பஞ்சாயத்து தலைவி பதவி பறிப்பு: முன்ஜாமீன் கோரி மனு தாக்கல்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூர் மாவட்ட துணை கலெக்டராக இருந்தவர் நவீன் பாபு (55). இவர் கடந்த சில தினங்களுக்கு முன் அவரது சொந்த ஊரான பத்தனம்திட்டாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையொட்டி கண்ணூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வழியனுப்பு விழாவில் அழைப்பு இல்லாமல் கலந்து கொண்ட கண்ணூர் மாவட்ட பஞ்சாயத்து தலைவி திவ்யா, துணை கலெக்டர் நவீன் பாபு ஊழல்வாதி என்று பேசினார்.

இதனால் மனவேதனை அடைந்த நவீன் பாபு அவர் தங்கியிருந்த குடியிருப்பில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக கூறி பஞ்சாயத்து தலைவி திவ்யா மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று பாஜ, காங்கிரஸ், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். கேரளா முழுவதும் போராட்டங்களும் வெடித்தன. இந்நிலையில் திவ்யா மீது தற்கொலைக்கு தூண்டியதாக கண்ணூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

திவ்யாவுக்கு எதிர்ப்பு அதிகரித்ததை தொடர்ந்து அவர் பஞ்சாயத்து தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக ரத்னகுமாரி என்பவர் புதிய பஞ்சாயத்து தலைவராக நியமிக்கப்பட்டார். இதற்கிடையே துணை கலெக்டர் நவீன் பாபு தற்கொலை தொடர்பாக திவ்யாவிடம் விசாரணை நடத்த போலீசார் தீர்மானித்திருந்தனர். இந்நிலையில் முன்ஜாமீன் கோரி தலச்சேரி நீதிமன்றத்தில் திவ்யா நேற்று மனு தாக்கல் செய்துள்ளார்.

The post கேரள துணை கலெக்டர் தற்கொலைக்கு காரணமான பஞ்சாயத்து தலைவி பதவி பறிப்பு: முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Naveen Babu ,Kannur district ,Pathanamthitta ,Kannur Collector ,Dinakaran ,
× RELATED துணை கலெக்டர் தற்கொலை: பஞ். தலைவி திவ்யா ராஜினாமா