×

தமிழ்நாட்டில் செப்.26, 28, 29 தேதிகளில் கனமழை.. முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு அறிவுறுத்தல்!!

சென்னை: கனமழையை திறம்பட எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. நிவாரண முகாம்களையும் தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, திண்டுக்கலில் பேரிடர் மீட்புக்குழுவினர் முகாமிட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் மாவட்டங்களில்மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.

தமிழ்நாட்டில் நாளை மறுநாள் 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. கோவை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் செப்.29-ல் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

உள் தமிழக மாவட்டங்களில் அடுத்த 2 தினங்களுக்கு (26.09.2024 மற்றும் 27.09.2024) அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:
26.09.2024: மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்:
26.09.2024: தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்:
26.09.2024 முதல் 30.09.2024 வரை: தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 இலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

The post தமிழ்நாட்டில் செப்.26, 28, 29 தேதிகளில் கனமழை.. முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு அறிவுறுத்தல்!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Government of Tamil Nadu ,Nilgiri ,Goa ,Dindigul ,
× RELATED கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை;...