×

2025ம் ஆண்டு நடைபெறும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான ஓராண்டு கால அட்டவணை வெளியீடு: குரூப் 4 தேர்வு அறிவிப்பு ஏப்ரல் 25ல் வெளியாகிறது

சென்னை: டிஎன்பிஎஸ்சியின் 2025ம் ஆண்டுக்ாகன ஓராண்டு தேர்வு கால அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்கும் குரூப் 4 பதவிகளுக்கான அறிவிப்பு ஏப்ரல் 25ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தமிழக அரசு துறைகளில் குரூப் 1, குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வருகிறது. ஓராண்டில் எந்தெந்த பணிகளுக்கு என்னென்ன தேர்வுகள் நடத்தப்படும், அதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும், தேர்வு எப்போது நடத்தப்படும், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் ஆகிய விவரங்கள் அடங்கிய ஓராண்டு கால தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இது தேர்வர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு படிப்பதற்கு உதவியாக இருந்து வருகிறது.

அதன்படி, 2025ம் ஆண்டுக்கான அட்டவணையை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. அந்த அட்டவணையில், அடுத்த ஆண்டில் 7 விதமான தேர்வுகளை நடத்துவது தொடர்பான அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. அதாவது, குரூப் 1 பதவிகளுக்கான தேர்வு அறிவிப்பு 2025 ஏப்ரல் மாதம் 1ம் தேதி வெளியிடப்பட்டு, முதல்நிலைத் தேர்வு ஜூன் மாதம் 15ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கானோர் போட்டியிடக்கூடிய குரூப் 4 பதவிகளுக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் 25ம் தேதி வெளியிடப்பட்டு, தேர்வு ஜூலை மாதம் 13ம் தேதி நடத்தப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான (நேர்முகத் தேர்வுடன் கூடிய) தேர்வு குறித்த அறிவிப்பு மே மாதம் 7ம் தேதியும், தேர்வு ஜூலை மாதம் 21ம் தேதியும் நடைபெறும். ஒருங்கிணைந்த தொழில்நுட்ப

பணிகளுக்கான (நேர்முகத்தேர்வு அல்லாத) தேர்வு குறித்த அறிவிப்பு மே மாதம் 21ம் தேதி வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் 4ம் தேதி தேர்வு நடத்தப்படும். டிப்ளமோ, ஐ.டி.ஐ. தரத்திலான தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு ஜூன் மாதம் 13தேதியும், எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் 27ம் தேதியும் நடத்தப்பட உள்ளது. குரூப்-2, 2 ஏ பதவிகளுக்கான அறிவிப்பு ஜூலை மாதம் 15ம் தேதியும், முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 28ம் தேதியும், ஒருங்கிணைந்த சிவில் பணிகளுக்கான குரூப்-5ஏ தேர்வுக்கான அறிவிப்பு அக்டோபர் 7ம் தேதியும், அவர்களுக்கான தேர்வு டிசம்பர் 21ம் தேதியும் நடத்தப்பட உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது. இந்த அட்டவணையில் மேலும் தேர்வு குறித்த அறிவிப்புகள் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு பதவிக்கும் எவ்வளவு காலி இடங்கள் உள்ளன என்பது பற்றிய அறிவிப்பு, அதற்கான அறிவிப்பாணை வெளியிடும்போது தெரிவிக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

 

The post 2025ம் ஆண்டு நடைபெறும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான ஓராண்டு கால அட்டவணை வெளியீடு: குரூப் 4 தேர்வு அறிவிப்பு ஏப்ரல் 25ல் வெளியாகிறது appeared first on Dinakaran.

Tags : TNPSC ,CHENNAI ,Tamil Nadu Public Service Commission ,Tamil Nadu Government Departments… ,
× RELATED தொழில்நுட்ப பணிகள் தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி தகவல்