×

வார விடுமுறைகளை கட்டியது சாரல் மழையால் திற்பரப்பில் குளுகுளு சீசன்

*அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

குலசேகரம் : வாரவிடுமுறை என்பதால் நேற்று திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவ்வப்போது சாரல் மழை பெய்ததால் குளு குளு சீசன் நிலவியது.
குமரி மாவட்டத்தில் கடற்கரைக்கு அடுத்தபடியாக பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக திற்பரப்பு அருவி உள்ளது. வருடத்தின் அனைத்து நாட்களிலும் இங்கு தண்ணீர் விழுவதால் குமரியின் குற்றாலம் என பலராலும் போற்றப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி பாய்ந்தோடிவரும் கோதையாறு திற்பரப்பில் அருவியாக கொட்டுகிறது.

அதேபோல் பேச்சிப்பாறை உள்ளிட்ட அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீரும் கோதையாற்றில் பாய்ந்து வருவதால், சில நேரங்களில் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். அப்போது மட்டும் அருவியில் குளிக்க தடை விதிக்கப்படுகிறது. சமீபத்தில் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது வெள்ளப்பெருக்கு குறைந்துள்ள நிலையில் கடந்த 3 நாட்களாக அருவியில் குளிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.

நேற்று ஞாயிறு விடுமுறை என்பதால் காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் வர தொடங்கினர். ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
அதேபோல் சிறுவர் நீச்சல் குளத்திலும் குழந்தைகளுடன் பெற்றோரும் வயது வித்தியாசமின்றி குளித்தனர். அவ்வப்போது சாரல் மழையும் பெய்ததால் குளு குளு சீசன் நிலவியது. அதேபோல் அருவியின் மேல் தடாகத்தில் உள்ள தடுப்பணையில் படகு சவாரியும் களைகட்டியது. சுற்றுலா பயணிகள் படகில் அமர்ந்தவாறு கோதையாறின் கரையில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகளை கண்டு ரசித்தனர்.

The post வார விடுமுறைகளை கட்டியது சாரல் மழையால் திற்பரப்பில் குளுகுளு சீசன் appeared first on Dinakaran.

Tags : Gluklu season ,Dilparav ,Kulasekaram ,Tilparapu ,Glu Glu ,Dilparapu ,Kumari district ,Glugulu season ,Dinakaran ,
× RELATED குலசேகரம் அருகே பரிதாபம் நீரில் மூழ்கி டிரைவர் பலி