×

குறைந்த விலைக்கு பொருட்கள் ஆர்டர் செய்து ஆன்லைனில் ரூ.2.32 கோடியை இழந்த இளைஞர்கள், மாணவர்கள்

 

புதுச்சேரி, அக். 16: புதுச்சேரியில் ஆன்லைனில் குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கிறது என்ற ஆசையில் பல்வேறு பொருட்களை ஆர்டர் செய்து ரூ.2.30 கோடியை இழந்துள்ளதாக சைபர் கிரைமில் கடந்த 9 மாதங்களில் 830 புகார்கள் பெறப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொதுமக்கள் தங்கள் வீட்டில் இருந்து கொண்டே ஆன்லைனில் பொருட்களை வாங்குவது கடந்த மூன்று ஆண்டுகளில் ஐந்து மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.

அதில் குறிப்பிடத்தக்க இணையதளமான அமேசான், டாட்டாகிளிக், ஏஜியோ, பிளிப்கார்ட் போன்ற வலைய தளங்கள் ஆகும். தற்போது இருக்கின்ற இணையதள வசதிகளில் நாம் வீட்டிலிருந்தே அனைத்து பொருட்களையும் வாங்குவதற்கு வலைதளங்கள் வந்துவிட்டது. இந்நிலையில் மேலே குறிப்பிட்ட மிகப்பெரிய வலைதளங்களில் சென்று ஏதேனும் ஒரு பொருளை வாங்க தேடி பார்த்துவிட்டு பிறகு வாங்கிக் கொள்ளலாம் என்று இணையதளத்தில் இருந்து வெளியே வந்து விடுகிறோம்.

அதன்பிறகு, நாம் பயன்படுத்தும் வலைதளங்களில் எந்த பொருட்களை தேடினோமோ, அதே பொருள் மிக மிக குறைந்த விலையில் உங்களுக்கு தருகின்றோம் என்று பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்கள் மூலமாக நமக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக பிளிப்கார்ட்டில் ரூ.900க்கு நாம் தேடிய ஒரு டிரஸ், இன்ஸ்டாகிராமில் ரூ.215 என்று சமூக வலைதளங்கள் மூலமாக நமக்கு விளம்பரம் வருகிறது. உடனடியாக அதே ஆடை அதே பிராண்ட் அதே கலர் மிக குறைந்த விலையில் கிடைக்கிறது என நம்பி ஆர்டர் செய்தால் நமக்கு எந்த பொருளும் வராது.

இதுபோன்று கடந்த 9 மாதங்களில் மட்டும் 830 புகார்கள் வந்துள்ளது. பெரும்பாலும் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் இதுபோன்ற குறைந்த விலையில் கிடைக்கிறது என்று சமூக வலைதளங்களில் ஆர்டர் செய்து பணத்தை இழந்து வருகின்றனர். மேலும், சமூக வலைதளங்களில் மொத்தமாக ஹோல் சேலில் ஆடைகள் விற்பனை செய்கிறோம். பல்வேறு பொருட்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு எடுத்துக்காட்டாக லிப்ட் மிஷினரி பொருட்கள், மோட்டார் உதிரி பாகங்கள், நிறுவனங்களுக்கு தேவையான பொருட்கள் போன்றவற்றை மார்க்கெட் விலையை விட பாதி விலைக்கு, ஹோல் சேல் விலைக்கு தருகிறோம் என்று விளம்பரம் செய்யப்படுகிறது,

அந்த நிறுவனங்களைப் பற்றிய எந்த விவரங்களையும் விசாரிக்காமல் சரி பார்க்காமல் அவர்களுடைய சமூக வலைதள விளம்பரத்தை மட்டும் நம்பி பொதுமக்கள் அவர்களிடம் ஆர்டர் செய்து அவர்களிடமிருந்து எந்த பொருளோ அல்லது அவர்களை மீண்டும் தொடர்பு கொள்ள முடியாமல் அதிக அளவில் பணத்தை இழக்கிறார்கள்.

எனவே, பொதுமக்கள் சமூக வலைதளங்களில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ்அப், டெலிகிராம் போன்றவற்றில் வருகின்ற குறைந்த விலை பொருட்களை நம்பி ஆர்டர் செய்தால் 100% நீங்கள் ஏமாற்றப்படுவீர்கள். இணைய வழி மோசடிக்காரர்களிடம் சிக்காமல் இருக்க புதுச்சேரி இணைவழி போலீசார் அறிவுறுத்துகின்றோம். இணைய வழியில் வருகின்ற விளம்பரங்களை நம்பி எந்த பொருட்களையும் ஆர்டர் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post குறைந்த விலைக்கு பொருட்கள் ஆர்டர் செய்து ஆன்லைனில் ரூ.2.32 கோடியை இழந்த இளைஞர்கள், மாணவர்கள் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை...