×

தக்கலையில் காருக்கு வழிவிடாததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம் கோழிப்பண்ணை உரிமையாளர் வீட்டை சூறையாடிய கும்பல்

*3 பேர் படுகாயம்,10 பேர் மீது வழக்குப்பதிவு

குமாரபுரம் : தக்கலை அருகே காருக்கு வழிவிடாததை தட்டிக்கேட்ட கோழிப்பண்ணை உரிமையாளரை பின்தொடர்ந்து சென்று அவரை தாக்கியதோடு, அவரது வீட்டையும் சூறையாடிய 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.தக்கலை அருகே கோழிப்போர்விளை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். சொந்தமாக கோழிப்பண்ணை வைத்துள்ளார். நேற்றுமுன்தினம் இரவு ராஜேஷ் தனது கோழிப்பண்ணையில் இருந்து புறப்பட்டு காரில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது சிறிது தூரத்தில் சாலையை வழிமறித்தவாறு சிலர் பைக்கை நிறுத்தியிருந்ததை ராஜேஷ் கண்டார். அந்த கும்பலில் ராஜேஷ் வீட்டின் அருகே வசித்துவரும் வினித் உள்பட 10 பேர் இருந்தனர். அவர்கள் ஒன்றாக மது அருந்திக்கொண்டு அட்டகாசம் செய்துகொண்டிருந்தனர். கம்பி, வெட்டுக்கத்திகளையும் உடன் வைத்திருந்தனர். கார் செல்வதற்கு இடம் இல்லாததால் ராஜேஷ் அந்த கும்பலிடம் வழிவிடுமாறு கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த ரவுடி கும்பலுக்கும், ராஜேஷுக்குமிடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் அந்த கும்பல் வழிவிட்டதை தொடர்ந்து ராஜேஷ் அங்கிருந்து சென்றுவிட்டார். ஆனாலும் வினித்துக்கு ஆத்திரம் அடங்கவில்லை. இதனால் வினித் உள்பட 10 பேரும் கையில் கம்பி, வெட்டுக்கத்தியுடன் ராஜேஷை பின்தொடர்ந்து அவரது வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர். தொடர்ந்து அந்த கும்பல் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து ஜன்னல் கண்ணாடி, கதவுகளை அடித்து நொறுக்கினர். சத்தம்கேட்டு ஓடிவந்த ராஜேஷ் மற்றும் வீட்டில் வேலைபார்க்கும் பணியாளர்கள் பாபு, ஷைஜூ ஆகியோரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அவர்கள் இருவரும் படுகாயமடைந்தனர்.

அதேபோல் கும்பலுடன் வந்திருந்த சிங் என்பவரும் காயமடைந்தார். ஆனாலும் வெறி அடங்காத கும்பல் வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ராஜேஷுக்கு சொந்தமான கார் கண்ணாடியையும் அடித்து நொறுக்கிவிட்டு தப்பி சென்றுள்ளது.ராஜேஷ், பாபு மற்றும் ஷைஜூ ஆகிய மூன்று பேரும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து ராஜேஷ் அளித்த புகாரின் பேரில் வினித் உள்பட 10 பேர் கொண்ட கும்பல் மீது தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். இதில் வினித் என்பவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post தக்கலையில் காருக்கு வழிவிடாததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம் கோழிப்பண்ணை உரிமையாளர் வீட்டை சூறையாடிய கும்பல் appeared first on Dinakaran.

Tags : Takala ,Kumarapuram ,Thakkale ,Dinakaran ,
× RELATED அழகியமண்டபம் சந்திப்பில் நடுரோட்டில் காரை நிறுத்தி போதை ஆசாமி ரகளை