×

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மழை நின்ற ஒரே நாளில் இயல்பு நிலைக்கு திரும்பியது சென்னை: தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை புகழாரம்

சென்னை: புயல் வேக முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மழை நின்ற ஒரே நாளில் இயல்பு நிலைக்கு திரும்பியது சென்னை என தமிழக அரசுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை புகழாரம் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை பாதிப்பு கடுமையாக இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையங்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் வடமாவட்டங்களில் கடுமையான கனமழை பெய்தது. ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டது.

இந்நிலையில், மழையால் எந்தவிதமான பாதிப்பும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை போன்ற பல துறைகளின் அதிகாரிகள் தீவிரமாக களத்தில் இறங்கி அரும்பணியாற்றியிருக்கிறார்கள். அதன்மூலம் கடும் மழையினால் எந்தவித பாதிப்பும் இல்லாமல் மழை நின்ற சில மணித்துளிகளிலேயே இயல்பு நிலைக்கு திரும்பியதை தமிழக அரசின் சாதனையாக கருதலாம். இதற்காக தமிழக முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள், தூய்மை பணியாளர்களை மனதார பாராட்டுகிறேன்.

எல்லாவற்றுக்கும் மேலாக அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளது மிகுந்த வரவேற்புக்குரியது. தமிழ்நாடு அரசு ஏற்கனவே மழைநீர் வடிகால் பணிகளை மிக கச்சிதமாக அனைத்து இடங்களிலும் செய்து முடித்து விட்டதால் கனமழை பாதிப்பிலிருந்து மக்கள் பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழக முதல்வரின் தொலைநோக்கு செயல்பாடுகள் உரிய பலனை வழங்கியிருக்கின்றன. சென்னையில் 21 சுரங்கப் பாதைகளில் உடனடியாக மழைநீர் அகற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ள நீரை வெளியேற்றுவதில் மாநகராட்சி, போலீஸ் மற்றும் தீயணைப்பு படைகள் கைகோர்த்து அசுர வேகத்தில் செயல்பட்டிருக்கிறது. சென்னையில் கொட்டி தீர்த்த கனமழையை அகற்றுவதில் மின்னல் வேகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். 95 சதவிகித மழைநீரை அகற்றும் பணி நிறைவேற்றப்பட்டிருக்கிறது. சென்னை முழுவதும் நடைபெற்று வரும் 100 மருத்துவ முகாம்களில் 5000க்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். சாலைகளில் தேங்கிய தண்ணீரை அகற்றி சாதனை படைத்த தூய்மை பணியாளர்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சிற்றுண்டி உள்ளிட்ட உதவி பொருட்கள் வழங்கி நேரடியாக வழங்கி பாராட்டியது மக்களின் கவனத்தை ஈர்த்தது.

சென்னை மாநகர மக்கள் அனைவரும் நிம்மதியடைகிற வகையில் இன்று இயல்பு நிலை திரும்பியிருக்கிறது. இதற்கு தமிழக அரசின் புயல் வேக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே முக்கிய காரணமாகும். எதையும் விமர்சனம் செய்து வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியே தமிழக அரசின் நிவாரண நடவடிக்கைகளை பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. எதிர்கட்சியினரே விமர்சிக்க முடியாத அளவிற்கு தமிழக அரசின் செயல்பாடுகளை அனைவரும் பாராட்டுகிறார்கள். இத்தகைய சீரிய முயற்சிகளை திட்டமிட்டு, செயல்படுத்திய முதல்வர் உள்ளிட்டவர்களை தமிழக காங்கிரஸ் சார்பில் மனதார பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

The post புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மழை நின்ற ஒரே நாளில் இயல்பு நிலைக்கு திரும்பியது சென்னை: தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை புகழாரம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu government ,Tamil Nadu Congress ,Selvaperunthakai Pukhazaram ,
× RELATED கலைஞர் நூற்றாண்டு பூங்கா இன்று முதல்...