×

பொன்னேரி அருகே சாலை துண்டிப்பால் தவிக்கும் கிராமங்கள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

 

பொன்னேரி, செப்.10: பழவேற்காடு-தோனிரேவு சாலை துண்டிக்கும் நிலையில் இருப்பதால், விரைவில் நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த கோட்டைக்குப்பம் ஊராட்சியில் தோணிரேவு, ஜமீலாபாத், செஞ்சி அம்மன் நகர், திடீர் நகர் என 4 கிராமங்கள் உள்ளன. சுமார் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கும் இப்பகுதிக்குச் செல்வதற்கு ஒட்டுமொத்த மக்களும் பயன்படுத்தும் ஒரே சாலை பழவேற்காட்டிலிருந்து தோணிரேவு, ஜமிலாபாத் பகுதிக்குச் செல்லும் சிமென்ட் சாலையாகும்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இந்த சிமென்ட் சாலை தரமான சாலையாக இருந்தது. ஆனால் மழையால் சாலையை சுற்றிலும் இரு பக்கமும் அரிப்பு ஏற்பட்டு முற்றிலும் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளது. அதன் ஒரு பகுதியாக கடந்த 2 மாதத்திற்கு முன்பு சாலையின் ஒரு பகுதியில் சிறு துளை போன்று ஒரு ஓட்டை ஏற்பட்டது. ஓட்டை நாளடைவில் பெரிய பள்ளமாக மாறியது. இந்தச் சாலையில் பள்ளி பேருந்துகள், தண்ணீர் டேங்க் வாகனங்கள், வீடுகளுக்கு கட்டுமான பொருட்களை ஏற்றி வரும் லாரிகள், திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்லக்கூடிய வேன்கள் என 4 சக்கர வாகனங்களும், ஆட்டோ போன்ற பல்வேறு வாகனங்களும் நிமிடத்துக்கு ஒன்றாக சென்று வருகின்றன.

நான்கு சக்கர வாகனங்கள் அவ்வழியாகச் செல்லும்போது ஓட்டையில் விரிசல் பெரிதாகி வருகிறது. தற்போது யாரும் விழாதவாறு கற்களை கொட்டி ஓட்டையை அடைக்க அப்பகுதி மக்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். ஆனால், தற்போது பெய்து வரும் கோடை மழை காரணமாக அது பயனளிக்காமல் சாலை முற்றிலும் சேதமடைந்து துண்டிக்கும் அபாய நிலையில் உள்ளது. இதனால், இந்த நான்கு கிராமங்களிலும் சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அரசுத்துறை அதிகாரிகள் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post பொன்னேரி அருகே சாலை துண்டிப்பால் தவிக்கும் கிராமங்கள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Ponneri ,Palavekadu-Thonirevu ,Thonirevu ,Jamilabad ,Senchi Amman Nagar ,Kotdakuppam Panchayat ,Palavekadu ,Tiruvallur District ,
× RELATED பொன்னேரி அருகே இயற்கை எரிவாயு குழாயில் உடைப்பு..!!