×

மூடுமந்திரமாக உள்ள மோடியின் ‘நட்பு’: ஆத்ம நிர்பாரா? அதானி நிர்பாரா? 2014ம் ஆண்டு அதானி சொத்து மதிப்பு ரூ.41,890 கோடி; தற்போது அதானி சொத்து மதிப்பு ரூ.8,45,000 கோடி; 10 ஆண்டுகளில் அதானி குழுமத்தின் அபார வளர்ச்சி; திட்டங்கள் கைமாற மாற்றப்பட்ட சட்ட விதிகள்

ஒரு சிலரின் நலனுக்காக மட்டுமே ஒன்றிய அரசு இயங்குகிறதா என்ற கேள்வியை முன்வைக்காதவர்கள் இல்லை. அவ்வாறு பலன் பெறுவோர் பட்டியலில் எப்போதும் முன்னணியில் இருப்பவர் கவுதம் அதானி தான். ஒன்றிய பாஜ அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து திரும்பத் திரும்ப ஒரு விஷயத்தை கூறிக் கொண்டே வருகிறது. அதுதான் ‘ஆத்ம நிர்பார் பாரத்’ எனப்படும் ‘தற்சார்பு இந்தியா’. பிற நாடுகளை சார்ந்திராமல் இந்தியாவிலேயே அனைத்தையும் உற்பத்தி செய்ய வேண்டும் என்பதே இதன் நோக்கம் என இதற்கு விளக்கம் அளித்தார் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

ஆனால், இந்தியா தன்னை சார்ந்திருப்பதை விட அதானியை சார்ந்திருப்பதே அதிகம் என்பதை நிரூபிக்கும் வகையில், அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கிறார் அதானி. 2014ம் ஆண்டில் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜ ஆட்சி அமைந்ததில் இருந்து இது வரை அதானியின் சொத்து மதிப்பு பன்மடங்கு அதிகரித்து விட்டது. அந்த அளவுக்கு வங்கிக் கடனாகட்டும்… தொழில் வாய்ப்புகளாகட்டும்… அனைத்தும் அதானிக்கே தாரை வார்த்து வருகிறது ஒன்றிய பாஜ அரசு. அதுவும், முன் அனுபவம் இல்லாத துறைகளில் கூட விதிகளை மீறி பெரிய திட்டங்கள் ஒப்படைக்கப்பட்டு விட்டது ஆதாரத்துடன் வெளியாகியுள்ளது. சிஏஜி அறிக்கையும் இதனை அம்பலப்படுத்தியிருந்தது.

சமீபத்தில் கூட, அதானி குழுமத்தின் அங்கமான ‘அதானி டிபென்ஸ் அண்ட்ஏரோஸ்பேஸ்’ நிறுவனம், உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் 500 ஏக்கரில் தெற்காசியாவின் மிகப்பெரிய ஆயுத உற்பத்தி ஆலையை ரூ.3,000 கோடி முதலீட்டில் தொடங்கியுள்ளது. அங்கு ஏவுகணை மற்றும் வெடிமருந்து உற்பத்தி ஆலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆலை துவக்க நிகழ்ச்சியில் பேசிய உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், ‘‘பிரதமர் நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியா (ஆத்மநிர்பார் பாரத்) திட்டத்தின் கீழ் இந்த ஆலை துவங்கப்பட்டுள்ளது. இங்குஉற்பத்தி செய்யப்படும் ஏவுகணைகள், வெடிமருந்துகள் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும்’’ என்றார். யோகியின் இந்த பேச்சு மூலம், ‘ஆத்ம நிர்பார் பாரத்’ என்பது ‘அதானி நிர்பார் பாரத்’ ஆகவே மாறி விட்டது என்பதை தெள்ளத் தெளிவாக விளக்குகிறது.

மோடிக்கும் அதானிக்கும் இடையிலான உறவு இன்று நேற்றல்ல… குஜராத் முதல்வராக 2001ல் மோடி பதவியேற்றபோதே தொடங்கி விட்டது. கோத்ரா சம்பவத்துக்கு பிறகு, மோடிக்கு மிகவும் ஆதரவாக இருந்தவர் அதானிதான் என தகவல்கள் வெளியாகின.அவ்வளவு ஏன்? நாட்டின் பிரதமராக பதவியேற்கும்முன்பு கூட, அகமதாபாத்துக்கும் டெல்லிக்கும் இடையே அடிக்கடி சென்று வர மோடி பயன்படுத்தியது அதானியின் ஜெட் விமானம் தான். 2014 நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் முழுக்க முழுக்க இந்த ஜெட் விமானத்தையும், அதானி நிறுவனத்தின் 2 ஹெலிகாப்டர்களையும் தான் மோடி பயன்படுத்தினார். இது ஒரு புறம் பெரிய சர்ச்சையாகவும், அதானி நிறுவனத்துக்கு மோடியின் மூலம் கிடைத்த பிரமாண்ட விளம்பரமும் ஆகி விட்டது.

எதிர்க்கட்சிகள் இது குறித்து கேள்வி எழுப்பியபோதும், மழுப்பலான பதில்கள்தான் பாஜவிடம் இருந்து வந்தன. பிரதமரான பிறகு, குஜராத்தில் மட்டுமே முடங்கிக் கிடந்த அதானியை, நாடு முழுமைக்குமான ஒரு வர்த்தக புள்ளியாக மாற்றினார் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. இதனால்தான், 2014ல் மோடி பிரதமரான பிறகு, அதானியின் வளர்ச்சி நாலுகால் பாய்ச்சலில் சென்றது. அதாவது, 2014 ம் ஆண்டு ரூ.41,890 கோடியாக இருந்த அதானியின் சொத்து மதிப்பு தற்போது ரூ.8.45 லட்சம் கோடியாகியுள்ளது. அதானியின் இந்த அசுர வளர்ச்சிக்குப் பின்னணியில் மோடி தான் இருக்கிறார் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், முக்கியத் திட்டங்கள் அனைத்தும் அதானியிடமே ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இதில், கடைசியாகச் சேர்ந்துள்ளதுதான் உத்தர பிரதேசத்தில் துவக்கப்பட்டுள்ள ஏவுகணை மற்றும் வெடிமருந்து உற்பத்தி ஆலை.

2014ம் ஆண்டு மோடி தலைமையிலான ஒன்றிய பாஜ கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு முதல் 5 ஆண்டு காலத்திலேயே அதானியின் வளர்ச்சிக்கான அடித்தளம் வலுவாக போடப்பட்டு விட்டது. 2018ம் ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபரில் மட்டும் அதாவது இரண்டே மாதங்களில் மோடி அரசு 126 திட்டத்துக்கு டெண்டர் வெளியிட்டது. முன்பு இப்படி குறுகிய காலத்தில் இந்த அளவுக்கு அதிக ஒப்பந்தங்கள் வழங்கப்படவில்லை. இந்த 126 திட்டங்களுக்கான ஒப்பந்தங்களில் 23 நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் அதிகபட்சமாக 25 திட்டங்கள் அதானியிடம் சென்றன. அதிலும் 15 திட்டங்கள்தான் அதானியின் நிறுவனங்கள். மற்றவை ஒன்றிய அரசின் ஐஓசி மற்றும் நிறுவனங்களுடன் சேர்ந்து அதானி குழுமம் எடுத்தவை.

2014க்கு முன்பு: 2014க்கு முன்பு அதானிமோடி தலைமையிலான ஒன்றிய அரசு 2014ல் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அதானியின் வளர்ச்சி இந்த அளவுக்கு இல்லை. 1978ல் மும்பையில் மகேந்திரா பிரதர்ஸ் என்ற நிறுவனத்துக்காக வைரக் கற்களை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டார். பின்னர் அவரது சகோதரர் மகாசுக்பாய் அதானி உதவியுடன் மும்பையில் சில ஆண்டுகள் பிளாஸ்டிக் உற்பத்தியில் ஈடுபட்டார். பின்னர் அதானி எக்ஸ்போர்ட்-ஐ தொடங்கினார். 1988ல் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் நடத்தினார். அப்போது அவரது நிறுவன ஆண்டு வர்த்தகம் ரூ.2 கோடி தான்.

2014க்கு பிறகு வளர்ச்சி: 2014 நவம்பர் 19ம் தேதி ஆஸ்திரேலியாவில் கார்மைக்கேல் நிலக்கரி சுரங்க திட்டத்துக்காக அதானிக்கு பாரத ஸ்டேட் வங்கி அன்றைய மதிப்பில் ரூ.6,000 கோடி (ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்) கடன் வழங்கியது. வெளிநாட்டில் செயல்படுத்தப்படும் திட்டத்துக்காக இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கி இவ்வளவு பெரிய தொகை வழங்கியது இதுவே முதல் முறை. அதன்பிறகும் எஸ்பிஐ சத்தமில்லாமல் ரூ.21,000 கோடியை அதானி நிறுவனத்தின் பல்வேறு திட்டங்களுக்கு வழங்கியது.

பிரதமருடன் பயணம்: 2015ம் ஆண்டு கனடா மற்றும் பிரான்சுக்கு பிரதமருடன் அதானி சென்றார். அதே ஆண்டு, நிலக்கரித்துறை செயலாளர் அனில் ஸ்வரூப் ‘நிலக்கரி வர்த்தக வாய்ப்பை ‘ஒரு வர்த்தகருக்கு’ வழங்க வேண்டும் என மோடியின் செயலாளர் நிர்ப்பந்தித்தார் என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார். பின்னர் அனில் ஸ்வரூப் அந்த துறையில் இருந்து மாற்றப்பட்டதும், நிலக்கரி அமைச்சக கட்டுப்பாட்டில் இயங்கும்கோல் இந்தியா நிறுவனம் சலுகை விலையில் தனியாருக்கு நிலக்கரியை வழங்கியது. இதில் அதானி 10 மில்லியன் டன்களை பெற்றார். இது கோல் இந்தியாவிடம் இருந்த அப்போதைய நிலக்கரி இருப்பில் மூன்றில் ஒரு பகுதி. அதன் பிறகுதான், அதானி நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் அனல் மின் நிலைய உற்பத்தி நிறுவனமாக மாறியது.

அபராதத்தை தள்ளுபடி செய்ய புது விதி: முந்த்ரா மேம்பாட்டு திட்டத்தை அதானி குழுமம் ஏற்றிருந்தது. இதில் சுற்றுச்சூழல் விதிகளை மீறியதாக அதானி குழுமத்துக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2013ல் ரூ.200 கோடி அபராதம் விதித்தது. ஆனால், மோடி அரசு வந்ததும் 2015ல் புதிய சுற்றுச்சூழல் ஆய்வு நடத்துவதாக காரணம் காட்டி, அபராதத்தை நிறுத்தி வைத்தது. 2017ல் புதிய விதிகள் கொண்டுவரப்பட்டு, அபராதம் தள்ளுபடி செய்யப்பட்டது.

அதானிக்காக அதிகார துஷ்பிரயோகம்: 2015ம் ஆண்டு பிரதமர் மோடி வங்கதேசம் சென்றார். அங்கு அதானி பவர் மற்றும் ரிலையன்ஸ் பவர் ஆகியவை மின் உற்பத்தி திட்டத்துக்காக வங்கதேச மின்சார மேம்பாட்டு வாரியத்துடன் தனித்தனியாக ஒப்பந்தம் செய்தன. பிறகு அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜார்க்கண்டில் கோட்டா அனல் மின் நிலையம் அமைத்து, வங்க தேச மின்சார மேம்பாட்டு வாரியத்துக்காக மின் உற்பத்தி செய்ய அதானி ஒப்பந்தம் செய்தார். அதற்கான நிலம் கையகப்படுத்தும் பகுதியில் வசித்த ஜார்க்கண்ட் மக்களை போலீசார் மற்றும் அதிகாரிகள் உதவியுடன் அப்போதைய பாஜ அரசு பலவந்தமாக அகற்றியது. மேலும், இதற்காக ஒன்றிய அரசு சட்டத்திருத்தமும் மேற்கொண்டது.

அதானி நிறுவனம் மூலம் நிலக்கரி இறக்குமதி: 2017ம் ஆண்டு இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடும், மின் தட்டுப்பாடும் ஏற்பட்டது. அப்போது, வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்தது. அப்போது இந்தியாவில் உள்ள விலையை விட 10 மடங்கு அதிக விலைக்கு நிலக்கரி இறக்குமதி ஒப்பந்தத்தையும் அதானி குழுமத்திடமே ஒப்படைத்தது.

விமான நிலைய பராமரிப்பு உரிமை: 2019: விமான நிலையம் நிர்வகிப்பதற்கு எந்த முன் அனுபவமும் அதானி குழுமத்துக்கு இல்லை. ஆனால், நிதி ஆயோக் மற்றும் வெளி விவகார துறை அதிகாரிகள் ஆட்சேபத்தையும் மீறி அகமதாபாத், லக்னோ, திருவனந்தபுரம், மங்களூர், ஜெய்பூர், கவுஹாத்தி விமான நிலை பராமரிப்பு, நிர்வாகப் பொறுப்பு அதானி குழுமத்திடம் வழங்கப்பட்டது.

2021: மும்பை விமான நிலையத்தை பராமரிக்கும் பொறுப்பை ஜிவிகே குழுமத்திடம் இருந்து அதானி நிறுவனம் கைப்பற்றியது. இதற்காக ஜிவிகே குழுமத்தில் 75 சதவீத பங்குகளை அதானி நிறுவனம் வாங்கியது.
வெளிநாட்டு திட்டத்திலும் அதானிக்கு பரிந்து பேசிய மோடி அரசு: 2021: கொழும்புவில் இலங்கை துறைமுகத்தில் கிழக்கு கன்டெய்னர் முனையத்தை அதானி நிறுவனம் அமைத்து வருகிறது. இந்த திட்டத்தை அதானிக்கு வழங்க ஒன்றிய பாஜ அரசுதான் அழுத்தம் தந்ததாக இலங்கை நாடாளுமன்ற ஆவணங்களிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை இலங்கை அரசு அதிகாரிகள், தொழிற்சங்க தலைவர்கள் பகிரங்கமாகவே அம்பலப்படுத்தினர். இதே ஆண்டில்தான் அதானி குழுமங்களின் ஆண்டு வர்த்தகம் ரூ.1,78,946 கோடியானது. கொரோனாவிலும் அதானிக்கு லாபம்: கொரோனா ஊரடங்கு காலத்தில் பெரும்பாலான தொழில்கள் முடங்கின. பலர் வேலை இழந்தனர். பல தொழில்துறைகள் மீண்டும் மீள முடியாத அளவுக்குச் சென்று விட்டன. ஆனால், அப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் கூட அதானியின் சொத்து மூன்று மடங்கு உயர்ந்தது.

2022: அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் நிறுவனம் 5ஜி அலைக்கற்றையை ரூ.212 கோடிக்கு ஏலம் எடுத்தது. இந்த நிறுவன டேட்டா மையங்கள் மற்றும் இதர தனது இதர வர்த்தக நிறுவன தேவைகளுக்காக மட்டுமே இந்த ஏலத்தை அதானி குழுமம் எடுத்துள்ளது. 2022 செப்டம்பரில் அதானி குழுமம் அம்புஜா சிமெண்ட்ஸ், ஏசிசி சிமெண்ட் ஆகியவற்றை வாங்கியது.

2022 டிசம்பரில் ஷிண்டே சிவசேனா – பாஜ கூட்டணி அரசு தாராவி மறு சீரமைப்பு திட்டத்தை அதானியிடம் ஒப்படைத்தது. இதற்கு முன்பு துபாயை சேர்ந்த ஒரு நிறுவனம் இதே திட்டத்தை ஏலம் எடுத்திருந்தது. ஆனால், இது ரத்து செய்யப்பட்டு பின்னர் அதானியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

2024: இந்த வரிசையில் கடைசியாக சேர்ந்திருப்பதுதான் அதானி குழுமத்தின் அங்கமான ‘அதானி டிபென்ஸ் அண்ட்ஏரோஸ்பேஸ்’ நிறுவனம் கான்பூரில் அமைத்துள்ள ஆயுத உற்பத்தி ஆலை. நாட்டின் உட்கட்டமைப்பு, நிலக்கரி, மின்சாரம், பாதுகாப்பு துறை வரை அத்தனை திட்டங்களையும் மோடி அரசு அதானிக்கே தாரை வார்ப்பதன் நோக்கம் என்ன? பின்னணியில் உள்ள மர்மம் என்ன என்ற கேள்வி, பத்தாண்டுகள் கடந்தும் மர்மமாக நீடிக்கிறது. தனிநபருக்காக அதிகார துஷ்பிரயோகம், சட்ட விதிகளை மாற்றுவது வரை அத்தனை பகீரத பிரயத்தனங்களையும் செய்துள்ள மோடி அரசு, மக்கள் நலனுக்காக இவ்வளவு பாடுபட்டிருக்கிறதா என்பது பலரின் கேள்வியாக உள்ளது.

மோடியின் 10 ஆண்டு ஆட்சியில்
அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு
6,541 சதவீதம் வரை உயர்ந்தது
நிறுவனம் பங்கு மதிப்பு
(26, மே, 2014) தற்போதைய
மதிப்பு உயர்வு
அதானி டிரான்ஸ்மிஷன் (எனர்ஜி சொல்யூஷன்ஸ்) ரூ.28.35 ரூ.1,069.6 3,771%
அதானி கிரீன் எனர்ஜி ரூ.29.40 ரூ.1,923 6,541%
அதானி டோட்டல் காஸ் ரூ.73.70 ரூ.1,009.05 1,369%
அதானி என்டர்பிரைஸ்சஸ் ரூ.489.25 ரூ.3,229 660%
அதானி பவர் ரூ.60.90 ரூ.570.15 936%
அதானி போர்ட்ஸ் ரூ.222.65 ரூ.1,329.55 597%
அதானி வில்மர் ரூ.265.2 ரூ.362.15 136%

* அதானி குழும கடன்கள்
அதானி குழும நிறுவனங்களின் கடன் கடந்த 2022-23 நிதியாண்டில் 21 பில்லியன் டாலராக (1,76,400 கோடி) இருந்தது. இது நடப்பு 2023-24 நிதியாண்டு இறுதியில் 4ல் ஒரு பங்கு அதிகரித்து 26 பில்லியன் டாலராக (ரூ.2,18,400 கோடி) அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் வரி, வட்டிக்கு முந்தைய லாபம் 9.5 பில்லியன் டாலராக (ரூ.79,800 கோடி) இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் கடன் சுமை இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது.

* விமான நிலையங்கள்
1. சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையம், மும்பை.
2. சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம், அகமதாபாத்.
3. சவுதாரி சரண்சிங் சர்வதேச விமான நிலையம், லக்னோ.
4. மங்களூர் சர்வதேச விமான நிலையம்.
5. கவுஹாத்தி, லோக்பிரியா கோபிநாத் போர்டோலோய் சர்வதேச விமான நிலையம்.
6. திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம்.

* அதானி துறைமுகங்கள்
1. கங்காவரம் துறைமுகம், விசாகபட்டினம்.
2. காரைக்கால் துறைமுகம், புதுச்சேரி.
3. கிருஷ்ணாபுரம் துறைமுகம், கிருஷ்ணபட்டினம், ஆந்திரா
4. முந்த்ரா துறைமுகம், குஜராத்
5. துனா டெர்மினல், குஜராத்.
6. தகேஜ் துறைமுகம், குஜராத்.
7. ஹஜீரா துறைமுகம், குஜராத்.
8. மர்மகோவா துறைமுகம், கோவா.
9. விழிஞம் துறைமுகம்,கேரளா.
10. காட்டுப்பள்ளி துறைமுகம், தமிழ்நாடு.
11. எண்ணூர் துறைமுகம், தமிழ்நாடு.
12. டாம்ரா துறைமுகம், ஒடிசா.
13. டிகி துறைமுகம், ராய்காட், மகாராஷ்டிரா.

* சிஏஜி அம்பலப்படுத்திய
பாரத் மாலா முறைகேடுகள்
அனுபவம் இல்லாதபோதும் அதானிக்கு கைமாறியபாரத்மாலா திட்டங்கள் தகுதியும், முன் அனுபவமும் இல்லாதபோதும் அதானியிடம் பாரத்மாலா திட்டங்கள் ஒப்படைக்கப்பட்டது பற்றி சிஏஜி அறிக்கை கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தது. இந்த திட்டத்தில் தகுதியும் முன் அனுபவமும் இல்லாதபோதும் அதானி டிரான்ஸ்போர்ட் தலைமையிலான நிறுவனங்களின் கூட்டமைப்பில் உள்ள சூர்யபேட் கம்மன் ரோடு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு தெலங்கானாவில் உள்ள சூர்யபேட் கம்மன் இடையிலான 4 வழி தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது. மேலும் பாரத்மாலா திட்டப் பணிகளுக்கு விண்ணப்பித்த நிறுவனங்களின் கூட்டமைப்பில் அதானி நிறுவனம் வைத்துள்ள பங்கு 74 சதவீதம். நெடுஞ்சாலை பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் அந்த துறையில் குறைந்தது 6 ஆண்டாவது முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். ஆனால், இந்த அடிப்படை விதியை கூட பூர்த்தி செய்யாத, நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட சாலை பணியில் அனுபவம் பெறாத அதானி நிறுவனம்தான் இந்த கூட்டமைப்புக்கு தலைமை ஏற்றுள்ளது கேலிக்கூத்தாக அமைந்து விட்டது.

* சர்வம் அதானி மயம்
முன் அனுபவம், தகுதி பார்க்காது அனைத்து துறைகளிலும் விதிகளை மீறி ஒப்பந்தங்களை அதானிக்கு மோடி அரசு தாரை வார்த்ததால், நம் அன்றாட தேவைகள் ஏதோ ஒன்றுக்கு கூட அதானியை சார்ந்திருக்கக் கூடிய அளவுக்கு அதானியே எங்கும் நிறைந்திருக்கிறார். மின்சாரத்துக்கான நிலக்கரி தொடங்கி சமையல் எரிவாயு வரை எல்லாமே அதானி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதாவது, இந்தோனேஷியா, ஆஸ்திரேலியாவில் இருந்து அதானி துறைமுகம் மூலமாகத்தான் நிலக்கரி இந்தியாவுக்கு வருகிறது. அதனைக் கொண்டு அனல் மின் நிலையங்களில் உருவாக்கப்படும் மின்சாரம் வீடுகள், தொழிற்சாலைகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது.

சமையல் எண்ணெய், சமையல் காஸ், செய்தி நிறுவனங்கள், வீடு கட்டுவதற்கான சிமெண்ட், கழிவுநீர் சுத்திரிப்பு என எல்லாமே அதானி வசம்தான். வெளிநாடு போக வேண்டுமானால் கூட, அதானி நிர்வாகத்தில் உள்ள விமான நிலையத்துக்கு செல்ல வேண்டும். இவ்வளவு ஏன்? சாலைகள், துறைமுகங்கள், டேட்டா சென்டர்கள் என எல்லாவற்றிலும் அதானியே வியாபித்திருக்கிறார். அந்த அளவுக்கு மோடியால் அதானியின் வளர்ச்சி அபரிமிதமாக ஆகியிருக்கிறது. இதனால்தான் பங்குகள் மதிப்பு சரிவு, முறைகேடு புகார்கள், கடன் சுமை என எவ்வளவு இருந்தாலும், சொத்து மதிப்பு ரூ.8.45 லட்சம் கோடியாக உயர்ந்து உலகின் பெரிய பணக்காரர்களில் 12 வது இடத்தை பிடித்திருக்கிறார் அதானி. இந்திய அளவில் முதலிடத்தில் அம்பானியும், 2வது இடத்தில் அதானியும் உள்ளனர்.

* முறைகேடுகள் அம்பலமாகியும் காப்பாற்றும் ஒன்றிய அரசு
ரூ.80 லட்சம் வரி ஏய்ப்பு தொடர்பாக அதானி குழுமங்களில் ஒன்றான அதானி என்டர்பிரைசஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் ராஜேஷ் அதானியை 2010 பிப்ரவரி 27ம் தேதி சிபிஐ கைது செய்தது. 2017 ஆகஸ்டில், அதானி குழுமம் பல கோடி ரூபாயை வெளிநாடுகளில் பதுக்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து தென்கொரியா , துபாய் வழியாக பல்வேறு போலி நிறுவனங்கள் மூலம் மொரீஷியசில் உள்ள அதானியின் அண்ணன் வினோத் சாந்திலால் அதானிக்கு சொந்தமாக கருதப்படும் நிறுவனத்தில் அதானி குழுமம் முதலீடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

அதே ஆண்டில் பங்கு பரிவர்த்தனை கட்டுப்பாட்டு அமைப்பான செபியின் அப்போதைய தலைவர் யு.கே.சின்காவுக்கு ரூ.2,323 கோடி பணத்தை சட்டவிரோதமாக பரிவர்த்தனை செய்ததற்கான ஆதாரங்களை சிடியில் பதிவு செய்து அனுப்பியது. இருப்பினும் , இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு செல்லும் வரை அதாவது, 2023 செப்டம்பர் வரை அந்த ஆவணங்களை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகை சீட்டை செபி வழங்கவே இல்லை. இதன்பிறகு உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு, ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், செபி போதுமான விவரங்களை வழங்காததால் பங்கு முறைகேடு குறித்து சரியான முடிவுக்கு வர இயலவில்லை என தெரிவித்தது.

ஆனால், அதற்கு முன்பே, மார்ச் மாதத்துக்கு இந்த முறைகேடு குறித்து செபி விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்ற கெடுவிதிக்கப்பட்டிருந்த நிலையிலும், 6 மாத அவகாசம் கேட்டு ஏப்ரல் 29ம் தேதி செபி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இதுபோல் ஹிண்டன் பர்க் விவகாரத்திலும் செபி தனது விசாரணையை 90 நாட்களில் முடிக்குமாறு கடந்த ஜனவரி 3ம் தேதி உத்தரவு பிறப்பிதிருந்தது. எவ்வளவு இடர்பாடுகள் வந்தாலும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் அதானிக்கு சாதகமாக செயல்பட்டது மோடி அரசின் ‘அதானி சார்பு’ தன்மையை பிரதிபலிப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டுகின்றனர்.

The post மூடுமந்திரமாக உள்ள மோடியின் ‘நட்பு’: ஆத்ம நிர்பாரா? அதானி நிர்பாரா? 2014ம் ஆண்டு அதானி சொத்து மதிப்பு ரூ.41,890 கோடி; தற்போது அதானி சொத்து மதிப்பு ரூ.8,45,000 கோடி; 10 ஆண்டுகளில் அதானி குழுமத்தின் அபார வளர்ச்சி; திட்டங்கள் கைமாற மாற்றப்பட்ட சட்ட விதிகள் appeared first on Dinakaran.

Tags : Modi's' ,Adani ,Adani Group ,Union State ,Gautam Adani ,Bahia ,Dinakaran ,
× RELATED அதானி நிறுவன மோசடி குறித்த செபி...