×

வெள்ள நிவாரண கடனுதவி திட்டம் ரூ.100 கோடி கடன் தொகை வழங்கப்படும் வரை நீட்டிப்பு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: வெள்ள நிவாரண கடனுதவித் திட்டம் ரூ.100 கோடி கடன் தொகை வழங்கப்படும் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில் நிறுவனங்கள், தங்கள் வணிகத்தை மீண்டும் புதுப்பிக்க தேவையான மூலதனச் செலவு மற்றும் நடைமுறை மூலதனம் போன்ற அத்தியாவசிய செலவுகளுக்கு நிதியுதவி அளித்திட, “குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வெள்ள நிவாரண கடனுதவித் திட்டம்” என்ற சிறப்புத் திட்டம் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ், 6 மாவட்டங்களில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன பயனாளிகள் பயன்பெறும் வகையில் மொத்தம் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு, 6 மாவட்டங்களில் இதுவரை 2,000 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.51.26 கோடி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதலில் கடந்த ஜனவரி 31ம் தேதி வரை திட்டமிடப்பட்ட கடன் வழங்கலுக்கான காலஅளவு இலக்கு தொகையான ரூ.100 கோடி கடன் தொகை வழங்கப்படும் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post வெள்ள நிவாரண கடனுதவி திட்டம் ரூ.100 கோடி கடன் தொகை வழங்கப்படும் வரை நீட்டிப்பு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Chennai ,Chief Minister ,M.K.Stalin ,Thiruvallur ,Kanchipuram ,Chengalpattu ,Tirunelveli ,Thoothukudi ,Dinakaran ,
× RELATED மலேசியாவில் வெல்டர், கட்டிட பணிக்கு...