×

கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் நெல்லையில் அரசுத்துறை அலுவலர்கள் சமூகநீதிநாள் விழிப்புணர்வு உறுதிமொழி

நெல்லை : நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் அரசு ஊழியர்கள் சமூகநீதிநாள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.நெல்லை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் மனுக்களை பதிவு செய்வதற்கு கோரிக்கையின் தன்மைக்கேற்ப 8 தனித்தனி பிரிவுகள் அமைக்கப்பட்டு மனுக்கள் பதிவு செய்யப்பட்டன. பதிவு செய்யப்பட்ட மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அளிக்கும் வகையில் கலெக்டர் அலுவலக தரைத்தளத்தில் உள்ள குறை தீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் தனித்தனி பிரிவுகள் அமைக்கப்பட்டிருந்தது.

முக்கிய கோரிக்கைகள் மற்றும் பொது பிரச்னைகள் தொடர்பான மனுக்களை கலெக்டர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரிடம் அளிக்க வசதிகள் செய்யப்பட்டிருந்தது. மேலும் வாழ்வாதாரம் தொடர்பான கோரிக்கை மனுக்கள் உடனுக்குடன் கலெக்டர் அலுவலக மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டரங்கிற்கு அருகில் அமைந்துள்ள வாழ்வாதார வழிகாட்டி மையத்திற்கு அனுப்பி தீர்வு காணப்பட்டது.

குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகேயன் மாற்றுத்திறனாளிகள் இருக்கைக்கு சென்று கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு அவர்களது கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

முன்னதாக, கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் அரசு அலுவலர்கள் சமூகநீதி நாள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, மகளிர் திட்ட இயக்குநர் இலக்குவன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மகேஸ்வரன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் ஜெயா மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் நெல்லையில் மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஷ்குமார் மீனா தலைமையில் போலீசார் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் என சுமார் 80 பேர், கமிஷனர் அலுவலக வளாகத்தில் சமூகநீதிநாள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் போலீஸ் துணை கமிஷனர்கள் கீதா, அனிதா, விஜயகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி. சிலம்பரசன் தலைமையில் சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட கூடுதல் எஸ்பி சங்கர், மாவட்ட குற்ற ஆவண காப்பாக டிஎஸ்பி பொன்.ரகு, மாவட்ட மது விலக்கு அமலாக்கப்பிரிவு டிஎஸ்பி மீனாட்சிநாதன் மற்றும் அமைச்சு பணியாளர்கள், போலீசார் ஆகியோர் சமூக நீதிநாள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.

அதாவது ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற அன்பு நெறியையும், ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழிமுறைகளாகக் கடைபிடிப்பேன். சுயமரியாதை ஆளுமை திறனும், பகுத்தறிவு பார்வையும் கொண்டவையாக என்னுடைய செயல்படுகள் அமையும், சமத்துவம், சகோதரத்துவம் சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன். சமூக நீதியை அடித்தளமாக கொண்ட சமுதாயம் அமைத்திட இந்நாளில் உறுதிஏற்கிறேன் என நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் கூறி விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.

The post கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் நெல்லையில் அரசுத்துறை அலுவலர்கள் சமூகநீதிநாள் விழிப்புணர்வு உறுதிமொழி appeared first on Dinakaran.

Tags : Collector ,Karthikeyan ,Nellai ,People's Grievance Day ,
× RELATED நெல்லை மாவட்டத்தில் மானூர்,...