×

அய்யப்பநாயக்கன் பேட்டையில் மல்பெரி சாகுபடி பட்டுப்புழு வளர்ப்பு பயிற்சி விவசாயிகளின் சந்தேகங்களுக்கும் அதிகாரிகள் விளக்கம்

 

ஜெயங்கொண்டம், ஜூலை 26: ஜெயங்கொண்டம் வேளாண்மை வட்டாரம் அய்யப்ப நாயக்கன் பேட்டையில் மல்பெரி சாகுபடி பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் வெண்பட்டு உற்பத்தி குறித்த விவசாயிகள் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

ஜெயங்கொண்டம் வட்டார வேளாண்மைத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மாநில விரிவாக்கத் திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின்கீழ் (அட்மா) மல்பெரி சாகுபடி மற்றும் இருதலைமுறை பட்டுப்புழு வளர்ப்பு முறை குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் அய்யப்பநாயக்கன்பேட்டை கிராமத்தில் விவசாயி ஜெயக்குமாரின் மல்பெரி சாகுபடித் திடலில் வட்டார வேளாண்மை இயக்குநர் சுப்ரமணியன் தலைமையில் நடத்தப்பட்டது.

அரியலூர் மாவட்ட பட்டு வளர்ச்சித்துறை இளநிலை உதவியாளர் ஜோதி விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்தார். மல்பெரி குச்சிகள் நடவு, நீர் நிர்வாகம், களை நிர்வாகம், இலை அறுவடை செய்தல், ஆகிய தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கினார். மேலும் கொட்டகை அமைத்தல், கொட்டகை பராமரிப்பு, இயந்திரங்கள் வாங்க அரசு வழங்கும் மானிய விபரங்கள் குறித்து விளக்கினார்.

உதவி ஆய்வாளர் மணிகண்டன் கொட்டகை அமைத்தல், பட்டுப்புழு வளர்ப்பு முறைகள், பட்டுப்புழு நோயக்கட்டுப்பாட்டு முறைகள், தீவனம் அளிக்கும் முறை, தரமான பட்டுக்கூடுகள் உற்பத்தி, வெண்பட்டு உற்பத்தி, விற்பனை வாய்ப்புகள் ஆகிய சிறப்பம்சங்கள் குறித்து விளக்கி பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் பட்டுக்கூடு உற்பத்தி குறித்த விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதிலளித்தார்.

உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் மகேஷ்குமார் உழவன் செயலியை பயன்படுத்தி இடுபொருட்கள் முன்பதிவு செய்யும் முறைகள் குறித்தும், ஆரோக்கியராஜ், அட்மா திட்ட செயல்பாடுகள் குறித்தும் விளக்கினர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டாரத் தொழில் நுட்ப மேலாளர் மீனாட்சி, இளநிலை உதவியாளர் ஜோதி, விவசாயி ஜெயகுமார் ஆகியோர் செய்திருந்தனர். அய்யப்பநாயக்கன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர்.

The post அய்யப்பநாயக்கன் பேட்டையில் மல்பெரி சாகுபடி பட்டுப்புழு வளர்ப்பு பயிற்சி விவசாயிகளின் சந்தேகங்களுக்கும் அதிகாரிகள் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Ayyappanayakkan Pettai ,Jayangondam ,Jayangondam Agricultural District ,Ayyappa Naikkan Pettai ,Jayangkondam Regional Department of Agriculture ,Ayyappanayakan ,
× RELATED தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு பூஜை