×

தாவரவியல் பூங்கா புல் மைதானம் பராமரிக்கும் பணிகள் தீவிரம்

 

ஊட்டி, மார்ச் 1: ஊட்டிக்கு நாள்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, மரவியல் பூங்கா, தமிழகம் மாளிகை பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா ஆகியவைகள் தயார் செய்வது வழக்கம்.

மேலும், மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழ கண்காட்சி மற்றும் காய்கறி கண்காட்சி ஆகியவை நடத்தப்படுகிறது. இதனை காண வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூங்காவை மேம்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வரும் நிலையில், கோடை சீசனுக்காக தயார் செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. பூங்கா முழுவதிலும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பல வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல், 35 ஆயிரம் தொட்டிகளிலும் பல வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இது தவிர சுற்றுலா பயணிகள் அமரும் வகையிலும், விளையாடும் வகையில் தற்போது பூங்காவில் உள்ள புல் மைதானங்களை தயார் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த இரு மாதங்களாக பனி பொழிவால் பாதிக்கப்பட்ட புல் மைதானம் சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் துவக்கப்பட்டுள்ளது.நாள்தோறும் பூங்காவில் உள்ள சிறிய மற்றும் பெரிய புல் மைதானத்திற்கு ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீர் பாய்ச்சும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், ஓரிரு நாட்களில் புல் மைதானம் பச்சை கம்பளம் விரித்ததுபோல், பச்சை பசேல் என காட்யளிக்க வாய்ப்புள்ளது. அதன்பின், புல் மைதானத்திற்குள் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post தாவரவியல் பூங்கா புல் மைதானம் பராமரிக்கும் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Botanic Garden ,Ooty ,Dinakaran ,
× RELATED கடந்த ஒரு வாரத்திற்கு பின்பு ஊட்டி...