×

பெரம்பலூரில் குப்பையுடன் கொட்டிய 1 பவுன் செயினை கண்டுபிடித்து கொடுத்த தூய்மைப்பணியாளர்கள்

 

பெரம்பலூர், அக்.15: பெரம்பலூரில் தள்ளுவண்டி பிரியாணி கடையின் குப்பையை அள்ளிக் கொட்டும்போது ஒருபவுன் தங்கச்செயினும் குப்பையோடு சென்றதை தேடிக் கண்டு பிடித்துகொடுத்த தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பப்பட்டது. பெரம்பலூரில் கடந்த 12ஆம்தேதி காலை செந்தில் மனைவி சுகந்தி (46) என்பவர், விஜயதசமி, ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு, என்எஸ்பி சாலையில் தான் நடத்தி வந்த தள்ளுவண்டி பிரியாணி கடையில் குப்பைகளை சேகரிக்கும் பொழுது கவனக் குறைவாக தான் அணிந்திருந்த சுமார் ஒரு பவுன் தங்கச்செயின் தவறுதலாக குப்பையோடு சேர்ந்ததை, பெரம்பலூர் நகராட்சிக்கான குப்பைகள் சேகரிக்கும் வாகனத்தில் கொட்டிவிட்டார்.பின்னர் நகையை காணாமல் தேடிப் பார்த்து விட்டு குப்பையோடு சேர்ந்திருக்கலாம் என உறுதிப்படுத்திக்கொண்டு,பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று நகராட்சியின் துப்புறவு மேற்பார்வையாளர்கள் கோபி, விநாயகம் ஆகியோரிடம்தனது தங்கச் செயினை காணவில்லை, தனது கடையின் குப்பைகளைக் குனிந்து கூட்டி அள்ளிக் கொட்டும் போது குப்பையோடு சேர்ந்திருக்கலாம், எனவே குப்பைக் கிடங்கில் தேடிப் பார்க்கும்படி அழுதுள்ளார்.

இதனைத் தொடந்து நகராட்சியின் துப்புரவு ஆய்வாளர்கள் மோகன், பன்னீர் செல்வம் ஆகியோரிடம் தெரிவித்து விட்டு, தூய்மைப் பணியாளர்களான சின்ன முத்து மகன் தர்மலிங்கம் (50), சின்னசாமி மகன் மாரி முத்து (51), காளியப்பன் மகன் ஜெகநாதன் (50) ஆகிய மூவரையும் அழைத் துச் சென்று காணாமல் போன தங்கச் செயினை குப்பை கிடங்கில் தேடிக் கண்டுபிடித்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் ஒப்ப டைத்தனர்.

பின்னர் பெரம்பலூர் போலீஸ் ஸ்டேசன் எஸ்எஸ்ஐ செல்வராஜ் முன்னிலையில் காணாமல் போன செயினை உரிமையாளரிடம் ஒப்படைத்து, பின்னர் மீட்டுக் கொடுத்த நகராட்சி பணியாளர்களுக்கு காவல் நிலையம் சார்பில் வெகுமதி அளிக்கப்பட்டது. நகையைக் கண்டு பிடித்துக் கொடுத்த நகராட்சி ஊழியர்களுக்கு பெரம்பலூர் நகராட்சித் தலைவர் அம்பிகா ராஜேந்திரன், நகராட்சி ஆணையர் ராமர் ஆகியோர் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

The post பெரம்பலூரில் குப்பையுடன் கொட்டிய 1 பவுன் செயினை கண்டுபிடித்து கொடுத்த தூய்மைப்பணியாளர்கள் appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Senthil ,Sukanti ,
× RELATED மக்காச்சோளம் விதைப்பில் பெண்கள் மும்முரம்