×

இருக்கும் இடங்களுக்கு ஏற்பத்தான் பணியாளர்களை தேர்வு செய்ய முடியும்; அன்புமணி விமர்சனத்திற்கு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பதிலடி

சென்னை: “இருக்கும் இடங்களுக்கு ஏற்பத்தான் பணியாளர்களை தேர்வு செய்ய முடியும். முந்தைய சராசரி அளவைவிட அதிகமாகதான் குருப் 4 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்” என பாமக தலைவர் அன்புமணியின் விமர்சனத்திற்கு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “‘லட்சக்கணக்கில் காலியிடங்களை வைத்துக் கொண்டு ஆண்டுக்கு டி.என்.பி.எஸ்.சி குருப் 4 தேர்வுக்கு 4,466 இடங்களை நிரப்புகிறார்கள்’ என அறிக்கை விட்டிருக்கிறார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். தமிழ்நாட்டில் அரசுப் பணியிடங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு ஏற்ற வகையில்தான் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். தேவைக்கு ஏற்ப அல்லது புதிய துறைகள் திட்டங்கள் வரும்போது மற்றும் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் அரசு பணியிடங்களின் எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட அளவு உருவாகும்.

இதன்படி ஒவ்வொரு ஆண்டும் உருவாகும் காலி பணியிடங்களின் தேவைக்கேற்ப அரசுப் பணியாளர்களை தேர்வு செய்யப்படுகிறது ’குருப் 4 இடங்களை 15 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும்’ என் சொல்கிறார் திரு அன்புமணி ராமதாஸ் அவர்கள். அந்த 15 ஆயிரம் பேருக்கு போதுமான எண்ணிக்கையில் தேவையான பணியிடங்கள் காலியாக இருக்க வேண்டும் என்பது நிர்வாக விதி. இதை டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறியாதவர் அல்லர். ’குருப் 4 காலியிடங்களின் எண்ணிக்கையை வெறும் 2,208 மட்டுமே உயர்த்தி டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு வெளியிட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது’ என்கிறார் திரு அன்புமணி ராமதாஸ். இருக்கும் இடங்களுக்கு ஏற்பத் தான் பனியாளர்களை தேர்வு செய்ய முடியும்.

2015-16, 2016-17, 2017-18 ஆகிய நிதியாண்டுகளுக்கு காலியான குருப் 4 பணியிடங்களுக்கு 2017-ல் தேர்வானவர்கள் 11,949 பேர். 2018-19, 2019-20 ஆகிய நிதியாண்டுகளுக்கு காலியான குருப் 4 பணியிடங்களுக்கு 2019-ல் தேர்வானவர்கள் 9684 பேர். 2020-21, 2021-22, 2022-23 ஆகிய நிதியாண்டுகளுக்கு காலியான பணியிடங்களுக்கு 2022-ல் தேர்வானவர்கள் 10,139 பேர். இதன்படி பார்த்தால், ஒவ்வொரு நிதியாண்டுக்கும் சராசரியாக 3,972 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

ஆனால், இப்போது 2023-24, 2024-25 ஆகிய நிதியாண்டுகளுக்கு காலியான இடங்களை நிரப்ப 8,932 பேர்களை தேர்வு செய்ய போகிறோம். இது முந்தைய சராசரி அளவான 3,972விட அதிகம். அதாவது சராசரியாக 4,466 பேர்கள் இப்போது தேர்வு செய்யப்படுவார்கள். இங்கே இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். முந்தைய அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர் பணி ஓய்வு வயது 58-ல் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டது. ஆனாலும் கூட முந்தைய ஆண்டுகளைவிட அதிக எண்ணிக்கையில்தான் பணியார்களை தேர்வு செய்கிறது டி.என்.பி.எஸ்.சி.

’இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விஷயத்தில் தமிழக அரசு காட்டும் அக்கறையின்மை கண்டிக்கத்தக்கது’ என சொல்லியிருக்கிறார் திரு அன்புமணி ராமதாஸ் அவர்கள். இளைஞர்கள் மீது அக்கறை கொண்டதால்தான், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த மூன்று ஆண்டுகளில் அரசுத் துறைகளில் 68,039 இளைஞர்களுக்கும், தனியார் நிறுவனங்களில் 5,08,055 இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்தியா மட்டுமல்ல, உலகின் பெரிய நிறுவனங்களும் முதலீடு செய்யும் முகவரியாக தமிழ்நாட்டை திமுக அரசு மாற்றியதால்தான் கடந்த 3 ஆண்டுகளில் 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகளை ஈர்த்து, 31 லட்சம் பேர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம்.

அதோடு நிற்காமல் உலகின் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து, முதலீடுகளை தமிழக அரசு ஈர்த்து வருகிறது. முதலீடுகளை ஈர்ப்பது மட்டுமல்ல, அதை விரைந்து செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு கூடிய அமைச்சரவை கூட்டத்தில் 38 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 14 புதிய முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 46 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இப்படி இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு வேண்டிய அத்தனை முயற்சிகளையும் தமிழக அரசு முன்னெடுக்கிறது.

ஓராண்டுக்கு மேலாக யாரும் நியமிக்கப்படாத நிலையில் டி.என்.பி.எஸ்.சி தலைவர் பதவியை நிரப்ப வேண்டும் என்ற நோக்கில், ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவை தேர்வு செய்து, பரிந்துரையை கவர்னர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பினோம். ஆனால், அவர் காலம் தாழ்த்தி திருப்பி அனுப்பினார். ஆளுநர் எழுப்பிய கேள்விகளுக்கு அரசு விளக்கம் அளித்தும் ஆளுநர் செவிசாய்க்கவில்லை. கடைசியில் போராடி தேர்வாணையத்தின் தலைவராக எஸ்.கே.பிரபாகர் கடந்த மாதம்தான் நியமிக்கப்பட்டார். அப்போது ஆளுநர் முட்டுக்கட்டை போட்டபோது ஆளுநரை கண்டித்து அறிக்கை விடாத அன்புமணி அவர்கள், குருப் 4 பணியிடங்களுக்கு ஏன் கவலைப்படுகிறார்? ராஜ்பவனில் அமர்ந்து கொண்டு தேர்ந்தெடுத்த அரசுக்கு எதிராக செயல்பட்டு கொண்டிருக்கும் ஆளுநரை கண்டித்தால் கூட்டணி கட்சியான பாஜக கோபித்து கொள்ளும் என்ற கவலையில் கடிதோச்சி மெல்ல எறிக பாணியில் அரசியல் நடத்தும் அன்புமணி டி.என்.பி.எஸ்.சி பற்றி எல்லாம் பேசலாமா?

டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டால் ஒழுங்கா படிச்சு எக்ஸாம் எழுதின ஆயிரக்கணக்கானோரின் வேலைவாய்ப்புகள் அ.தி.மு.க ஆட்சியில் பறிபோயின. 2011-ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக நடந்த முறைகேட்டின் உச்சமாக 2019 செப்டம்பரில் நடந்த குரூப்-4 தேர்வில், மெகா முறைகேடுகள் அரங்கேறின. அப்போதெல்லாம் அன்புமணி எங்கே போனார்? போலீஸ் எஸ்.ஐ. சித்தாண்டியும் சென்னை முகப்பேரைச் சேர்ந்த ஜெயக்குமாரும் இடைத் தரகர்களாகச் செயல்பட்டு கோடிக்கணக்கில் பணத்தை வசூலித்து நூற்றுக்கணக்கானவர்களுக்கு பணியிடங்கள் பெற்றுத் தந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது எல்லாம் நினைவில் இல்லையா? முந்தைய ஆட்சியில் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கான கேள்வித் தாள்கள் இடைத் தரகர்களுக்குக் கைமாறின. இப்படியான முறைகேடுகள் எல்லாம் நடக்காமல் டி.என்.பி.எஸ்.சி-யை சிறப்பாக வழிநடத்தி திமுக அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

The post இருக்கும் இடங்களுக்கு ஏற்பத்தான் பணியாளர்களை தேர்வு செய்ய முடியும்; அன்புமணி விமர்சனத்திற்கு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பதிலடி appeared first on Dinakaran.

Tags : Minister ,Kayalvizhi Selvaraj ,Anbumani ,Chennai ,Minister of Human Resource Development ,Bhamaka ,President ,Grup ,Anpumani ,
× RELATED கலைஞர் நூற்றாண்டு பூங்கா நுழைவுக்...