×

கர்ப்ப காலத்தில் கடைபிடிக்க வேண்டியவை!

நன்றி குங்குமம் டாக்டர்

ஆயுர்வேதத் தீர்வு!

ஆயுர்வேதத்தில் ஆண்- பெண் இருபாலரும் திருமணம் நிச்சயித்த பின் உடல் சுத்திகளை செய்து கொண்டு இல்வாழ்க்கையில் ஈடுபடும்போது அது ஒரு ஆரோக்கியமான கர்ப்பத்திற்கும் சுகப்பிரசவத்திற்கும் வழிவகுக்கும். கர்ப்பம் தரிப்பதற்கு முன்பாகவோ அல்லது இல்வாழ்க்கையில் ஈடுபடும் முன்னதாகவோ சில விஷயங்களை நாம் கவனித்துக் கொள்வது முக்கியம். அவை, பெண் குறைந்தது இருபத்தியோரு வயதை அடைந்திருக்க வேண்டும்.

தனது உயரத்திற்கு தகுந்தவாறு ஆரோக்கியமான எடையை பெற்றிருப்பதும், பராமரித்தலும் அவசியம்.உடலில் சர்க்கரைநோய், ரத்த அழுத்தம், ஹெபடைடீஸ் பி, ரூபெல்லா, சிறுநீர் தொற்றுநோய் போன்றவை உள்ளதா என்று அறிந்து கொள்ள வேண்டும்.

வலிப்புநோய், இதயநோய், தைராய்டுகுறைபாடு, சர்க்கரைநோய் போன்றவை இருந்தால் ஆரம்பத்திலேயே சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.மனச்சோர்வு, படபடப்பு, பதற்றம் இருந்தால் அவற்றக்கு தீர்வு காண வேண்டும். புகைபிடிப்பது, மது அருந்துதல், தேவையில்லாத மருந்துகள் எடுத்துகொள்வது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

தனது குடும்பத்திலோ கணவர் குடும்பத்திலோ ஏதாவது மரபணு சார்ந்த வியாதிகள் இருக்குமாயின் தகுதி வாய்ந்த மகப்பேறு மருத்துவரை சந்தித்து உரிய ஆலோசனை பெற வேண்டும். பெண்கள் மனஅழுத்தம் இல்லாமலும், ஆரோக்கியத்துடன் இருக்க அவர்களைச் சுற்றியுள்ள உறவினர்கள் நன்றாகப் பார்த்துக் கொள்வது மிக அவசியம்.

கர்ப்பம் தரித்ததற்கான அறிகுறிகள்

மாதவிடாய் நின்று போதல், குமட்டல் மற்றும் வாந்தி, மார்பகத்தில் லேசான வலி, சிறுநீர் அடிக்கடி அவசரமாக போகுதல், வெள்ளைப்படுதல் இதைத் தவிர ரத்தத்திலும் சிறுநீரிலும் பீட்டா ஹெச்.சி.ஜி. என்னும் ஹார்மோன் அளவை வைத்தும் கர்ப்பப்பையை ஸ்கேன் செய்தும் கர்ப்பம் தரித்ததை நாம் அறிந்து கொள்ளலாம்.அதேபோல கருவின் வளர்ச்சி, இதய துடிப்பு, ரத்தஓட்டம், நஞ்சுக்கொடி தன்மை, உறுப்புகள் வளர்ச்சி, சத்துக்குறைபாடு போன்றவை இருந்தாலும் ஸ்கேன் மூலம் தெரிந்து கொள்ளலாம். குழந்தைக்கு ஏதேனும் நோயோ அல்லது மரபணு குறைபாடுகளோ உள்ளதா என்பதை NT SCAN, AFP, PAPP -A ஆகியவற்றின் மூலம் அறிந்துகொள்ளலாம்.

பொதுவான வழிமுறைகள்

கர்ப்பகாலத்தில் கர்ப்பிணி, சிறந்த சமச்சீரான, அறுசுவையுடன் கூடிய, ஊட்டச்சத்தான, எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய, உடலுக்கு நன்மையை கொடுக்கும் உணவுகளையே உட்கொள்ள வேண்டும்.கருவின் இதயம் தாயிடமிருந்து உண்டானதாகும். இது தாயின் இதயத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது. ஆகையால் கர்ப்பிணியின் விருப்பத்தை அலட்சியம் செய்வது தகாது என்றும் அனைத்து ஆசைகளும் நிறைவேற்றப்பட்டுவிட்டால் குழந்தை வீரியமுடன் நீண்ட ஆயுள் உடையதுமாக பிறக்கும் என்றும் ஆயுர்வேதம் கூறுகிறது.

முதல் மாதம் முதல் ஒன்பதாவது மாதம் வரை தொடர்ச்சியாக சிசு வளர்ச்சிக்கு சுண்ணாம்புச்சத்து தேவைப்படுவதால், ஆயுர்வேதம் பால், பால் சார்ந்த உணவுகளான வெண்ணெய், நெய், மோர், பனீர் ஆகியவற்றைத் தொடர்ந்து அறிவுறுத்துகிறது. கூடவே தினமும் இருபது நிமிடமாவது இளவெயிலில் நிற்பது வைட்டமின் டி சத்தை உடம்புக்கு தந்து நாம் சாப்பிடும் உணவிலுள்ள சுண்ணாம்புச்சத்தை உடம்பில் தக்கவைத்து அது குழந்தைக்கு போய்ச் சேர உதவுகிறது.

சிசு வளர்ச்சியில் அடுத்து முக்கியமாக தேவைப்படுவது இரும்பு மற்றும் ஃபோலிக் ஆசிட் சத்து பழம் ஆகவே மாதுளம், கருப்பு திராட்சை, செவ்வாழை, தக்காளி, நெல்லிக்காய், கொய்யா, பேரீச்சம்பழம், அத்திப்பழம், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, முருங்கைக்காய், கீரை வகைகளில் முருங்கைக்கீரை, பசலைக்கீரை, பொன்னாங்கண்ணி, சிறுகீரை, வெந்தயக்கீரை, கொத்தமல்லி, புதினா வெங்காயத் தழைகள், முள்ளங்கித் தழைகள் ஆகியவை உணவில் எப்போதும் இருக்க வேண்டும்.

மேலும் பாசிப்பருப்பு, பட்டாணி, முளைத்த பச்சைப்பயறு, முளைத்த வெந்தயம், பாதாம், முந்திரி, வேர்க்கடலை, வெல்லம் ஆகியவை எப்பொழுதும் கர்ப்பிணி உணவில் இருக்க வேண்டும். மாமிசத்தில், முட்டை, சூப், கொழுப்பில்லாத கறி ஆகியவை கொடுக்கலாம். குடிக்கும் தண்ணீரில் எப்பொழுதும் ஒரு ஜீரண வஸ்து சேர்த்து காய்ச்சி குடிப்பதே நல்லது. அவ்வாறு தினமும் சிறிது சீரகமோ சோம்போ பெருங்காயமோ, ஓமமோ சேர்த்து காய்ச்சி குடிக்க வாத அனுலோமனம் நடப்பதால் சீரணம் என்றும் பாதிக்காமல் தாய் சாப்பிடும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் தாய்க்கும் சேய்க்கும் கிடைக்க உதவும்.

குங்குமப்பூவை லேசாக வறுத்துப் பொடித்து வைத்துக்கொண்டு இதைச் சிறிதளவு காய்ச்சியப் பசும்பாலில் கலந்து கர்ப்பிணிப்பெண் தினந்தோறும் பருகுவது பிறக்கப்போகும் குழந்தைக்கு நல்ல நிறத்தையும் பிரசவம் எளிதாக ஆவதற்கும் உதவும்.இல்வாழ்க்கை (குறிப்பாக முதல் மற்றும் கடைசி 3 மாதங்கள்), கடுமையான உழைப்பு, கோபம், பதற்றம், மனச்சோர்வு, சோகம், அதிகமாக தொலைக்காட்சி பார்ப்பது, நீண்ட தூரப் பயணம், அதிக பளு தூக்குதல் ஆகியவை தவிர்க்க வேண்டும்.

நல்ல கதைப் புத்தகங்கள், இலக்கியங்கள் படிப்பது, இசைகள் கேட்பது, மனதிற்கும், உடலுக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய பிடித்தமான செயல்களைச் செய்வது, இறைவழிபாடு, எப்போதும் நல்லவற்றையே சிந்திப்பது ஆகியவை குழந்தை ஆரோக்கியத்துடன் பிறக்க உதவும்.தாய் மற்றும் உறவினர்கள் கருவில், உள்ள குழந்தையிடம் அடிக்கடி பேச வேண்டும். அது கருவில் உள்ள குழந்தைக்கு ஊக்கத்தைத் தரும்.

சுகப்பிரசவத்திற்குப் பெண்களின் இடுப்பெலும்பு விரிந்து கொடுப்பது மிக மிக முக்கியமான ஒன்று. அதற்காக பெண்கள் கருவுற்ற காலத்தில் இருந்து குனிந்து வேலை செய்வது, தரையில் அமர்ந்து எழுவது போன்றவை செய்வது நல்லது. ஒரே இடத்தில் அமர்ந்தே வேலை செய்யும் பெண்கள் தினமும் கட்டாயம் நடைப்பயிற்சி செய்தே ஆக வேண்டும். தினமும் காலையில் முக்கால் மணி நேரம் மூச்சு இரைக்காதவாறு மெதுவாக நடக்கலாம். அதைத் தவிர மூச்சுப்பயிற்சிி, தியானம், ஆசனங்கள் ஆகியவை மருத்துவர் மாதந்தோறும் கூறும் அறிவுரைப்படி தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

மாதாமாதம் கடைப்பிடிக்க வேண்டிய உணவு மற்றும் வாழ்க்கை முறைகள்

ஆயுர்வேதத்தில் கர்ப்பிணிக்கான உணவுகளும், மருந்துகளும் வாழ்க்கை முறைகளும் மிகவும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

முதல் மாதம்

முதல் மூன்று மாதங்கள் தன்னிச்சையாகக் கருக்கலைந்துவிடும் வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும்.

முதல் மூன்று மாதங்களில் வாந்தி, குமட்டல் இருந்தால்.. ஏலக்காய் விதைகளை வறுத்து, பொடிசெய்து, நாள் முழுவதும் சிறிய அளவில் மெல்லலாம்.

இஞ்சி மற்றும் பெருஞ்சீரகம் சேர்த்து தேநீர் போட்டு குடிக்க நல்ல பலனைத் தரும்.

அதிமதுரப் பொடியை தேனுடனும் வெண்ணெயுடனும் சேர்த்து சாப்பிட்டு, பின் பாலுடன் சர்க்கரையோ அல்லது மூவிலை சேர்த்து காய்ச்சிய நெய்யோ அல்லது குறுந்தொட்டி வேர் பால் கசாயமோ கொடுக்க தாய் – சேய் நலம் காக்கலாம்.

இரண்டாம் மாதம்

இரண்டாவது மாதத்தில் இனிப்புச் சுவையுள்ள, குளிர்ச்சியான, நீர் சேர்ந்த உணவுகளைக் கொடுக்க வேண்டும். விதார்யாதி பால் கசாயம் கொடுக்க கர்ப்பத்தை தக்க வைத்து சிசுவுக்கும் தாய்க்கும் நல்ல பலத்தைக் கொடுக்கும். திருதாளி பால் கசாயம் கொடுக்கலாம்.

மூன்றாவது மாதம்

மூன்றாவது மாதத்தில் உளுந்தங்களி, பால் சாதம், பாலில் தேன் மற்றும் நெய் கலந்து கொடுக்கலாம். குமட்டல், வாந்தி அதிகமாக வாய்ப்புள்ளதால் அத்தகைய காலகட்டத்தில் தேனை ஒரு சிறந்த ஊட்டச்சத்து உணவாகவும் குமட்டல், வாந்தியை கட்டுப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுத்தலாம்.மேலும் குமட்டல் உள்ளபோது காலையில் இஞ்சி காபி, சுக்கு மல்லி காபி இஞ்சி எலுமிச்சை வரக்காபி குடிக்கலாம். சுக்கைச் சிறுசிறு துண்டுகளாக வாயில் அடக்கி மெல்லலாம். அடிக்கடி மாதுளம் பழச்சாறுடன் சிறிது எலுமிச்சைச் சாறு, தேன் சேர்த்து குடிக்கலாம். நடைமுறையில் கர்ப்பிணிக்கு மூன்றாவது மாதத்தில் விதார்யாதி நெய்யோ பால் கசாயமோ கொடுப்பது மரபு.

நான்காவது மற்றும் ஐந்தாவது மாதம்

நான்காவது மாதத்தில் கர்ப்பிணியை தெளஹிரிதீணி என்கிறது ஆயுர்வேதம். இதற்கு அர்த்தம் ஒரே உடம்பில் இரு இதயம் என்பதாகும். இந்த மாதத்தில் சிசுவானது அதன் ஆசைகளை தாயின் மூலம் வெளிப்படுத்துவதால் இங்கு தாய் – சேய் இருவருடைய ஆசைகளும் வெளிப்படும். இங்கு பால் மற்றும் வெண்ணெயை முக்கியமான மருந்தாக ஆயுர்வேதம் கூறுகிறது. மாமிசத்தில் ஆட்டுக்கறியை இந்த காலகட்டத்தில் கொடுக்கலாம். சீரகம், சோம்பு, இஞ்சி, ஏலக்காய் ஆகியவை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஐந்தாவது மாதத்தில் அரிசிக் கஞ்சியையும் அரிசியுடன் பால், சர்க்கரை, நெய் சேர்த்து செய்த பாயசத்தையும் ஆயுர்வேதம் அறிவுறுத்துகிறது. சீந்தில்கொடி பால்கசாயமும் கொடுக்கலாம். நான்காவது மாதத்திலிருந்து புரதச்சத்து மற்றும் ஒமேகா – 3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக தேவைப்படுவதால் தினமும் பச்சைப்பட்டாணி, கறுப்புப் பட்டாணி, கீரைகள், சோயா பீன்ஸ், அக்ரூட், எள்ளு, முட்டை, கோழி, முள்ளுள்ள செதிலுள்ள மீன்கள், வேர்க்கடலை, பாதாம் பருப்பு, அவரைக்காய், முளை கட்டிய தானியங்கள், சோளம், உளுந்து சேர்க்க வேண்டும். நான்காவது மாதத்திலிருந்து ஆறாவது மாதம் வரை குறுந்தொட்டி அல்லது ஓரிலை வேர் பால் கசாயம் கொடுக்கலாம்.

ஆறாவது மாதம்

ஆறாவது மாதத்தில் வைட்டமின் ஏ சத்து சிசுவிற்கு ஆரோக்கியமான தோலையும், செல்கள் வளர்ச்சிக்கும், சிவப்பணுக்கள் உற்பத்திக்கும் வழிவகுக்கின்றன. எனவே கேரட், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கீரைகள், பால், வெண்ணெய், முட்டை வெள்ளைக்கரு ஆகியவை கொடுக்கலாம்.ஆறாவது மாதம் முதல் தாடிமாகி நெய்யும், சுண்டை வேர் பால் கசாயமும் கொடுக்கலாம்.

ஏழாவது மாதம்

ஆறாவது மற்றும் ஏழாவது மாதங்களில் நெருஞ்சி முள் சேர்த்து சமைத்த கஞ்சியையும் நெருஞ்சிமுள் மற்றும் மதுரவர்க திரவியங்களின் நெய்யையும் ஆயுர்வேதம் அறிவுறுத்துகிறது. ஆறாவது மாதத்தில் பெண்களுக்கு காலில் வீக்கமும், உடம்பில் நீரும், சிறுநீர் தொற்று நோயும், மலச்சிக்கலும், மூலநோயும் வர வாய்ப்புள்ளதால் நெருஞ்சி முள்ளினாலான இவ்வகை உணவு மற்றும் மருந்துகள் உடம்பில் உள்ள தேவையில்லாத நீரைப் போக்கி அதன்மூலம் வரும் உபாதைகளை தடுக்கின்றது. தண்ணீர் அடிக்கடி பருகிக் கொண்டே இருக்க வேண்டும்.

கருவின் அளவு அதிகரிப்பதால் தாய்மார்கள் மார்பகத்திலும் அடிவயிற்றிலும் ரி்ப்பு உணர்வை உணரலாம் அல்லது மார்பு அல்லது தொண்டையில் எரியும் உணர்வையும் உணரலாம். இது இயற்கையே, இதனால் கவலைகொள்ள தேவையில்லை. தேங்காய் எண்ணெய் தடவினாலே போதுமானது அல்லது சுத்தமான விளக்கெண்ணெய் இருந்தாலும் பயன்படுத்தலாம். சிறிய அளவில் உணவை அடிக்கடி சாப்பிடவும். சிறிது நெய், மோர் சேர்க்கலாம். உப்பை குறைக்கவும். உணவு உண்டபின் உடனேயே தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்கவும்.

எட்டாவது மாதம்

எட்டாவது மாதத்தில் குழந்தை அதிகமாக எடை கூட வேண்டும். எனவே ஊட்டச்சத்துக்களை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.எட்டாவது, ஒன்பதாவது பீச்சு எனப்படும் ஆயுர்வேத முறையில் தான்வந்தர தைலம் 50 மி.லி. உணவுக்குப் பின் ஆசனவாய் மூலம் செலுத்துதல், ஆட்டு இறைச்சி சூப் குடித்தல் ஆகியவை பலன் கொடுக்கும்.

ஒன்பதாவது மாதம்

இறைச்சி சூப், காய்கறி சூப், கஞ்சி அல்லது எளிதில் செரிக்கக்கூடிய திரவ உணவுகள் போன்றவை எடுத்துக் கொள்வதால் அஜீரணம், மூச்சுவிடுதலில் சிரமம் போன்றவற்றை தவிர்க்கலாம். தண்ணீர்விட்டான் கிழங்கு பால் கசாயம் கொடுக்கலாம்.மேற்கூறிய அனைத்தும் பின்பற்றுவதற்கு எளிமையான முறைகளே ஆகும். இவற்றைக் கடைபிடித்தாலே ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கலாம்.

தொகுப்பு: உஷாநாராயணன்

The post கர்ப்ப காலத்தில் கடைபிடிக்க வேண்டியவை! appeared first on Dinakaran.

Tags :
× RELATED ரேபிஸ் தவிர்ப்போம்!