×

சாவித்ரிபாய் ஜோதிராவ் புலே கல்வி உதவித் தொகை நிறுத்திவைப்பு: திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி கடும் கண்டனம்

சென்னை: பெண் கல்வி ஊக்குவிப்பதாக கூறும் பிரதமர் மோடியின் ஒன்றிய அரசு கல்வி உதவித்தொகையை வழங்காமல் இழுத்தடிப்பதாக திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். குடும்பத்தில் ஒற்றை பெண் பிள்ளையாக இருப்பவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் சாவித்ரிபாய் ஜோதிராவ் புலே பெயரில் ஆராய்ச்சி குறிப்புக்கான கல்வி உதவித்தொகை திட்டம் ஒன்றிய அரசால் தொடங்கப்பட்டது. முதல் 2 ஆண்டுகளுக்கு மாதம் தோறும் ரூ.37 ஆயிரம், அடுத்த 3 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.42 ஆயிரம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் இத்திட்டத்தில் யூஜிசி ஆல் பல மாதங்களாக கல்வி உதவித்தொகை வழங்கப்படாமல் இருப்பதாக அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இதனால் அன்றாட தேவைகளை சமாளிக்க முடியாத நிலையில் ஆராய்ச்சி படிப்பு மாணவிகள் உள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். 2022 ஆம் ஆண்டு இத்திட்டத்தின் பயனாளிகளாக இணைக்கப்பட்ட 1029 மாணவிகள் கல்வி உதவித்தொகை பெறாமல் கடும் சவால்களை எதிர்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த நிச்சயமற்ற தன்மை கல்வி முன்னேற்றத்தை பாதித்து உயர்கல்வியில் பெண்களை மேம்படுத்துவதற்கான ஆதரவையும் குறைப்பதாக வேதனை தெரிவித்துள்ளார். பெண் பிள்ளைகளை பாதுகாத்து, கல்வி வழங்குவோம் என்பது வெறும் தேர்தல் முழக்கமாக மட்டும் இருக்க கூடாது எனவும் கண்டனம் தெரிவித்துள்ளார். நிலுவையில் உள்ள கல்வி உதவித்தொகையை விடுவிப்பதோடு புதிய விண்ணப்பங்களை பெற யு.ஜி.சிக்கு உத்தரவிடுமாறு ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு வலியுறுத்தியுள்ளார்.

 

The post சாவித்ரிபாய் ஜோதிராவ் புலே கல்வி உதவித் தொகை நிறுத்திவைப்பு: திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Savitribai Jyothirao ,DMK Parliamentary Committee ,President ,Kanimozhi ,Chennai ,DMK Parliamentary Group ,Modi ,Dinakaran ,
× RELATED சென்னை: பெண் கல்வி ஊக்குவிப்பதாக...