×

ஆயுத பூஜை கொண்டாட்டம் களைக்கட்டியது; தமிழகம் முழுவதும் பஜார் வீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்

சென்னை: நவராத்திரி விழா அன்னை அம்பிகையின் அருள் வேண்டி கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் ஒன்பதாவது நாள் ஆயுத பூஜையும், பத்தாவது நாள் விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. அதன்படி ஆயுத பூஜை நாளை கொண்டாடப்படுகிறது. இதற்காக வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் கடவுளுக்கு பழங்கள், பூக்கள், பொரி போன்ற பொருட்கள் வைத்து வழிபடுவது வழக்கம். இதற்காக சென்னையில் கோயம்பேடு, மயிலாப்பூர், புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் விற்பனை நேற்றே விறுவிறுப்பாக தொடங்கியது. ஆயுத பூஜைக்கு முந்தைய தினமான இன்று காலை சென்னை உள்பட நகரின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. காலை 11 மணி வரை இந்த மழை நீடித்தது. இதனால் ஆயுதபூஜை விற்பனை சற்று தொய்வு ஏற்பட்டது. 11 மணிக்கு பிறகு ெவயில் அடிக்க தொடங்கியது. தொடர்ந்து கோயம்பேடு, மயிலாப்பூர், புரசைவாக்கத்தில் பொருட்களை வாங்க மக்கள் வரத் தொடங்கினர். இதனால், விற்பனை களை கட்ட தொடங்கியது. மாலையில் விற்பனை மேலும் விறுவிறுப்படைந்தது. இதனால், பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆயுத பூஜை என்பதால் பழங்கள், பூக்கள் விற்பனை கிடு, கிடுவென உயர்ந்தது.

அதாவது கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் ஆப்பிள் ஒரு கிலோ ரூ.130லிருந்து ரூ.180 வரையும், சாத்துக்குடி ரூ.80லிருந்து ரூ.120 வரையும், மாதுளை ரூ.300க்கும், கொய்யா ரூ.100க்கும், ஆரஞ்சு ரூ.75க்கும் விற்கப்பட்டது. சில்லரை கடைகளில் பழங்கள் விலை ரூ.20 முதல் ரூ.25 வரை அதிகமாக விற்கப்பட்டது. தேங்காய் ரூ.25லிருந்து ரூ.30க்கும் விற்கப்பட்டது. இதே போல, பொரி ஒரு படி ரூ.25 முதல் ரூ.30, உடைத்த கடலை கிலோ ரூ.100, அவல் சிறிய ரகம் கிலோ ரூ.120, வாழைக்கன்று இரண்டு ரூ.40, மாவிலை தோரணம் இரண்டு ரூ.20, வெள்ளை பூசணி ரூ.50 முதல் ரூ.100 வரை, தென்னை குருத்தோலை தோரணம் இரண்டு ரூ.30, ரூ.40 ஆகவும் விற்கப்பட்டது. கரும்பு கட்டு ரூ.500 க்கு விற்பனையானது. காய்கறி விலைகளில் எந்தவித மாற்றம் இல்லாமல் பழைய விலைக்கே விற்கப்பட்டது.

பூ விலை கிடு,கிடு உயர்வு: கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை இரண்டு மடங்கு அதிகரித்து காணப்பட்டது. அதாவது ஒரு கிலோ மல்லி ரூ.1000க்கும், ஐஸ் மல்லி ரூ.800க்கும், கனகாம்பரம் ரூ.1100க்கும் ஜாதி மல்லி மற்றும் முல்லை ரூ.500க்கும் சாமந்தி ரூ.260க்கும், சம்பங்கி ரூ.500க்கும், பன்னீர் ரோஸ் ரூ.180க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.350க்கும், அரளி பூ ரூ.500க்கும் விற்பனை செய்யப்பட்டது. சில்லரை விற்பனையில் பூ விலை மொத்த விலையை விட ரூ.25 வரை அதிகமாக விற்பனையானது. இதே போல் அனைத்து பூஜை பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்தது. விலை அதிகரித்த போதிலும், விலையை பற்றி கவலைப்படாமல் பொருட்களை பொதுமக்கள் வாங்கினர்.

பஸ், ரயில்களில் கூட்டம்: நாளை ஆயுத பூஜை, நாளை மறுநாள் விஜய தசமி விடுமுறை நாளாகும். 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை தினம் வருகிறது. இந்த நிலையில், சென்னையில் வசிப்போர் மற்றும் தங்கி படிக்கும் மாணவர்கள் விடுமுறைைய கழிக்க சொந்த ஊர்களுக்கு இன்று காலை முதலே புறப்பட தொடங்கினர். இதனால் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது. மாலை நேரத்தில் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டியில் நிற்க கூட முடியாத அளவுக்கு நெரிசலில் மக்கள் பயணம் செய்ததை காண முடிந்தது. அதே நேரத்தில் பஸ்களில் செல்வபவர்கள் காலை முதல் கோயம்பேடு பஸ் நிலையத்தில் குவிய தொடங்கினர். இதே போல் பூந்தமல்லி, தாம்பரம் உள்ளிட்ட இடங்களிலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

கூடுதலாக 2000 பஸ்கள் இயக்கம்: சென்னையில் இருந்து வழக்கமாக வெளியூர்களுக்கு ஒரு நாளைக்கு 2100 பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஆயுதபூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து நேற்று கூடுதலாக 500 பஸ்கள் இயக்கப்பட்டன. இன்று கூடுதலாக 2000 பஸ்கள் இயக்கப்படுகிறது. இதே போல தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா தலங்களிலும் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்படுகிறது. இதனால், அந்த பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் நிரம்பி வழிகின்றன.

The post ஆயுத பூஜை கொண்டாட்டம் களைக்கட்டியது; தமிழகம் முழுவதும் பஜார் வீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Ayudha Puja ,Tamil Nadu ,Chennai ,Navratri ,Ambikai ,Vijayadashami ,God ,
× RELATED மலேசியாவுக்குப் புறப்பட்ட...