×

தெள்ளார் அருகே நிலத்தகராறில் விவசாயி கொலை வழக்கில் தாய், மகனுக்கு ஆயுள் சிறை: ஆரணி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

ஆரணி, மார்ச் 27: தெள்ளார் அருகே நிலத்தகராறில் விவசாயியை கொன்ற வழக்கில் தாய், மகனுக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து ஆரணி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் அருகே உள்ள கொண்டையாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் குப்பன்(55). இவரது தம்பி மாரி(41). இவர்கள் இருவருக்கும் அதே கிராமத்தில் சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இதனால், இருவரும் விவசாயம் செய்து வந்துள்ளனர். மேலும், இருவருக்கும் நிலம் சம்பந்தமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாரி இறந்துவிட்டார். அதன்பின்னர், மாரியின் நிலத்தை அவரது மனைவி ராணி(64), மகன் முருகன்(41), ஆகிய இருவரும் சேர்ந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளனர். இதனால், இருதரப்பினருக்கும் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் இருந்து நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவது சம்மந்தமாக குப்பன் அவரது தம்பியின் குடும்பத்திற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 18.02.2010 அன்று அதிகாலை குப்பன் அவரது நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு சென்றார். அப்போது, அங்கிருந்த ராணி அவரது மகன் முருகன் ஆகிய இருவரும் சேர்ந்து குப்பனிடம் கிணற்றில் தண்ணீர் பாய்ச்சவிடாமல் தகராறு செய்துள்ளனர். இதில், இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த முருகன் அவரது தாய் ராணி ஆகிய இருவரும் சேர்ந்து குப்பனை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். தொடர்ந்து, அவர்கள் வைத்திருந்த கத்தியால் அவரது கழுத்தில் வெட்டி கொலை செய்தனர்.

தொடர்ந்து, சந்தேகம் வராமல் இருக்க அருகில் உள்ள விவாசய கிணற்றில் சடலத்தை வீசிவிட்டு சென்றனர். தகவலறிந்து வந்த தெள்ளார் போலீசார் கிணற்றில் கிடந்த குப்பனில் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குப்பனின் மகள் தேவகன்னிகா(34), தெள்ளார் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து, முருகன், ராணி இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை ஆரணியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு மற்றும் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் மாவட்ட அமர்வு நீதிபதி கே.விஜயா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் தரப்புவாதத்தை அரசு வழக்கறிஞர் ராஜமூர்த்தி வாதிட்டார். அப்போது, இருதரப்பு வாதங்களை கேட்ட மாவட்ட அமர்வு நீதிபதி விஜயா விசாரித்து, விவசாயி குப்பனை கட்டையால் அடித்து, கத்தியால்வெட்டி கொலை செய்து கிணற்றில் வீசிய குற்றத்திற்காக இவருக்கும் ஆயுள் சிறை தண்டனை மற்றும் கொலையை மறைத்த குற்றத்திற்காக மேலும் 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை, தலா ₹2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இதைதொடர்ந்து, போலீசார் இருவரையும் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post தெள்ளார் அருகே நிலத்தகராறில் விவசாயி கொலை வழக்கில் தாய், மகனுக்கு ஆயுள் சிறை: ஆரணி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Telar ,Arani Additional District Sessions Court ,Arani ,Thiruvannamalai District ,Vandavasi ,Tellar ,Dinakaran ,
× RELATED ஆரணி நகரில் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த காளைமாடு