×

மாவட்டத்தில் மழை குறைந்த நிலையில் பலத்த சூறாவளி காற்று வீசியதால் 50 மரங்கள் அடியோடு விழுந்தன

*மஞ்சூர் வழித்தடத்தில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக நீடித்து வந்த மழை முற்றிலும் குறைந்த நிலையில் பலத்த சூறாவளி காற்று வீசியதால் ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்தன. இவை உடனுக்குடன் அகற்றப்பட்டன. மஞ்சூர் சாலையில் லவ்டேல் அருகே விழுந்த மரங்களால் இந்த வழித்தடத்தில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

நீலகிரி மாவட்டத்தில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு இம்மாதம் கடந்த 13ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது. ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதுதவிர நீர்பிடிப்பு பகுதிகளான அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு கனமழை கொட்டியது. பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த கன மழை காரணமாக ஊட்டி – கூடலூர், ஊட்டி – இத்தலார் சாலை உள்பட முக்கிய சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு, மின் துண்டிப்பு போன்றவைகள் ஏற்பட்டன. சிறு சிறு மண் சரிவுகள் ஏற்பட்டன. கூடலூர் பகுதியில் குடியிருப்பு சுவர்களில் விரிசல் உள்பட பாதிப்புகள் ஏற்பட்டன.

இவை தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை சார்பில் உடனுக்குடன் அகற்றப்பட்டன. மரங்கள் விழுந்ததால் மின்கம்பிகள் சேதமடைந்தததால் மின் துண்டிப்பும் ஏற்பட்டது. மழை மற்றும் சூறாவளி காற்றை பொருட்படுத்தாமல் மின்வாரிய ஊழியர்கள் சீரமைத்தனர். மண்ணுக்கு அடியில் விளைய கூடிய காய்கறிகள் கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட் போன்ற பயிர்கள் அழுகக்கூடிய அபாயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவற்றை அறுவடை செய்யும் பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டினர்.

கடும் குளிர் நிலவி வருவதால், தேயிலை தோட்டங்கள், காய்கறி தோட்டங்கள் போன்றவற்றிற்கு வேலைக்கு செல்லும் கூலி தொழிலாளர்கள் பாதிப்படைந்து வருகின்றனர். குளிர் காரணமாக ஊட்டி வர கூடிய சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்துள்ளது. தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 15 நாட்களாக பெய்து வந்த கனமழை நேற்று முன்தினம் மதியம் முதல் மழை குறைந்தது.

நேற்று காலை முதல் முற்றிலும் மழையின்றி மேக மூட்டமான காலநிலை நிலவியது. அதே சமயம் காற்றின் வேகம் அதிகரித்து பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் நேற்று முன்தினம் மதியம் முதல் ஊட்டி எட்டின்ஸ் சாலை, கூடலூர் சாலை, கோத்தகிரி சாலை என சுமார் 20க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் விழுந்தன. இவற்றை தீயணைப்புத்துறையினர் வெட்டி அகற்றினர்.

இதைத்தொடர்ந்து, நேற்று அதிகாலை ஊட்டி – மஞ்சூர் சாலையில் லவ்டேல் அருகே ரைட்டர் கடை பகுதிகளில் ஒன்றன் பின் ஒன்றாக 5 கற்பூர மரங்கள் சாலையில் விழுந்தன. இதனால் இச்சாலையில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதித்தது. இவற்றை நெடுஞ்சாலைத்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் வெட்டி அகற்றினர்.
இதேபோல் கீழ் கைகாட்டி பகுதியில் மரம் விழுந்து போக்குவரத்து பாதித்தது. இவற்றை வாகன ஓட்டிகளே வாகனங்கள் செல்லும் வகையில் அப்புறப்படுத்தி சீர் செய்தனர். இதனை தொடர்ந்து ஊட்டி – மஞ்சூர் வழித்தடத்தில் சுமார் 3 மணி நேரத்திற்கு பின் போக்குவரத்து சீரடைந்தது.

லவ்டேல் பகுதியில் சாலையின் குறுக்காக விழுந்த மரம் மலை ரயில்பாதை தண்டவாளத்திலும் விழுந்தது. இதேபோல தண்டவாளத்தில் பல இடங்களிலும் மரங்கள் விழுந்தது. இதனால் பாதுகாப்பு கருதி ஊட்டி – குன்னூர் இடையே ரயில் சேவை நேற்று ரத்து செய்யப்பட்டது. நேற்று மதியம் ஊட்டி – இத்தலார் சாலையில் பர்ன்ஹில் பகுதியிலும், பஸ் நிலையம் அருகேயுள்ள மீன்வளத்துறை கட்டிடத்தின் மீதும் ராட்சத கற்பூர மரங்கள் விழுந்தன. இவற்றை தீயணைப்பு துறையினர் வெட்டி அகற்றினர்.

இதனிடையே பலத்த காற்று வீசி வருவதால் பல இடங்களில் மின் துண்டிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் பல பகுதிகளும் இருளில் மூழ்கி உள்ள நிலையில், மக்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் பலத்த சூறாவளி காற்று காரணமாக ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் நேற்று மாலை சுமார் 50க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு காலை 8.30 மணி நிலவரப்படி (மிமீ ): ஊட்டி 5.5, நடுவட்டம் 5, கிளன்மார்கன் 9, கல்லட்டி 4.5, குந்தா 2, அவலாஞ்சி 6, எமரால்டு 2, அப்பர்பவானி 2, கேத்தி 6, கோடநாடு 10, கூடலூர், பாடந்தொரை, பந்தலூர் 3, ஓவேலி 31, என மொத்தம் 108.3 மிமீ மழை பெய்தது.

The post மாவட்டத்தில் மழை குறைந்த நிலையில் பலத்த சூறாவளி காற்று வீசியதால் 50 மரங்கள் அடியோடு விழுந்தன appeared first on Dinakaran.

Tags : Manjoor route ,Ooty ,Nilgiris district ,
× RELATED காவலர்களின் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்ல வாகன சேவை