×

ரேபிஸ் தவிர்ப்போம்!

நன்றி குங்குமம் டாக்டர்

சமீபகாலமாக தெருநாய்கள் மனிதர்களை கடிப்பது அதிகரித்து வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானதை தொடர்ந்து அதன் உண்மைநிலையை அறியும் வகையில், விலங்குகள் ஆர்வலரும், ஸ்காட்லாந்து நாட்டில் அமைந்துள்ள எடின்பர்க் பல்கலைக்கழகம் நடத்தும் தெரு நாய்கள் – பொது சுகாதாரம் (ROH – Indies) பற்றிய ஆராய்ச்சி திட்டத்தின் முதன்மை ஆய்வாளராகவும் இருக்கும் கிருத்திகா சீனிவாசன் தெருநாய்கள் மற்றும் மனிதர்கள் மோதல் குறித்து சமீபத்தில் ஓர் ஆய்வை நடத்தியுள்ளார். இதில், உண்மையில் தெருநாய் கடிப்பது அதிகரித்துள்ளதா.. தெருநாயிடம் இருந்து தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்ள வேண்டும்.. நாய் கடித்துவிட்டால் முதலுதவியாக என்னென்ன செய்ய வேண்டும் என்பதை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் கிருத்திகா.

தெருநாய்கள் மக்களை கடிப்பது அதிகரித்துள்ளதா உங்கள் ஆய்வு என்ன சொல்கிறது.மனிதர்களும் – தெருநாய்களும் காலம் காலமாக இங்கே இணைந்துதான் வாழ்ந்து வருகிறார்கள். தெருநாய் மனிதர்களை கடிக்கும் நிகழ்வுகளும் அவ்வப்போது ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது. எனவே, தெருநாய் கடிப்பது அதிகரித்துள்ளதா, குறைந்துள்ளதா என்பதை முழுமையாக சொல்லிவிட முடியாது. ஏனென்றால், எங்களின் ஆய்வுப்படி சில ஊர்களில் சில பகுதிகளில் நாய் கடிப்பது அதிகரித்து இருக்கிறது. சில ஊர்களில் முன்பை விட குறைந்து இருக்கிறது. எனவே, அதிகரித்து இருக்கிறது.. குறைந்து இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது. ஆனால், ரேபீஸால் ஏற்படும் மரணங்கள் முன்பை காட்டிலும் தற்போது குறைந்து இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.

ரேபிஸ் நோய் குறித்து

ரேபிஸ் என்பது வைரஸ் கிருமிகளால் ஏற்படுகின்ற நோய் நாய் கடித்தால் மட்டுமே இந்த நோய் ஏற்படும் என்று பலரும் நினைக்கிறார்கள். அப்படியில்லை, இந்தக் கிருமிகள் பூனை, நாய், ஆடு, மாடு, குதிரை, குரங்கு, நரி, கீரி, ஓநாய், வெளவால் போன்ற பாலூட்டிகள் என ரேபிஸ் கிருமி உள்ள எந்த விலங்குமே மனிதரைக் கடித்தாலும், தீண்டினாலும் ரேபிஸ் வரும். இந்தியாவை பொருத்தவரை, முறையாகத் தடுப்பூசி போடப்படாத தெருநாய் கடிப்பதால்தான் 95 சதவிகிதம் இந்த நோய் ஏற்படுகிறது. அதனால்தான் இதனை வெறிநாய்க்கடி நோய் என்கிறோம்.

ரேபிஸ் நோயுள்ள நாயின் உமிழ் நீரில் ரேபிஸ் வைரஸ்கள் வாழும். இந்நாய் மனிதரைக் கடிக்கும்போது ஏற்படும் காயத்தின் வழியாக இந்தக் கிருமிகள் மனித உடலுக்குள் புகுந்து கொள்ளும். அங்குள்ள தசை இழைகளில் பன்மடங்கு பெருகும். பிறகு, நரம்புகள் வழியாகவும், முதுகுத் தண்டுவடத்தின் வழியாகவும் மூளையை அடைந்து, மூளைத்திசுக்களை அழித்து, ரேபிஸ் நோயை உண்டாக்கும். மேலும், சிறிய அளவில் நாய் பிராண்டினாலும், திறந்த உடல் காயங்களில் நாய் நாவினால் நக்கினாலும், அதன் உமிழ்நீர் பட்டால் இந்த நோய் வரலாம்.

அறிகுறிகள்

பொதுவாக வெறிநாய் கடித்த 5 நாட்களுக்கு பிறகு இந்த நோயின் அறிகுறிகள் தெரியத் தொடங்கும். சிலருக்கு அதிகபட்சமாக 90 நாட்களுக்குப் பிறகு கூட அறிகுறிகள் தோன்றக்கூடும். இந்த நோயின் முதல் அறிகுறி நாய் கடித்த இடத்தில் வலி ஏற்படுவது அதைத் தொடர்ந்து, காய்ச்சல், வாந்தி, உணவு சாப்பிட முடியாத நிலை. தண்ணீர் குடிக்க முடியாது. ரேபிஸ் நோய் உள்ளவர்கள் தண்ணீரைக் கண்டாலே பயப்படுவார்கள்.

காரணம், தண்ணீரைக் கண்டதும் தொண்டையில் உள்ள விழுங்கு தசைகள் இறுக்கமடைந்து, சுவாசம் நிற்கின்ற உணர்வு ஏற்படுவதால், எங்கே உயிர் போய்விடுமோ என்று பயந்து, இவர்கள் தண்ணீரைக் குடிக்க மாட்டார்கள். இதற்கு ஹைட்ரோபோபியா என்று பெயர். இவர்களுக்கு உடலில் அதிக வெளிச்சம்பட்டால் அல்லது முகத்தில் காற்றுபட்டால் உடல் நடுங்கும். எந்நேரமும் அமைதியின்றிக் காணப்படுவார்கள். எதையாவது பார்த்து ஓடப்பார்ப்பதும், மற்றவர்களைத் துரத்துவதும் கடிக்க வருவதுமாக இருப்பார்கள். நோயின் இறுதிக்கட்டத்தில் வலிப்பு வந்து, சுவாசம் நின்று உயிரிழப்பார்கள்.

தடுப்பூசி தவணைகள்

நடைமுறையில், வெறிநாய் கடித்தவருக்கு தொப்புளைச் சுற்றி 14 ஊசிகள் போடுவார்கள் என்று பயந்தே பலரும் சிகிச்சைக்கு வருவதில்லை. ஆனால் அது அந்த காலத்தின் நடைமுறையாகும். இப்போது அப்படியில்லை. நவீன தடுப்பூசிகள் வந்துவிட்டன. ஐந்தே ஊசிகளில் ரேபிஸ் நோயை 100 சதவிகிதம் வரவிடாமல் தடுத்துவிடலாம். இந்த ஊசிகள் புஜத்திலேயே போட்டுக் கொள்ளலாம். நாய் கடித்த அன்றே இச்சிகிச்சையைத் தொடங்கிவிட வேண்டும்.

நாய் கடித்த நாள், 3 வது நாள், 7-வது நாள், 14 வது நாள், 28 வது நாள் என 5 தவணைகள் ரேபிஸ் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள வேண்டும். காயம் கடுமையாக இருந்தால் 6 -வது ஊசியை 90வது நாளில் போட்டுக் கொள்ளலாம். இதற்கு அதிக செலவாகும் என்பதில்லை. எல்லா அரசு மருத்துவமனைகளிலும் இந்த தடுப்பூசி இலவசமாகவே போடப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளிலும் கிடைக்கிறது.

வீட்டு நாய்க்கும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டுமா.?

வீட்டு நாய்க்கு முறைப்படி ரேபிஸ் தடுப்பூசிப் போடப்பட்டிருந்தால் கூட, அந்த நாயால் கடிபட்டவர் ரேபிஸ் தடுப்பூசியை கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் அந்த நாயை 10 நாட்களுக்கு கண்காணிக்க வேண்டும். நாயிடம் எந்த மாற்றமும் இல்லாமல் இயல்பாக இருந்தால், முதல் மூன்று தடுப்பூசிகளுடன் நிறுத்திக் கொள்ளலாம். நாயிடம் வெறிநாய்க்குரிய மாறுதல் தெரிந்தால் மீதமுள்ள தடுப்பூசிகளையும் போட்டுக் கொள்ள வேண்டும்.

வெறிநாயை அடையாளம் காண்பது எவ்வாறு?

ரேபிஸ் கிருமிகளால் பாதிக்கப்பட்ட நாய் காரணமின்றிக் குரைக்கும். அது ஊளையிடும். ஓரிடத்தில் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கும். பார்ப்போர் அனைவரையும் துரத்தும். தூண்டுதல் இல்லாமல் கடிக்க வரும். நாக்கு அதிகமாக வெளியே தொங்கிக் கொண்டிருக்கும். எந்நேரமும் எச்சில் ஒழுகிக் கொண்டிருக்கும். பொதுவாக, ரேபிஸ் வந்த நாய் பத்து நாட்களுக்குள் இறந்துவிடும். இதற்கு நேர்மாறாகவும் சில வெளிநாய்கள் இருப்பதுண்டு. வீட்டில் அல்லது தெருவில் ஏதாவது ஒரு மூலையில் தனிமையாக மிகவும் அமைதியாக இருக்கும். எதுவும் சாப்பிடாமல் இருந்து 10 நாளில் இறந்துவிடும்.

யாரெல்லாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?

நாய் கடிப்பதற்கான வாய்ப்புகள் சிலருக்கு அதிகமாக இருக்கும். இப்படிப்பட்டவர்கள் முன்னெச்சரிக்கையாக ரேபிஸ் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம். இதில் இந்தியாவைப் பொருத்தவரை குழந்தைகள் முதலிடம் வகிக்கிறார்கள். ஏனென்றால், பெற்றோர் துணையின்றி இவர்கள் தெருக்களில் விளையாடுகிறார்கள். அப்போது நாய் பிராண்டுதல், நாவினால் தீண்டுதல் போன்றவற்றால் ஏற்படும் ஆபத்துகளை இவர்கள் அறியமாட்டார்கள். ஆகவே, இவர்கள் பிராண்டியது, தீண்டியது என்று பெற்றோரிடம் சொல்வதில்லை. எனவே, ரேபிஸ் வந்த பிறகுதான் நடந்தது தெரியவரும்.

தெருநாய்கள் கட்டுப்பாடின்றி அலையும் தெருக்களில் வசிப்போர், அடிக்கடி ஊர்பயணம் செய்துவிட்டு இரவில் வீடு திரும்புவோர், பணி முடிந்து இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் வீடு திரும்புவோர், கால்நடை மருத்துவர்கள், கால்நடைப் பணியாளர்கள், நாய் வளர்ப்போர், நாய்ப்பிடிப்போர், அஞ்சல் பணியாளர்கள், டெலிவரி பணியாளர்கள், காவல் துறையினர், ரத்தப் பரிசோதனைக் கூடப் பணியாளர்கள், ரேபிஸ் நோய் ஆராய்ச்சியாளர்கள், ஆரம்ப சுகாதாரப்பணியாளர்கள், இறந்த விலங்குகளை பதப்படுத்துவோர், மிருகக்காட்சி சாலையில் பணிபுரிவோர், விலங்குகளை வேட்டையாடுவோர் ஆகியோர் முன்னெச்சரிக்கையாக தடுப்பூசியை முறைப்படி போட்டுக் கொள்வது நல்லது.

அதுபோன்று வீட்டில் நாய் வளர்ப்பவர்கள் அதற்கு ரேபிஸ் தடுப்பூசியை கண்டிப்பாகப் போட வோண்டும். நாய்க்குடிக்கு 3 மாதம் முடிந்ததுமே ஒன்றும், 4 மாதம் முடிந்ததும் ஒன்றும் போட்டுவிட வேண்டும். அடுத்து ஆண்டுக்கு ஒருமுறை ரேபிஸ் பூஸ்டர் தடுப்பூசியைக் கட்டாயம் போட வேண்டும். வீட்டு நாய்களை தெரு நாய்களுடன் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டு நாய் சோர்வாக இருந்தாலோ, சாப்பிடாமல் இருந்தாலோ, எல்லோரையும் கடித்துக் கொண்டிருந்தாலோ அந்த நாயை மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். அந்த நாய் 10 நாட்களுக்குள் இறந்துவிட்டால், ரேபிஸ் நோய்க்கான தடுப்பூசியை வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும்.

தற்காத்துக் கொள்ளும் வழிகள்

பொதுவாக நாம் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது நாய் அருகில் வந்தாலோ, துரத்தினாலோ உடனே நாம் பயந்து அங்கிருந்து ஓடாமல், அப்படியே நின்று விட வேண்டும். நாம் நின்று விட்டால், அதுவும் நின்றுவிடும். பின்னர், விரட்டுவது போன்று சைகை செய்தோமானால் அவை தூரே சென்றுவிடும். அதுபோன்று இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது துரத்தினாலும், வண்டியை சடனாக நிறுத்திவிட்டால் அது நின்றுவிடும்.

முதலுதவிகள்

வீட்டு நாயோ தெரு நாயோ ஒரு நாய் கடித்துவிட்டால், உடனடியாக அந்த இடத்தை சுத்தமான தண்ணீர்விட்டு அலம்பிவிட்டு சோப்பு கொண்டு சுத்தம் செய்துவிட வேண்டும். பின்னர் ஆன்டிபயாடிக் ஆயின்மென்ட் வீட்டில் இருந்தால் அதனை அந்த இடத்தில் தடவிவிட்டு, உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். ஆயின்மென்ட் எதுவும் இல்லையென்றாலும், சோப்பு கொண்டு சுத்தம் செய்துவிட்டு, உடனடியாக மருத்துவரை அணுகி விட வேண்டும். அதுபோன்று முக்கியமாக பின்பற்ற வேண்டியது, மருத்துவர் எத்தனை தடுப்பூசிகள் பரிந்துரைக்கிறாரோ அத்தனை தடுப்பூசிகளையும் கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும். ஒன்று, இரண்டு போட்டுவிட்டு பாதியில் நிறுத்திவிடக் கூடாது. இது ரொம்பவும் முக்கியமானது. ஏனெனில் பாதிப்பு எப்போது வேண்டுமானாலும் பாதிப்பு ஏற்படலாம்.

தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்

The post ரேபிஸ் தவிர்ப்போம்! appeared first on Dinakaran.

Tags : Saffron Dr Street Dogs ,University of Edinburgh ,Scotland ,Dinakaran ,
× RELATED பெண்கள் உலக கோப்பை டி20: முதல் ஆட்டத்தில் வங்கம் வெற்றி