சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், தஞ்சை, புதுக்கோட்டை, திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வடகிழக்கு பருவமழை 49 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 1 முதல் இன்று வரை இயல்பாக 723.6 மி.மீ. மழை பெய்திருக்க வேண்டிய நிலையில் 1078.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், சென்னை உட்பட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபடச்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
அரபிக்கடல் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வரை தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
The post தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.
