×

கள்ளழகர் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.57 லட்சம்

மதுரை, ஜூலை 26: கள்ளழகர் கோயிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இதில் ரூ.57 லட்சம் காணிக்கையாக கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஒவ்வொரு மாதமும் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம். இதன்படி நடப்பு மாதத்திற்கான உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி, நேற்று காலை கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ரூ.57 லட்சத்து 58 ஆயிரத்து 776 ரொக்கமும், 112 கிராம் தங்கம், 136 கிராம் வெள்ளி ஆகியவை கிடைத்தாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்டியல் திறப்பின் போது கோயில் அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாஜலம், கள்ளழகர் கோயில் துணை ஆணையர் கலைவாணன், திருப்பரங்குன்றம் கோயில் துணை ஆணையர் சுரேஷ், ஆய்வர் அய்யம் பெருமாள், அறங்காவலர்கள் மற்றும் கோயில் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post கள்ளழகர் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.57 லட்சம் appeared first on Dinakaran.

Tags : Kallaghar temple ,Madurai ,Alagharkoil Kallaghar Temple ,
× RELATED அலங்கார நுழைவாயில்களை...