×

பொன்பாடி சோதனை சாவடியில் வரி, அபராதம் ₹68 லட்சம் வசூல்

திருத்தணி, ஆக. 18: திருத்தணி அருகே சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், தமிழ்நாடு – ஆந்திர மாநில எல்லையில் பொன்பாடி சோதனைச் சாவடியில் மோட்டார் வாகன ஆய்வாளர் தலைமையில் வாகன சோதனை தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. குறிப்பாக மோட்டார் வாகன சட்ட விதிகளுக்கு உட்பட்ட வாகனங்கள் இயக்கப்படுவதை உறுதிப்படுத்துவது, வெளி மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்கள் முறையாக தமிழக அரசுக்கு வரி செலுத்தப்படுவது போன்ற பணிகளில் 24 மணி நேரமும் சோதனை நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், கடந்த ஜூலை மாதத்தில் மட்டும், விதிகளை மீறி இயக்கப்பட்ட, தமிழ்நாடு மற்றும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த வாகனங்கள் மீது 1,221 வழக்குகள் பதிவு செய்து ₹29 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளி மாநில வாகனங்களிடமிருந்து வரியாக ₹15 லட்சத்து 60 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகன சட்டம் மற்றும் விதிகளை மீறி செயல்பட்ட 10 போக்குவரத்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றிற்கு அபராதம் மற்றும் வரியாக ₹2 லட்சத்து 15 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிக பாரம் ஏற்றி சென்ற 34 கனரக சரக்கு வாகனங்களுக்கு ₹9 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் ₹68 லட்சம் வருவாய் வசூலித்து 116 சதவீதம் இலக்கை அடைந்துள்ளதாக வட்டார போக்குவரத்து அலுவலர் மாதவன் தெரிவித்தார்.

The post பொன்பாடி சோதனை சாவடியில் வரி, அபராதம் ₹68 லட்சம் வசூல் appeared first on Dinakaran.

Tags : Ponbadi ,Ponpadi ,Tamil Nadu ,Andhra ,Chennai Tirupati National Highway ,Tiruthani ,Dinakaran ,
× RELATED போலி ஸ்டிக்கர் ஒட்டிய டூரிஸ்ட் வேன் பறிமுதல்: வாகன சோதனையில் சிக்கியது