×
Saravana Stores

நீட் தேர்வு அப்பட்டமான மோசடி பிரதமர் மோடி அமைதியாக இருப்பது ஏன்? வினாத்தாள் கசியவில்லை என்றால் பீகாரில் 13 பேர் கைது ஏன்? குஜராத் கோத்ராவில் ரூ.12 கோடி பரிவர்த்தனை ஏன்? காங்கிரஸ் கட்சி சரமாரி கேள்வி

புதுடெல்லி: நீட் தேர்வு அப்பட்டமான மோசடி. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன் என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது. நாடு முழுவதும் இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் கேள்வித்தாள் வெளியானதாகவும், பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் நீட் தேர்வில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை. கேள்வித்தாள் வெளியாகவில்லை என்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரபிரதான் நேற்றுமுன்தினம் விளக்கம் அளித்தார். இந்த விளக்கத்தை காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. நீட் தேர்வு விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன் என்று காங்கிரஸ் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நீட் தேர்வு மோசடி தொடர்பாக எழுப்பி உள்ள கேள்விகள் வருமாறு: நீட் தேர்வு மோசடி விஷயத்தில் பிரதமர் மோடி மவுனம் காத்து வருகிறார். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பு அடிப்படையில் விசாரணை நடத்தி லட்சக்கணக்கான இளம் மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும். ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தேசிய தேர்வு முகமை (என்டிஏ) மூலம் மோடி அரசின் நீட் ஊழலை மூடி மறைக்கத் தொடங்கியுள்ளார். நீட் தேர்வில் தாள் கசியவில்லை என்றால், கேள்வித்தாள் கசிந்ததாக பீகாரில் 13 குற்றவாளிகள் ஏன் கைது செய்யப்பட்டனர்? கல்வித்துறையில் உள்ள மாஃபியா கும்பலுக்கு ரூ. 30 லட்சம் முதல் ரூ. 50 லட்சம் வரை கொடுத்ததை பாட்னா காவல்துறையின் பொருளாதார குற்றப் பிரிவு அம்பலப்படுத்தவில்லையா?

குஜராத் மாநிலம் கோத்ராவில் நீட் மோசடி கும்பல் கண்டுபிடிக்கப்படவில்லையா? இதில் பயிற்சி மையம் நடத்தும் நபர், ஆசிரியர் உட்பட 3 பேர் சிக்கவில்லையா? குஜராத் காவல்துறையின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு இடையே 12 கோடி ரூபாய்க்கும் அதிகமான பரிவர்த்தனைகள் நடந்துள்ளது ஏன்?. மோடி அரசின் கூற்றுப்படி, நீட் தேர்வில் எந்தத் கேள்வித்தாள்களும் கசியவில்லை என்றால், ஏன் இந்தக் கைதுகள் செய்யப்பட்டன. இதில் இருந்து என்ன முடிவு எடுக்கப்படுகிறது? மோடி அரசு நாட்டு மக்களை முட்டாளாக்க முயற்சி செய்ததா?. அது இப்போது இருந்தா? அல்லது இதற்கு முன்பே இந்த மோசடிகள் நடந்து கொண்டு இருக்கிறதா? 24 லட்சம் இளைஞர்களின் ஆசைகளை மோடி அரசு நசுக்கியுள்ளது.

24 லட்சம் இளைஞர்கள் நீட் தேர்வில் கலந்து கொண்டு மருத்துவர்களாகும் கனவோடு சுமார் ஒரு லட்சம் மருத்துவ இடங்களுக்கு இரவு பகலாக கடுமையாக உழைக்கிறார்கள். இந்த 1 லட்சம் இடங்களில், 55,000 இடங்கள் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள். ஆனால் மோடி அரசு தேசிய தேர்வு முகமையை தவறாகப் பயன்படுத்தி, மதிப்பெண்கள் மற்றும் தரவரிசைகளை பெருமளவில் மோசடி செய்துள்ளது.
ஒதுக்கப்பட்ட இடங்களுக்கான கட்-ஆப் அதிகரித்துள்ளது. சலுகை மதிப்பெண்கள் வழங்கியது, கேள்வித்தாள் கசிவு, தேர்வு மோசடி ஆகிய விளையாட்டுகள் மூலம் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை அரசு சலுகைக் கட்டணத்தில் சீட் பெறுவதைத் தடுக்கும் விளையாட்டை மோடி அரசு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறுகையில்,’ புதிய பாஜ அரசு பதவியேற்றவுடன் மீண்டும் இளைஞர்களின் கனவுகளைத் நசுக்கத் தொடங்கியுள்ளது. நீட் தேர்வு முடிவுகளில் நடந்த முறைகேடுகள் குறித்து கல்வி அமைச்சரின் திமிர்த்தனமான பதில் 24 லட்சம் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களின் அழுகையை முற்றிலும் புறக்கணிக்கிறது. பொது தளத்தில் உள்ள உண்மைகளை கல்வி அமைச்சர் கண்டுகொள்ளவில்லையா?. பீகார் மற்றும் குஜராத்தில் காவல்துறையின் நடவடிக்கைகள் மூலம் நீட் தேர்வு மோசடிகளை அம்பலப்படுத்தியது தவறானது என்று அரசு கருதுகிறதா? இந்த முறை நீட் தேர்வில் 67 பேர் முழு மதிப்பெண் பெற்றதும் பொய்யா? லட்சக்கணக்கான இளைஞர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை புறக்கணித்து இந்த அமைப்பில் யாரைக் காப்பாற்ற அரசு விரும்புகிறது என்பதுதான் கேள்வி. பாஜ அரசு தனது ஈகோவை கைவிட்டு இளைஞர்களின் எதிர்காலம் குறித்து தீவிரமாக சிந்தித்து தேர்வுகளில் நடக்கும் ஊழல் முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பிரியங்கா காந்தி கூறினார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில்,’ இந்த ஆட்சியின் கீழ் நீட் என்பது சீட்(ஏமாற்றுவது) போல் தெரிகிறது. மோடி ஆட்சியில் நீட் தேர்வுத்தாள் ஊழல் தனித்துவமானது அல்ல. மோடியின் கண்காணிப்பின் கீழ், தேர்வுகளின் புனிதத்தன்மை வழக்கமான அச்சுறுத்தலுக்கு உள்ளாகி, கேள்வித்தாள் கசிவுகள் வழக்கமாகி வருகிறது. பா.ஜ ஆட்சியின் கீழ் உத்தரப்பிரதேசத்தில் இதுவரை 40க்கும் மேற்பட்ட கேள்வித்தாள்கள் வெளியாகி உள்ளன.
குஜராத் கேள்வித்தாள் கசிவின் தலைநகராக உருவெடுத்துள்ளது. அங்கிருந்து நாடு முழுவதும் கசிவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மத்தியப் பிரதேசம் நிச்சயமாக மாபெரும் வியாபம் ஊழலுக்குப் பெயர் பெற்றது. போட்டித் தேர்வுகள் மற்றும் ஆட்சேர்ப்புகளுக்கு இதுபோன்ற ஒவ்வொரு இடையூறும் ஆயிரக்கணக்கானவர்களை கொந்தளிக்க வைக்கிறது. ஏனெனில் லட்சக்கணக்கான இளம் ஆர்வலர்கள் இந்த அரசு தேர்வுகளுக்கு அயராது தயாராகிறார்கள். எனவே இளைஞர்கள் மத்தியில் தனது அரசியல் நற்பெயரைப் பாதுகாக்க மூன்றில் ஒரு பங்கு பிரதமரின் வற்புறுத்தலின் மற்றொரு எடுத்துக்காட்டு இந்த விளக்கங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸின் ஊடக மற்றும் விளம்பரத் துறைத் தலைவர் பவன் கேரா கூறுகையில், ‘நீட் ஊழல் என்பது மபியில் நடந்த தேர்வு வாரிய ஊழல் போல் வியாபம் 2.0. கல்வி அமைச்சர் பிரதானின் விளக்கம் வெட்கக்கேடானது. அது 24 லட்சம் மாணவர்களின் காயங்களில் உப்பு தேய்ப்பது போன்றது. பிரதமர் மோடி எப்போதுமே வாய்மூடி பார்வையாளராக இருக்க முடியாது. 24 லட்சம் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கும்போது அவர் ஏன் அமைதியாக இருக்கிறார்?. கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டு 580 பிளஸ் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் முழு முடிவையும் தேசிய தேர்வு முகமை வெளியிட வேண்டும்.

மோடி அரசு முழு தேர்வு செயல்முறையும் வெளிப்படையானது என்று கூறுகிறது. நீட் தேர்வெழுதுவதற்காக மாணவர்கள் தங்கள் இடத்திலிருந்து வெகுதூரம் பயணம் செய்தனர். இது அவர்களை ஏமாற்றும் செயல். கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டுக்கான நீட் மதிப்பெண்களுடன் விடைத்தாள் வெளியிட வேண்டும். அதிக மதிப்பெண் பெற்ற மையங்களின் வீடியோக்களை வெளியிட வேண்டும். லட்சக்கணக்கான இளம் மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பு அடிப்படையில் நடக்கும் விசாரணை மட்டுமே தீர்வாக இருக்கும்’ என்று பவன் கேரா வலியுறுத்தினார்.

* ராஜஸ்தானில் போராட்டம்; போலீசார் தடியடி
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட் தேர்வு பயிற்சி மையங்கள் அமைந்துள்ளன. நாடு முழுவதும் இருந்து ஏராளமான மாணவர்கள் அங்கு தங்கி நீட் பயிற்சி பெற்று வருகிறார்கள். இந்த ஆண்டு மட்டும் நீட் தேர்வு பயிற்சி பெற்ற 26 மாணவர்கள் தற்ெகாலை செய்துள்ளனர். இந்த நிலையில் நீட் வினாத்தாள் வெளியான தகவல் அறிந்து அங்கு காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவு மற்றும் ஏராளமான மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

The post நீட் தேர்வு அப்பட்டமான மோசடி பிரதமர் மோடி அமைதியாக இருப்பது ஏன்? வினாத்தாள் கசியவில்லை என்றால் பீகாரில் 13 பேர் கைது ஏன்? குஜராத் கோத்ராவில் ரூ.12 கோடி பரிவர்த்தனை ஏன்? காங்கிரஸ் கட்சி சரமாரி கேள்வி appeared first on Dinakaran.

Tags :
× RELATED பெங்களூரு கட்டட விபத்து – உயிரிழப்பு 7 ஆக உயர்வு